games

img

விளையாட்டு செய்திகள்

இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமான தமிழ்நாடு!

அரசு செய்திக் குறிப்பில் பெருமிதம்

சென்னை, மே 29 - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பல துறைகள் இந்திய அளவில் முதன்மையாகவும், முன்னணியாகவும் திகழ்கின்றன. அந்த வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் சிறப்பான நல்ல பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதன் பயனாக, விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டை, இந்தியாவின் பிற மாநிலங்கள் மட்டுமின்றி, உலகெங்கிலும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் நாடுகள் உற்று நோக்குவதுடன் பாராட்டு தெரிவித்து வருவதாக தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:

பதக்கம் குவிக்கும் தமிழகம்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் புதிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது அர்ப்பணிப்பு உணர்வால், விளையாட்டுத் துறையில் வியக்கத் தகுந்த முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். அவரால் சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் பங்கேற்கும் வீரர்களின் பட்டியல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதன் மூலம் பதக்கங்களை வாரிக் குவித்துத் தமிழ்நாட்டுக்கு பெருமைகளைத் தேடித் தந்துள்ளார்.

மைதானங்கள் நவீன மயம்

முதலமைச்சர் இத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, கடந்த மூன்று ஆண்டுகளில் இத்துறைக்கு 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வழங்கியுள்ளார். இதன் பயனாக, சென்னையில் உலகத் தரத்திற்கு இணையான நேரு விளையாட்டரங்கம், நேரு உள் விளையாட்டரங்கம், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம், டென்னிஸ் விளையாட்டு அரங்கம், நீச்சல் குளங்கள் ஆகியவற்றில் நவீன வசதிகள் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நவீன விளையாட்டு அரங்கம் மற்றும் மாவட்ட விளையாட்டு அரங்கங்கள் அனைத்திலும் 30 கோடி ரூபாய் செலவில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிறு விளையாட்டு அரங்கம்

தமிழ்நாட்டிலுள்ள அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் முதலமைச்சரின் சிறு விளையாட்டரங்கங்கள் அமைக்கும் அறிவிப்பை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் வெளியிட்டார். முதற்கட்டமாக, 10 சட்டமன்றத் தொகுதிகளில் தடகளம், கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, கபடி போன்ற பிரபலமான 5 முக்கிய விளையாட்டுகளுக்கான மைதான வசதிகளுடன் கூடிய முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் தலா 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.

விளையாட்டு நகரம்

பன்னாட்டு அளவிலும் பாராட்டுகளைப் பெற்றுத் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள இந்த விளையாட்டுத் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்ற வகையில், சென்னையில் உலகத் தரத்திலான விளையாட்டு நகரம் ஒன்றை அமைத்திடத் திட்டமிடப்பட்டு, அதற்குரிய பூர்வாங்கப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் இத்தகைய மகத்தான எண்ணற்ற விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்களின் மூலம் தமிழ்நாடு இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக உருவாகி வருகிறது.”