தமிழ் அறிவோம்
அன்பு மாணவச் செல்வங்களே வணக்கம்.
முதலில் உங்களுக்கு ஒரு செய்தியை மீண்டும்
நினைவூட்டுகிறேன். எப்போதும் நான் முன்பு முதல் பாடத்தில் குறிப்பிட்ட குறில் நெடில் அறிவதற்காகப் பசுவை வைத்துக்
கண்டுபிடித்த பயிற்சியை மறக்கக்கூடாது என்பதை வலியுறுத்துகிறேன்.
சென்ற பாடத்தில் அசை பிரிக்கக் கற்றுக்கொண்டோம்.இந்தப் பாடத்தில் அசைகளை இணைத்து வாய்பாடு கூறுதலைப் பார்க்கப்போகிறோம்.ஒரு சீரில் -சொல்லில் பிரித்த அசைகளை
நேர் நேர்- தேமா
நிரை நேர்- புளிமா
நிரைநிரை-கருவிளம்
நேர்நிரை- கூவிளம்
என்று எழுதவேண்டும்.நான் சொன்ன தேமா, புளிமா,
கருவிளம்,கூவிளம் என்பதையே அசை பிரித்துப் பாருங்கள்.
தே/மா-நேர்நேர்
புளி/மா-நிரைநேர்
கரு/விளம்-நிரைநிரை
கூவிளம்-நேர் நிரை
என்று வருகிறது அல்லவா? அதனால் பெயர் குழப்ப
மின்றி எழுதிவிடலாம்.இப்படி ஈரசைச் சீராய் வருவதை மாச்சீர் என்றும்,விளச்சீர் என்றும் குறிப்பார்கள்.
அடுத்து சில சீர்களில் மூன்று அசைகள் வரும்.எடுத்துக்
காட்டாக "எழுத்தெல்லாம்" இதை அசை பிரித்தால் எழுத்/
தெல்/லாம் நிரை நேர் நேர் எனவரும். குறள் வெண்பாவி
லான திருக்குறளில் ஈரசைச் சீரும்,மூவசைச்சீரும் கடைசி அடியின் கடைசிச் சீர் ஓரசையாகவும் வரும். ஓரசைச் சீர்களை
நேர்-நாள்
நிரை-மலர்
நேர்பு -காசு
நிரைபு- பிறப்பு
என எழுதவேண்டும்.இதனால் ஓரசைச் சீர் நான்காகும்.
மூவசைச்சீர் எட்டாகவரும். தேமா, புளிமா, கருவிளம்,
கூவிளம் என்பவைகளோடு காய்சேர்த்து
தே/மாங்/காய்- நேர் நேர் நேர்
புளி/மாங்/காய்- நிரை நேர் நேர்
கரு/விளங்/காய்-நிரை நிரை நேர்
கூ/விளங்/காய்- நேர் நிரை நேர்
எனவும்,கனிசேர்த்து
தே/மாங்/கனி-நேர் நேர் நிரை
புளி/மாங்/கனி-நிரை நேர் நிரை
கரு/விளங்/கனி-நிரை நிரை நிரை
கூ/விளங்/கனி- நேர் நிரை நிரை
எனவும் வரும். எனவே, மூவசைச் சீர்கள் எட்டாகும்.இதில்
காய்ச்சீர், மாச்சீர், விளச்சீர்கள் மட்டுமே வெண்பாவில் வரும்.
மீதமுள்ளவற்றை அடுத்தப் பாடத்தில் நாலசைச் சீர்களைப்
பற்றி பார்ப்போம்.