headlines

img

கூட்டு முயற்சிக்கு வேட்டு வைப்பது யார்?

வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை எட்ட அனைத்து மாநிலங்களில் கூட்டு முயற்சி யும், ஒத்துழைப்பும் அவசியம். வளர்ச்சியடைந்த மாநிலங்கள், வளர்ச்சியடைந்த பாரதம் என்பதை உருவாக்குவோம் என நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

நிதி ஆயோக் கூட்டத்தை தமிழகம், கேரளம் உள்ளிட்ட 9 மாநில முதல்வர்கள் புறக்கணித்துளள்னர். இவர்களில் பாஜக கூட்டணி ஆளும் புதுவை யூனியன் பிரதேச முதல்வரும் ஒருவர். பாஜக கூட்டணியில் உள்ள பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமாரும், சட்டமன்றக் கூட்டத்தை காரணம் காட்டி நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. 

ஒன்றிய பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணித்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களின் பெயர்களைக் கூட இடம்பெறச் செய்யாமல் தவிர்த்துள்ளது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்றாடம் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

இந்நிலையில் “மாநிலங்களின் கூட்டு முயற்சி அவசியம்” என்று பிரதமர் உபதேசம் செய்கிறார். அவர் பட்டியலிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கை, புதிய குற்றவியல் சட்டங்கள், விஸ்வகர்மா யோஜனா  போன்றவை அநீதி நிறைந்ததாக மாறியுள்ளன. புதிய கல்விக் கொள்கை என்ற பெயரிலும், விஸ்வகர்மா யோஜனா என்ற பெயரிலும் அனைவருக்கும் கல்வியை மறுத்து குலக்கல்வியை புகுத்துகிறது ஒன்றிய அரசு. குற்றவியல் திருத்தச் சட்டம் குறித்து மாநிலங்களின் கருத்தை கேட்டு பெறவில்லை.  நாடாளுமன்றத்திலும் முறையாக விவாதம் நடத்தப்படவில்லை. ஒன்றிய அரசு தொடர்ந்து மாநில அரசின் உரிமைகளை மறுத்து வருகிறது. 

இயற்கை பேரிடர் நிதி, மற்றும் வரிப் பங்கீட்டில் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுகின்றன. ஒன்றிய அரசிடம் அனைத்து அதிகாரங்களும் கொஞ்சம் கொஞ்சமாக குவிக்கப்படுகின்றன. தேசிய திட்டக்குழு கலைக்கப்பட்டு நிதி ஆயோக் உருவாக்கப்பட்டிருப்பது கூட இதன் ஒரு பகுதி தான். கூட்டாட்சித் தத்துவத்தை குழிதோண்டி புதைக்கும் நரேந்திர மோடி அரசு மறுபுறத்தில் மாநிலங்களின் ஒத்துழைப்பை கோருவது வெட்கக் கேடானது. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற மேற்குவங்க முதல்வர் முழுமையாக பேசுவதற்குக் கூட அனுமதிக்கப்படவில்லை. 

இந்நிலையில் ஒருங்கிணைந்த வளர்ச்சி என்றும், மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டு மென்றும் பிரதமர் கோருகிற வாய்ப்பந்தல் நிழல் தராது.  அனைத்து மாநிலங்களும் சமமாக நடத்தப் பட வேண்டும். பாஜக தன்னுடைய சித்தாந்த சித்துவிளையாட்டை நிறுத்திக் கொள்வது நல்லது.