ஏதோ ஒன்றை வீராவேசமாக செய்து விடுவது. அதற்குப்பிறகு அதன் விளைவுகள் தெரிய வந்ததும் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பிப்பது.
இதுதான் மோடி அரசின் ஒரே கொள்கை அணுகுமுறையாக இருந்து வருகிறது என்று சில முறை குறிப்பிட்டு இருக்கிறேன். அதன் அடுத்த அத்தியாயம் துவங்க இருக்கிறது.
NRC (National Register of Citizens) எனப்படும் குடிமக்களின் தேசிய ஆவணம் ஒன்று அஸ்ஸாமில் தயாராகி வருவது நமக்கெல்லாம் தெரியும். அதன்படி பங்களாதேஷ் உருவான தினத்தில் இருந்து இந்தியாவுக்கு 'வந்தேறிய' மக்களை ஆவணப்படுத்தும் முயற்சி வெகு நாட்களாக நடந்து வருகிறது. இதன் வேர் ஐம்பதுகளிலேயே துவங்கி விட்டது என்றாலும் 2013ல் உச்சநீதிமன்றம் மேற்பார்வை செய்யத்துவங்கியதும் இந்தப்பணி சூடு பிடித்தது.
இது உச்சநீதிமன்றத்தால் கண்காணிக்கப்படுகிறது எனினும் பாஜகவுக்கு மனதுக்கு மிகவும் உகந்த விஷயம் இது என்று சொல்லத்தேவையில்லை. இந்தியாவில் பிறந்து சட்டபூர்வமாக வாழும் முஸ்லிம்களுக்கே எப்படியெல்லாம் தொல்லை கொடுப்பது என்று பல்வேறு திட்டங்கள் தீட்டி வரும் வேளையில் பங்களாதேஷில் இருந்து சட்டவிரோதமாக முஸ்லிம்கள் இந்தியாவில் குடியேறுகிறார்கள் என்றால், அதனை கண்டுபிடிக்க வேண்டும் என்றால், அல்வா தின்ன அலவன்ஸ் கொடுத்தது போல் அல்லவா இருக்கும்.
அந்த அல்வா கிடைத்ததும் உற்சாகமடையத் துவங்கினார்கள். வந்தேறிகளை ஒவ்வொருவராக கண்டெடுத்து நாடு கடத்துவோம் என்று அமித் ஷா மேடைக்கு மேடை முழங்கினார். அகதிகளை ‘கரையான்கள்’ என்று வர்ணித்து இழிவுபடுத்தினார். அதிலும் குறிப்பாக முஸ்லீம் அகதிகள் அப்படி வர்ணிக்கப்பட்டனர். இந்து அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை கொடுப்போம் என்றும் பேசினார்.
இந்த பட்டியல் தயாரிப்பிலேயே பல்வேறு குளறுபடிகள் வந்தன. கார்கில் போரில் பங்கெடுத்த ஒரு ராணுவ வீரர் இந்த பங்களாதேஷி பட்டியலில் சேர்க்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இப்படி ஒன்றன் பின் ஒன்றாக சில பல சர்ச்சைகளுடன் நடந்து வந்து இந்தப் பணி இப்போது முடிவடைந்திருக்கிறது. ஏறக்குறைய 40 லட்சம் பேர் இந்தியரல்லாதவர்கள் என்று அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்பட்டியல் அதிகாரபூர்வமாக ஆகஸ்ட் 31ம் தேதி வெளியிடப்படும்.
இப்போதுதான் அந்தக்கேள்வி எழுகிறது. இந்தப்பட்டியலில் இடம்பெறும் குடிமக்கள் அல்லாதவர்கள் என்ன ஆவார்கள்? அவர்களை பங்களாதேஷ் ஏற்றுக்கொள்ளுமா என்று விசாரியுங்கள் என்று நீதிமன்றம் சிலமுறை கேட்டு விட்டது. ஆனால் அவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பங்களாதேஷும் பலமுறை சொல்லி விட்டது. இதற்கு முன்பு கூட தங்கள் குடிமக்கள் எல்லை தாண்டி இந்தியா நுழைந்ததாக பங்களாதேஷ் அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்டதே இல்லை.
உச்சகட்டமாக, சமீபத்தில் டாக்கா பயணித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ‘NRC என்பது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம், அதற்கும் பங்களாதேஷுக்கும் சம்பந்தம் இல்லை,’ என்று கூறி இருக்கிறார். அப்படி என்றால் அந்த நாற்பது லட்சம் பேர் பங்களாதேஷ் போக மாட்டார்களா என்ற கேள்வி எழுகிறது. இந்தக்குழப்பம் போதாதென்று பங்களாதேஷின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மொமென் ஒரு பேட்டியில் பேசுகையில் NRC பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று ஜெய்சங்கர் தன்னிடம் உறுதி அளித்து விட்டதாக தெரிவித்திருக்கிறார்.
