headlines

img

தவறு செய்தோர் பாரபட்சமின்றி   தண்டிக்கப்பட வேண்டும்....

இணைய வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்ளும் ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. 

சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் பத்ம சேஷாத்திரி பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு ராஜகோபாலன் என்ற ஆசிரியர் பாலியல் ரீதியாகதொல்லை கொடுத்து வந்துள்ளார். மாணவி ஒருவர்அளித்த புகாரைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் சில ஆசிரியர்கள் இதேபோல கீழ்த்தரமாகநடந்து வந்துள்ளனர் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பள்ளியின் சார்பில் உருவாக்கப்பட்ட வாட்சப் குழுவில் ஆசிரியர் ஆபாசவீடியோ பதிவு செய்ததாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆசிரியர் ராஜ கோபாலன் தொடர்ந்து பல்வேறு வகைகளில் அத்துமீறி நடந்து வந்துள்ளார். ஒரு மாணவி அளித்த புகாரைத் தொடர்ந்துமேலும் பல மாணவிகள் புகார் தந்துள்ளனர். 

இந்த அனைத்து புகார்கள் குறித்தும் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த புகார்கள் குறித்து சென்னை மாவட்டகுழந்தைகள் நலக்குழுவும் விசாரணை மேற்கொண்டுள்ளது. ஆனால் இந்த விசாரணைக்குபள்ளி நிர்வாகம் முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்துபள்ளியில் டீன் மற்றும் முதல்வர் நேரில் ஆஜராகசம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த பிரச்சனையை திசைதிருப்ப சிலர் முயல்கின்றனர். சாதிய ரீதியாக இந்த பள்ளியை குறி வைப்பதாக கூறுகின்றனர். குழந்தைகளுக்கு எதிராககுற்றமிழைத்த யாராக இருந்தாலும் எவ்வித பாரபட்சமுமில்லாமல் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்என்பதே அனைவரது கோரிக்கையும் ஆகும். கோவிட் பெருந்தொற்று காரணமாக பள்ளிக்கூடங்கள், கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டுக் கிடக்கின்றன. மாணவ, மாணவியரின் கல்வி தடைபட்டுவிடக்கூடாது என்பதற்காக சில பள்ளிகளில்இணைய வழி வகுப்புகள் நடைபெறுகின்றன. பெரும்பாலான கிராமப்புற மாணவ, மாணவியருக்கு இந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. எனினும் இணையவழி வகுப்புகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ள இன்றைய சூழலில் ஒருசிலர் தங்களது பாலியல் வக்கிரங்களுக்கு இந்தவகுப்புகளை பயன்படுத்திக் கொள்வது மன்னிக்கமுடியாத குற்றமாகும்.பத்ம சேஷாத்திரி பள்ளி விவகாரம் வெளிவந்த நிலையில் முதல்வர் பிறப்பித்துள்ள உத்தரவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இத்தகைய வகுப்புகளை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு பள்ளி நிர்வாகங்களுக்கு உண்டு. ஆன்லைன் வகுப்புகள் பதிவு செய்யப்பட வேண்டும், பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்,  ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மூலம் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றுஅரசு கூறியுள்ளது பொருத்தமானது. இனி எதிர்காலத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில்  உரிய ஏற்பாடுகள் செய்யப்படுவதும், தவறிழைத்தவர்கள் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவதும் அவசியமாகும்.

;