ஆடிப்பாடி பள்ளிசெல்லும்
அழகுச் செல்லமே !—என்
அறிவுச் செல்லமே-கடல்
அலையைப்போல முயற்சிசெய்து
கற்க வேண்டுமே.
தேடித்தேடி நூல்கள்பல
கற்க வேண்டுமே—அமுதம்
பருக வேண்டுமே.
தென்பொதினித் தென்றல்போல
அலைய வேண்டுமே - ஆர்வம்
வளர வேண்டுமே.
பனையைப்போல உயரநல்ல
பழக்கம் வேண்டுமே. பிறர்க்கும்
உதவ வேண்டுமே.
நினைவினிக்க நொங்கைப்போலக்
குழைய வேண்டுமே - நட்பில்
இழைய வேண்டுமே.
சாதிமதம் பாராமல்
வாழ வேண்டுமே - சமத்துவம்
காண வேண்டுமே.
மோதிவரும் காற்றைப்பாரு
வேற்றுமை உண்டா ?—உன்
மனதில் கொள்ளடா.
நல்லகல்விக் கூடங்களே
நமக்குப் பாசறை—அறிவைச்
சொட்டும் தேனடை.
வில்லைப்போல வளைந்தபடி
விளையாட வேண்டும். உடலில்
வீரமும் வேண்டும்.
நாட்டுநலம் காட்டுநலம்
பேணும் ஆசையே- நெஞ்சில்
ஏற்றும் மேன்மையே
வீட்டுநலம் ஊரின்நலம்
உங்கள் கையிலே- கண்ணே
உணர்ந்து வாழ்கவே!