நிலைமை இப்படி இருக்கையில் 31 ஆகஸ்ட் தேதிக்குப் பிறகு இந்த 40 லட்சம் பேர் நிலைமை என்ன ஆகும்? அவர்கள் எங்கே போவார்கள், என்ற கேள்வி எழுகிறது. நிற்க, நீ இந்தியனல்ல என்று ஒருவரை சொல்லி விட்டால் உடனே அவர் நாடு கடத்தப்பட மாட்டார். தான் இந்தியன்தான் என்று நிரூபிக்கும் சட்ட உரிமை அவருக்கு இருக்கிறது. முதலில் அந்நிய குடிமக்கள் தீர்ப்பாயத்தில் அவர்கள் அப்பீல் செய்யலாம். அங்கேயும் அவர்கள் இந்தியர்கள் இல்லை என்று ஆகி விட்டால் அடுத்ததாக அவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம்.
இங்கே இரண்டு கேள்விகள்:
1) இந்த நாற்பது லட்சத்தில் முக்கால்வாசி பேர் பரம ஏழைகள். அவர்களில் யாருக்கும் இந்த சட்ட வழிமுறைகள் பற்றி தெரிய வாய்ப்பில்லை. தெரிந்தாலும் அதற்கான நிதிவசதி இருக்காது. நிதி இருந்தாலும் இந்த வழக்குகள் மற்றும் அப்பீல்கள் நடந்து முடிய மாதம் அல்லது வருடக்கணக்கில் ஆகலாம். அதுவரை அவர்கள் நிலை என்னவாகும்? அவர்களுக்கு வேலை ஏதாவது இருந்தால் அது தொடர வாய்ப்பிருக்கிறதா? குடிமக்கள் இல்லை என்பதால் அவர்களுக்கு ரேஷன், வங்கிக்கணக்கு போன்ற சேவைகள் மறுக்கப்படுமா? போன்ற கேள்விகள் வருகின்றன.
2) அப்படியே வழக்குகள் நடந்து மொத்த பட்டியலில் பாதி பேர் வெற்றி பெறுகின்றனர் என்றே வைத்துக்கொள்வோம். மீதி பேர் நிலைமை என்ன? இந்தியக் குடிமக்கள் இல்லை என்றவுடன் அவர்கள் சொந்த நாட்டுக்கு போக வேண்டும்தானே? சரி, சொந்த நாடு என்பது எது? பங்களாதேஷ் இப்போதே நழுவிக்கொண்டு விட்டது. அப்புறம் வேறு எந்த நாட்டுக்கு அனுப்புவோம்? அல்லது அவர்களை சிறையில் அடைப்போமா? எத்தனை வருடங்களுக்கு? இருபது லட்சம் பேர் இருக்கும் வசதி கொண்ட சிறையை எப்போது கட்ட ஆரம்பிக்கப் போகிறோம்?
நீண்ட கால கேள்விகள் இப்படி இருக்க உடனடி சிக்கல்களும் உள்ளன: இதனால் அஸ்ஸாமில் எப்பேர்ப்பட்ட சிக்கல்கள் தோன்றும், கலவரங்கள் ஏதாவது நிகழுமா? பட்டியலில் இடம்பெற்றவர்கள் தினவாழ்வில் எப்பேர்ப்பட்ட சமூகப் பாகுபாடுகளை எதிர்கொள்ளப் போகிறார்கள்?
இதுதான் பிரச்சினை. ஒரு மாபெரும் மானுடவியல் சிக்கலை (humanitarian crisis) இந்தியா எதிர்நோக்கி இருக்கிறது. ஆனால், இது எதையுமே அரசு யோசித்ததாக தெரியவில்லை. அமித் ஷாவும் வீராவேசமாக மேடைகளில் முழங்கி முடித்து விட்டார். இது பற்றிய தெளிவான திட்ட வடிவம் அரசிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. இல்லை என்றால் எதனை வைத்து மேடைகளில் முழங்கினார்கள் என்று கேட்கத் தோன்றுகிறது.
தேசிய குடிமக்கள் ஆவணம் (National Register of Citizens) என்பது ஒரு பைசாவுக்கு பிரயோசனமில்லாத திட்டம் என்பது மிகத்தெளிவாக தெரிந்து விட்ட விஷயம். பாஜகவும் இந்துத்துவர்களும் பயமுறுத்திய மாதிரி எல்லாம் மாபெரும் சட்டவிரோத குடியேற்றம் பங்களாதேஷில் இருந்து நடக்கவில்லை என்று நிரூபணமாகி இருக்கிறது. கிட்டத்தட்ட 1,200 கோடி செலவுக்குப் பின் இந்த அரிய உண்மையை நாடு கண்டு தெளிந்திருக்கிறது. என்ன, அஸ்ஸாம் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவுக்கு நன்கு பயன்பட்டது என்பது மட்டும்தான் இதன் சேவை.
இருப்பினும் மீசையில் மண் ஒட்டவில்லை போல இந்த கணக்கெடுப்பு நடந்த பொழுது சட்டவிரோத வந்தேறிகள் எல்லாம் வேறு மாநிலங்களுக்கு போய் தப்பி விட்டிருக்கிறார்கள் என்று அவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இந்துத்துவர்களின் மற்ற கதைகள் போலவே இதுவும் அசிங்கமாக பல்லிளிக்கிறது. அதாவது கோடிக்கணக்கான மக்கள் கடந்த பத்து ஆண்டுகளில் அஸ்ஸாமில் இருந்து இடம் பெயர்ந்து வேறு மாநிலங்களுக்கு போய் விட்டார்கள் என்கிறார்கள். ஆனால் அதற்கான எந்த ஆதாரமும் இவர்களிடம் இல்லை. NRCயிலும் அப்படி எதுவும் தெரிய வரவில்லை.
