முட்டுவீட்டு வாசங்கூட
மூளைவீட்டுப் போகலியே
அலசிப் போட்ட பீத்துணியும்
அரைபாதி காயலியே
பிஞ்சுக் கால்த்தடங்கள்
பிறை நிலவா கிடக்கையில
வலிதாங்க முடியலியே - நாங்க
வாசலில நடக்கயில
தண்ணிக்குக் குழிதோண்டி - ஏ
தங்கத்தப் பொதச்சிட்டோமே
ஒன்னப் பிரிஞ்சுகூட
ஒருவாரம் பொழச்சுட்டோமே
ஈசல் ஆயுள எம்புள்ளைக்கு
எழுதிவச்ச தாரய்யா
ஏசுபிரானே இழந்ததெங்க
ஏழைவீட்டுத் தேரய்யா
காயம் எத்தனன்னு
கண்ணால பாக்கலியே - நீ
தாய அழைச்ச சத்தம்
தரைக்கு மேல கேக்கலியே
பெசஞ்ச வச்ச சோறுதிங்க - ஏ
பிள்ள வருவானா
மொகமெல்லாம் உதட்டால
முத்தம் தருவானா
காவு குடுத்துப்புட்டு - நா
கஞ்சி உங்கணுமா
கனவ தொலச்சுப்புட்டு
கண்ணு ஒறங்கணுமா
அம்மா கையிரெண்டும்
அசைவத்து நின்னுருச்சே
எந்திர தாமசம்
எம்புள்ள கொன்னுருச்சே
அமைச்சர் கூட்டமெல்லாம்
அஞ்சலியில் நின்னது - ஆனா
அரசாங்கந்தான் சாமி
எம்புள்ளைய கொன்னது