headlines

img

எத்தனை வேஷமிட்டாலும்...

ஒரு பொய்யைச் சொல்லுதல், அதை திரும்பத் திரும்பச் சொல்லுதல், பிறகு அதையே உண்மை என்று சாதித்தல் என்கிற நடைமுறை பாசிஸ்டுகளின் கைவந்த கலை. ஹிட்லரின் வழியில், முசோலினியின் முறையில் இந்திய ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் அதையே கடைப்பிடிக்கின்றன. 

தமிழ்நாட்டின் ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவிக்கு ஆளுநர் வேலையைத் தவிர கூடுதல் பொறுப்பாக ஆர்எஸ்எஸ்-பாஜக  பரிவாரங்களின் கொள்கை பரப்பும் வேலை யை கொடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. அதனால் தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய பல்வேறு சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் கடத்துவது, மாநிலத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவது ஆகிய வற்றையே  அவரது முழுநேர வேலையாக செய்து கொண்டிருக்கிறார். 

நாளொரு மேடையும் பொழுதொரு பிரச்சார முமாக தீவிரமாக செயல்படும் ஆர்.என்.ரவி  சனிக்கிழமையன்று நடைபெற்ற ஒரு விழாவில்  சனாதனம் என்பது எல்லோரும் சமம் என்றும் இந்த உலகத்தில் வாழும் அனைவரும் ஒன்றே என்றும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று  கூறும் சனாதனம் மனிதர்களிடையே தீண்டாமையை எப்படி வலியுறுத்தும்? என்று பேசியுள்ளார். 

சனாதனம் என்பதற்கு பல்வேறு வகையான உரைகளை புதிது புதிதாக ஆர்எஸ்எஸ் - பாஜக தலைவர்களும் பிரமுகர்களும் எழுதத்  துவங்கியுள்ளனர். ஆர்.என்.ரவியும் தன் பங்குக்கு எழுதி வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே சனாதனம் சமதர்மம் என்கிற நிலைக்கு கொண்டு செல்கிறார். அப்படியெனில் சமதர்மம் என்றே கூறிவிடலாமே. அதற்கு ஏன் அவருக்கு தயக்கம்?

கடந்த சில மாதங்களுக்கு முன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும் இந்துமதத்தில் தீண்டாமை என்பதே இல்லை என்று குருநானக் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும்போது கூறியிருந்தார். அதையே ஆளுநர் எதிரொலித்திருக்கிறார் சனாதனம் என்பது வர்ணாசிரம அதர்மம்தான் என்பதை நன்கறிந்த மக்கள் உள்ள மாநிலம் என்பதை உணர்ந்ததால்  தான் அந்த எதிர்நிலைக் கருத்தை மறைப்பதற் காக புதிய புதிய போர்வைகளைக் கொண்டு மூட  முயற்சிக்கிறார்கள். எத்தனை புதிய முயற்சிகள் செய்தாலும் சனாதனம் என்பது  நால்வர்ண  வர்ணாசிரமம்தான் என்பதை  மாற்றமுடியாது.  பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வை, சாதிய அடுக்கு களை கொண்ட சனாதன, வைதீக இந்துமதத்தை எத்தனை வெள்ளை அடித்தாலும் அதன் கறுப்பை மாற்ற முடியாது. 

இந்துத்துவா என்பது ஒரு வாழ்க்கை முறை என்று சில பத்தாண்டுகளுக்கு முன்பு இவர்கள்  கூறி வந்தார்கள். தற்போது அது மதவெறி கூட்டத்தின் நடைமுறை என்பதை மக்கள் புரிந்து கொண்டதால் இப்போது சனாதனம் எனும் மாரீச வேஷம் போடுகிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் இதற்கு ஏமாறமாட்டார்கள் என்பதை ஆளுநர் ஆர்.என்.ரவி புரிந்து கொள்ள வேண்டும்.

;