இவர்களுக்கு என்றைக்கு ஆதாரம் எல்லாம் தேவைப்பட்டிருக்கிறது? ஒரே ஒரு வாட்சப் தகவல் மட்டும் போதுமே? ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டி ஆய்வு ரேஞ்சுக்கு அதனை எடுத்துக் கொண்டு பரப்பி விட வேண்டியதுதானே?
நிற்க, இங்கே பிரச்சினை அதுவல்ல. இந்த NRC கணக்கெடுப்பை தேசம் முழுக்க இதர மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப் போவதாக அமித் ஷா அறிவித்து இருக்கிறார். ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் தாங்கள் இந்தியாவின் குடிமக்கள்தான் என்று நிரூபிக்க கியூவில் நிற்க வேண்டும்.
அஸ்ஸாமிலேயே கொடும் நாசம் விளைவித்த திட்டம் இது. கார்கில் போரில் சேவை செய்து மெடல் வாங்கிய ராணுவ வீரர் எல்லாம் ‘வந்தேறி’ என்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தது. (மற்ற நேரங்களில் ராணுவத்துக்காக உருகி மருகும் இந்துத்துவர்கள் அப்போது வாயே திறக்கவில்லை என்பது தனி விஷயம்.) கணக்கற்ற ஏழை மக்களை தெருத்தெருவாக அலைய விட்ட திட்டம் இது. இல்லாத வந்தேறிகளை ‘கரையான்கள்’ என்று வர்ணித்து தேர்தலில் அறுவடை செய்ய அமித் ஷாவுக்கு உதவியது தவிர எந்த ஆணியையும் பிடுங்காத திட்டம் இது.
ஆனால் அந்த ஒரு பயன் பொதுமல்லவா? தேசம் முழுக்க ‘கரையான்களை’ கண்டெடுத்து தேர்தல் அறுவடை செய்ய இதை விட உகந்த விஷயம் கிடைக்குமா? இப்போதைக்கு அஸ்ஸாமிலேயே NRC என்ன ஆகும் என்பது தெரியவில்லை. அங்கே லிஸ்டில் விடுபட்டுப்போன 19 லட்சம் பேர் கதி என்ன, அவர்கள் எங்கே ‘அனுப்பப்படுவார்கள்’ என்பதில் தெளிவில்லை. அவர்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்று பங்களாதேஷ் தெளிவாக சொல்லி விட்டது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயஷங்கரும் அந்த உறுதியை அவர்களுக்கு கொடுத்து விட்டு வந்து விட்டார். அப்புறம் என்ன செய்யப்போகிறார்கள்? 19 லட்சம் பேர் தங்கக் கூடிய சிறையை கட்டப் போகிறார்களா? சரி, இப்போது தேசம் முழுவதும் நடத்தும் சர்வேயில் ஒரு இரண்டு கோடிப்பேர் லிஸ்டில் குடிமக்கள் அல்லர் என்று தெரிய வந்தால் அவர்களை எங்கே அனுப்புவார்கள்?
அஸ்ஸாமில் மட்டும் இதனை நடத்துவதற்கே 1200 கோடி செலவாகி இருக்கிறது. தேசம் முழுக்க நடத்துவதற்கு எவ்வளவு செலவாகும்? அப்படி செலவு செய்வதன் performance objective என்ன என்று ஷா-விடம் யாராவது கேட்டார்களா? ஜெஎன்யூ கேன்டீனில் மெதுவடை சுடுவதற்கு மானியம் போகிறதே என்று கவலையுறும் இந்துத்துவர்களுக்கு பல்லாயிரக்கணக்கான கோடி வரிப்பணம் NRCயில் கொட்டப்படப் போவது பற்றி சொல்ல எதுவுமில்லை. நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தெருத்தெருவாக அலையப்போகிறார்கள். இந்த டாகுமெண்ட் அந்த டாகுமெண்ட் என்று ஏழைகளின் கணக்கற்ற பணம் வீணாகப் போகிறது. அரசு அதிகாரிகள் எல்லாம் நாக்கை சப்புக்கொட்டிக் கொண்டு அடுத்த லக்சரி பிளாட் எங்கே வாங்கலாம் என்று ரியல் எஸ்டேட் இணையதளங்களை தேடப் போகிறார்கள். மனித வளமும் நேரமும் அர்த்தமற்ற விஷயங்களுக்கு செலவிடப்பட்டு பொருளாதாரம் இன்னமும் கீழே போகப் போகிறது.
சீட் பெல்ட் போட்டுக்கொள்ளுங்கள். இந்துத்துவ இருண்ட காலத்துக்கு போகும் பயணத்தில் வேகம் கூடப்போகிறது.