headlines

img

எளிய வழியில் இலக்கணம்-2 - கோவி.பால.முருகு

அன்புக் குழந்தைகளே! சென்ற பாடத்தில் எழுத்துகளைப் பார்த்தே குறில் நெடில் எவை என்பதை அறிந்து கொள்வது குறித்துப் பார்த்தோம். இன்றைய பாடத்தில் அலகிடுதலின் அடுத்தக் கட்டத்திற்குச் செல்லப்போகிறோம். குறில் நெடிலை அறிந்த பிறகு சிலவற்றைக் கவனிப்போம். குறில் எழுத்து இருக்கிறதே அதைக் குட்டைப் பையன் அதாவது சிறிய பையன் என்றும்.நெடில் எழுத்தை நெட்டைப் பையன் அதாவது பெரிய பையன் என்றும், ஒற்றெழுத்து அதாவது மெய்யெழுத்து, புள்ளிவைத்த எழுத்தை ஜோக்கர் என்றும் வைத்துக் கொள்வோம். அதாவது விளையாட்டில் ஜோக்கர் என்றால் அவனைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது. நீங்கள் விளையாடும்போது உங்கள் சிறிய தம்பி என்னையும் சேர்த்துக்கொள் என்றால் அவனை ஜோக்கராக சேர்த்துக் கொள்வீர்கள் அல்லவா? அதுபோல புள்ளியெழுத்தைத் தனியே விடக்கூடாது. கணக்கிலும் எண்ணிக்கையில் சேர்க்கக்கூடாது.  சிறிய பையன் தனியே போகமாட்டான். அவனுக்குத் துணை தேவை. பெரிய பையன் தனியே  போவான் அவனுக்குத் துணை தேவை இல்லை. இல்லையா? சரி… கரும்பலகையில் ஒரு திருக்குறளை எழுதுகிறேன்.அதைப்பார்த்து சிறிய பையன் பெரிய பையனைக் கண்டுபிடித்து அவர்கள் தனியே போவார்களா? இல்லை துணையோடு போவார்களா? என்பதைச் சொல்லவேண்டும்.

“அகர  முதல  எழுத்தெல்லாம் ஆதி பகவன்  முதற்றே  உலகு" இக்குறட்பாவில் முதலெழுத்துக் குறிலா? நெடிலா? அதாவது சிறியவனா? பெரியவனா?. “சிறியவன் ஐயா” சிறியவன் தனியே போவானா? “போகமாட்டான் ஐயா”. அப்படியென்றால் பக்கத்தில்  உள்ளவனைத் துணைக்குச் சேர்த்து  ‘அக’ என்ற இரு எழுத்துகளுக்குப் பக்கத்தில் கோடு போட்டுக் கொள்வோம். இவ்விடத்தில்  ஒன்றை மறக்காமல் நினைவில் கொள்ளவேண்டும். அதாவது குறிலுக்குப் பக்கத்தில், குட்டைப் பையனுக்குப் பக்கத்தில் இன்னொரு குறிலோ அதாவது குட்டைப் பையனோ, நெடில் அதாவது நெட்டைப் பையனோ, ஜோக்கர் அதாவது மெய்யெழுத்து புள்ளிவைத்த எழுத்து எதுவாக இருந்தாலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.அதுபோல ஒரு எழுத்தைத்தான் சேர்க்கவேண்டும். அடுத்து இருக்கும் எழுத்து எது? ‘ர’ என்ற எழுத்து அது குறிலா நெடிலா? “குறில் ஐயா”. சிறிய பையன் இல்லையா? அவன் தனியே  போகமாட்டான் என்பதற்காக அடுத்த சொல்லில் உள்ள மு என்ற எழுத்தைச் சேர்க்கலாமா “சேர்க்கலாம் ஐயா”இல்லை சேர்க்கக்கூடாது. இப்போது நான் சொல்வதைக் கவனமாக கேளுங்கள்.       ஒரு சொல்லையும் அடுத்த சொல்லையும் சேர்க்கக்கூடாது.ஒவ்வொரு சொல்லுக்கும் சீர் என்று பெயர். குறள் வெண்பாவில் முதல் அடியில் நான்கு சீரும் அடுத்த அடியில் மூன்று சீரும் இருக்கும். ஒவ்வொரு சொல்லையும் ஒரு வீடு என்று வைத்துக்கொள்வோம். ஒரு வீட்டுப் பையனை இன்னொரு வீட்டுப் பையனோடு சேர்க்கக்கூடாது. எனவே, அவனைத் தனியாக விட்டுவிட்டு அடுத்த வீட்டிற்குச் செல்வோம். 

