headlines

img

ஒரு வாசிப்பை முன்வைத்து… - எஸ்.பிரேமலதா

அடுக்கப்படாமல் கிடந்த புத்தகங்களினூடே
அடங்க மாட்டாமல் துள்ளிக் கொண்டிருந்தது அது
ஒரு மீனைப் போன்று….

அலுப்பூட்டும் அன்றாடங்களின் இடையிடையே,
பெருங்குரலெடுத்து கூவிக் கொண்டிருந்தது
இடையறாது…
தூக்கி, அரவணைத்து, மடியமர்த்தி, பாலூட்டும் வரை 
ஓயாது அரற்றிக் கொண்டிருக்கும் 
கைக்குழந்தையைப் போன்று…

இனம் புரியா உணர்வொன்றின் உந்துதலில்
கையிலெடுத்துப் பிரித்த நொடியில்,  
செவுல்களினூடாக புறப்பட்ட சூடான அதன் மூச்சுக் காற்று
கதகதப்பாக்கியது பனிசூழ் இரவின் குளுமையை...
உறைந்த கைகளின் விரலிடுக்கின் வழி
நழுவித் தரையில் வீழ்ந்து, 
ஆனந்தமாய் நீந்திக் கொண்டிருந்த அதிலிருந்து
வெடித்துத் தெறித்த குதூகலமான சிரிப்பொலியின்
மீதேறிப் பறந்து கொண்டிருக்கிறேன் 
அகண்ட பிரபஞ்சத்தின் திசைகளற்ற பெருவெளியில்…
மீனின் செதில்களோடும், காற்றடைத்த சிரிப்பொலியோடும்.

;