games

img

ஆந்திர கிரிக்கெட் சங்கத்தில் அரசியல் தலையீடு?

இந்திய அணியின் நட்சத்திர டெஸ்ட் வீரரும், ரஞ்சிக் கோப்பையில் ஆந்திர கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான ஹனுமா விஹாரி, ஆந்திர கிரிக்கெட் சங்கத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக மறைமுகமாக குற்றம் சாட்டியுள்ளார்.

 ரஞ்சிக்கோப்பையின்  3-ஆவது காலிறுதி ஆட்டத்தில் ஆந்திரா -  மத்தியப்பிரதேச அணிகள் மோதின. டெஸ்ட் போட்டி என்றாலும்,  பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மத்தியப்பிரதேசம் 4ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து அரையிறுதிக்கு முன்னேறியது. போட்டி முடிந்த பின்பு ஆந்திர கேப்டன் ஹனுமா விஹாரி, ”பெங்கால் அணிக்கு எதிரான முதல் போட்டியின்போது நான் 17ஆவது வீரர் ஒருவரை நோக்கி சத்தம் போட்டேன்.

அவர் அரசியல்வாதியான தனது தந்தையிடம் புகார் அளிக்க, பதிலுக்கு அவரதுதந்தை என் மீது நடவடிக்கை எடுக்குமாறு சங்கத்திடம் கேட்டுள்ளார். அவர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் நான் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டேன். இனிமேல் ஆந்திர அணிக்காக விளையாட மாட்டேன்” எனக் கூறினார்.

 ஹனுமா விஹாரி கூறும் 17-ஆவது வீரர் பிருத்விராஜ் என்பது உறுதியாகியுள்ள நிலையில், பிருத்விராஜின் தந்தை ஒய்எஸ்ஆர், தெலுங்கு தேசம் ஆகிய இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒன்றில் அங்கம் வகிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.  

இந்நிலையில், ஹனுமா விஹாரி மீது வீரர்கள் பல்வேறு குற்றச்சாட்டு கூறியதன் காரணமாகவே அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கினோம் என ஆந்திர கிரிக்கெட் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.  பொதுவாக விளையாட்டு நிகழ்வுகளில் அரசியல் தலையீடு இருந்தால், சம்மந்தப்பட்ட கிரிக்கெட் சங்கம் சஸ்பெண்ட் செய்யப்படும் என்ற நிலையில், ஹனுமா விஹாரியின் குற்றச்சாட்டு நிரூபணமானால் ஆந்திர கிரிக்கெட் சங்கமும் சஸ்பெண்ட் உத்தரவை பெற வாய்ப்புள்ளது.

ஆந்திர கிரிக்கெட் சங்கத் தலைவராக அரவிந்தோ பார்மா நிறுவனத்தின் இயக்குநரும், விளம்பரதாரருமான சரத் சந்திர ரெட்டி உள்ளார். இவர் மீது தில்லி கலால் கொள்கை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.