“சிலம்பம்” என்றால் ஒலித்தல் என்று பொருள். இதிலிருந்து வந்தது தான் சிலம்பு. ஆபரணங்களில் ஒலிப்பு த்தன்மை கொண்டது சிலம்பு. மற்றவையெல்லாம் கண்களுக்குரி யவை.சிலம்பு காதுகளுக்கும் உரியது. சிலம்பம் என்கிற தற்காப்புக் கலைக்கும் ஒலித்தல் பொருளில்தான் பெயர் உருவாகியிருக்கும். கோல்களை வீசும்போதும் சுழற்றும்போதும் மற்ற பொருள்களைத் தடுக்கும்போதும் உருவாகும் ஒலி இசையாக மட்டு மின்றி மிரட்சியாகவும் இருக்கும். சிலம்பம் தொடக்கத்திலேயே தற்காப்புக் கலையாக இருந்ததா? கலை யாக இருந்து தற்காப்புக் கலையாக மாற்றப்பட்டதா? சிந்திக்க வேண்டிய கேள்விகள்.
சிலம்பம் எனும் கோல்விளையாட்டு முதலில் கலையாக இருந்திருக்கவே அதிகம் வாய்ப்புள்ளது. ஏனெனில் குட்டையான கோல்களைக்கொண்டு ஆடப்பட்ட ஆட்டம் கோலாட்டம் என்ற பெயரோடு பெண்களிடம் தங்கிவிட்டது. இதிலுள்ள நளினத்தைக் கைவிட்டு ஆணுக்கே உரிய அடக்குமுறை கருவியாக , வீரத்தின் வெளிப்பாடாக கோலாட்டம் மாற்றப்பட்டு சிலம்பம் ஆகியிருக்கலாம். இத்தகைய மரபுவழி வந்த சிலம்பப் பயிற்சியை சென்னை போரூர் அருகே உள்ள வானகரத்தில் நூற்று ஜம்பது மாணவ-மாணவியர் மேற்கொண்டு பொதுவெளியில் நிகழ்த்திக் காட்டி னார்கள்.
சங்கர்பாபு என்கிற நிகழ்த்துக்கலை கலைஞர் சிலம்பாட்டப் பயிற்சியை அளித்திருந்தார். தற்காப்பு கலைக்காக சுழற்றப்பட்ட கோல்கள் ஒருகட்டத்தில் கலைக்காக சுழன்றது. சிலம்பம் என்பது தமிழகத்தின் பாரம்பரியக்கலை. இதனோடு பாரம்பரிய இசைக்கருவியான பறையை இணைத்து அத்துடன் தமிழர்க ளின் அறம்பேசும் திருக்குறளையும் கலந்து கொடுத்தார் சங்கர்பாபு. திருக்குறள் நூலில் பத்துக் குறள்களைத் தெரிவுசெய்து அவற்றின் ஒலிப்போடு பறையிசையும் சேர சிலம்பாட்டம் நிகழ்த்தப்பட்டது.
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு ”
என்று தொடங்கி ,
“ ஊடுதல் காமத்திற்கு
இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்”
என்பதுவரை அந்தக் குறள்கள் இருந்தன. திருக்குறளின் முதல் குறளை யும் இறுதிக்குறளையும் பயன்படுத்தி யிருப்பதன் மூலம் அதன் பாடல்வரிசை, அதிகார வைப்புமுறையை ஏற்றிருப்ப தாகத் தெரிகிறது. அது நிற்க. தெரிவுசெய்யப்பட்ட குறள் வரிசையை இனி காணலாம்.
“கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக”
“ செல்வத்துள் செல்வம்
செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை ”
“தோன்றிற் புகழொடு
தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று”
“ துப்பார்க்குத் துப்பாய
துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை ”
“ தீயினால் சுட்டபுண் உள்ளாறும்
ஆறாதே
நாவினால் சுட்ட வடு”
“ எண்ணென்ப ஏனை
எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு”
“ தொட்டனைத் தூறும்
மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு ”
“ எல்லா விளக்கும் விளக்கல்ல
மாந்தர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு”
என்றெடுக்கப்பட்டுள்ள மற்ற எட்டு குறள்களும் பயிற்சியாளரின் சமூகப் பார்வையையும் அக்கறையையும் காட்டின. இவ்வாறு இடையிடையே குறள்களை எடுத்து முடிச்சுகள் போட்டு வலைபின்னுவது போல பின்னி இசையோடு பறைமுழங்க சிலம்பாட்டம் நடத்தப்பட்டது பார்வையாளர்களை வியப்பிலாழ்த்தியது . இது அவர்களின் கரவொலியில் வெளிப்பட்டது.
திருக்குறள் மட்டுமல்ல மகாகவி பாரதியின் “தேடிச் சோறு நிதம் தின்று ...” என்று தொடங்கும் வாழ்க்கை லட்சியப் பாடலும் பறை இசையுடன் கலந்து சிலம்பாட்டமாகப் பரமாணம் பெற்றது. காலத்தின் தேவைக்கேற்ப நல்ல கருத்துக்களை எதனோடும் கலந்து கோண்டுசேர்க்க வேண்டிய கடமை நம்முன் உள்ளது. அந்தக் கடமை சரியாக செய்யப்படுவதாகவே இந்த சிலம்பாட்ட நிகழ்வு இருந்தது. இன்னும் பல குறள்களையும் பாரதி பாடல்களையும் இந்தக் கலைவடிவில் தருவார்களா என்ற எதிர்பார்ப்பு ஆவலையும் இது ஏற்படுத்தியது.