மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி ஆட்சியின் கீழ் நீண்டகாலம் இருந்த திரிபுரா மாநிலம் இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்களுக்கே ஒரு முன்னுதாரணமாக விளங்கியது. பழங்குடி மக்களுக்கும், இதர பகுதி மக்களுக்கும் இடையே ஒற்றுமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நல்லிணக்கத்தின் அடையாளமாக விளங்கிய திரிபுராவில் பாஜக தன்னுடைய குறுகிய மதவெறி மற்றும் குறுக்கு வழி சதிகள்மூலம் ஆட்சியை பிடித்த பிறகு அந்த மாநிலம்தொடர்ந்து வன்முறைக்காடாக மாற்றப்பட்டு விட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் தலைவர்களும், ஊழியர்களும், உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் தொடர்ந்துதாக்கப்படுகின்றனர். கட்சி மற்றும் தொழிற்சங்கஅலுவலகங்கள் இயங்க முடியவில்லை. ஒன்றியபாஜக தலைமையும் இந்த வன்முறை வெறியாட்டத்திற்கு உறுதுணையாக இருந்து வருகிறது.இந்நிலையில் திரிபுரா மாநில முன்னாள் முதல்வரும், கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான மாணிக் சர்க்கார் தன்பூரில் கூட்டத்திற்கு சென்றபோது அவரையே கூட்டத்திற்கு செல்லவிடாமல் தடுத்து பாஜகவினர் அட்டூழியம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து உதய்பூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய பேரணியிலும் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த பின்னணியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், தோழர்கள் தாக்கப்ப ட்டுள்ளனர். கட்சி அலுவலகங்களும், தேசர்கதா நாளிதழ் அலுவலகமும், 24 நியூஸ் சமூக ஊடக அலுவலகமும்கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. திரிபுரா மாநில மக்களின் மகத்தான தலைவரான தோழர் தசரத் தேவ் சிலை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.தேசர்கதா அலுவலகத்தின் சில தளங்கள்தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. கட்சியின் மாநில தலைமை அலுவலகமும் வன்முறையாளர்களின் தாக்குதலிலிந்து தப்பவில்லை. கட்சிஅலுவலகத்தில் பாதுகாப்புக்காக நின்றிருந்த மத்திய பாதுகாப்புப் படை திட்டமிட்டு விலக்கிக்கொள்ளப்பட்டு மாநில போலீசாரின் முன்னிலையிலேயே பாஜகவினர் வன்முறைத் தாண்டவம் ஆடியுள்ளனர்.திரிபுராவில் சட்டப்படி அமைக்கப்பட்ட ஒரு மாநில அரசு இயங்குகிறதா என்ற கேள்வி எழுகிறது. ஊடக அலுவலகங்களின் மீது தாக்குதல்நடத்தியவர்களில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்களின் முழு ஆதரவுடன் இந்த அட்டூழியங்கள் நடக்கின்றன.
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்குகெட்டு விட்டதாகவும், பாஜகவினர் தாக்கப்படுவதாகவும் கூறுபவர்கள் திரிபுராவில் குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளை கூட மறுத்து வன்முறைவெறியாட்டத்தை நாளும் நடத்துகின்றனர். ஜனநாயகத்தின் மீதான இந்த தாக்குதலை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஊடகத்தினரும் கண்டிக்க முன்வர வேண்டும். அதிகாரத்தின் துணை கொண்டுஎன்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை அனுமதித்தால் ஜனநாயகம் சவக்குழிக்கு அனுப்பப்பட்டு விடும்.