‘மு’ என்ற எழுத்து குறில் அது தனியே போகாது. எனவே பக்கத்தில் இருக்கிற எழுத்தாகிய ‘த’ என்ற எழுத்தையும் சேர்த்துக் கோடு போட்டுக் கொள்வோம். ‘முத’ என்று இருக்கும். அடுத்து உள்ளது ‘ல’ என்ற எழுத்து. அது குறில் தனியே போகாது என்றாலும் அந்த சொல்லில் வேறு எழுத்து இல்லாததாலும், அடுத்த சொல்லில் உள்ள எழுத்தைச் சேர்க்கக்கூடாது என்பதாலும் அதை அப்படியே விட்டுவிடவேண்டும்.ஒரு சொல்லின் கடைசியில் கோடு கிழிக்கக்கூடாது.   அடுத்துவரும் சொல்லை ‘எழுத்/தெல்/லாம்’ எனப்பிரிக்க வேண்டும். அப்படிப் பிரிப்பதற்கு அசை பிரித்தல் என்று பெயர். ‘எழுத்’என்பதில் குறில் குறில் ஒற்று (அதாவது குட்டைப் பையன் குட்டைப் பையன் ஜோக்கர். ஜோக்கரை தனியே விடக்கூடாது அல்லவா? அதனால் அதையும் சேர்த்துள்ளேன்.) அடுத்து ‘ஆ/தி’ இப்படிப் பிரிக்கவேண்டும் அல்லவா?

ஆ என்பது நெடில் (நெட்டைப் பையன்) அவன் தனியே போவான்.கோடு கிழித்துக் கொள்ளலாம்.அடுத்து ‘தி’ குறில். தனியே போகாது என்றாலும் முன்னே சொன்னபடி அந்த சொல்லின் கடைசி எழுத்தாக இருப்பதாலும், ஒரு சொல்லை அடுத்த சொல்லோடு சேர்க்கக்கூடாது என்பதாலும் அப்படியே விட்டுவிடவேண்டும்.  அடுத்தடுத்த சொற்களையும் அப்படியே பிரிக்க வேண்டும். கடைசி சொல்லைப் பாருங்கள் அதை நான் இரண்டாகப் பிரிக்கவில்லை.காரணம் வெண்பாவின் ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஓரசைச் சீராய்த்தான் இருக்கும். ‘உலகு’ என்பது ஓரசைச்சீர். கடைசியில் இருக்கும்‘கு’ என்ற எழுத்து குற்றியலுகரம். குற்றியலுகரத்தை அலகிடக்கூடாது.எனவே ‘உல’ என்பதை மட்டும் கணக்கில் கொள்ளவேண்டும்.அதுபோல “உல” என்று பிரித்ததின் பக்கத்தில் முன்னே ஒவ்வொரு சீரையும் பிரித்ததுபோலக் கோடுபோடக்கூடாது. அப்படியே விட்டுவிடவேண்டும். இன்று அசை பிரிக்கக் கற்றுக்கொண்டோம். அடுத்த பாடத்தில் வாய்பாடு கூறுதலைப் பற்றிப் பார்ப்போம்.

;