மக்களைத் திரட்ட முடியாத பாரதிய ஜனதா கட்சியினர், யாராவது மக்களைத் திரட்டியிருந்தால் அந்தக் கூட்டத்தின் புகைப்படத்தை எடுத்து, அதில் மோடி பேசுவதுபோல வடிவமைத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுப் பரப்புவதில் பலே கில்லாடிகள். ஏராளமான உதாரணங்கள் இதற்கு இருக்கின்றன. இதில் லேட்டஸ்ட் சம்பவம், பாஜகவின் பரம எதிரியான கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய கூட்டத்தின் புகைப்படத்தில் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருப்பதுதான்.
மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலையொட்டி கொல்கத்தாவில் நடைபெற்ற பிரதமர் மோடியின் பொதுக்கூட்டம், பாஜகவினரை அவ்வளவு உற்சாகப்படுத்துவதாக அமையவில்லை. அதற்கு சற்று முன்பாக பிப்ரவரி 28 அன்று இடதுமுன்னணி - காங்கிரஸ் - இந்திய மதச்சார்பற்ற முன்னணி ஆகியவை இணைந்த மகா கூட்டணி நடத்திய பிரிகேட் பரேடு மைதான பொதுக்கூட்டத்தில் 10லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். அந்த பிரம்மாண்டமான கூட்டப் படத்தை பாஜக ஐடி விங்கைச் சேர்ந்தவர்கள் எடுத்துக் கொண்டு மோடியின் படத்தை இணைத்து, மோடிக்காக கூடிய கூட்டமென்றும், இந்திய அரசியல் வரலாற்றிலேயே இதுபோன்று கூட்டம் கூடியிருப்பது இதுவே முதல்முறை என்றும், இந்தத் திடலுக்கு வரும் ஐந்து வழிகளிலும் 3 கிலோமீட்டர் தூரம் மக்கள் வெள்ளமெனக் கூடியிருந்தார்கள் என்றும் தீதியின் (மம்தாவின்) ஆட்சிக்கு சவால்விட்ட கூட்டம் இது என்றும், இத்தனைபெரிய கூட்டம் கூடியதே பாஜகவுக்கு வெற்றிதான் என்றும் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் சமூக ஊடக கூலிப்படையினர் இடைவிடாமல் பகிர்ந்து வருகிறார்கள்.
கூலிக்கு மாரடிப்பவர்கள்தான் இப்படிப் பகிர்கிறார்கள் என்றால் பாஜகவின் தமிழக முகநூல் பக்கத்திலும் இதை பதிவிட்டு, “மோடி ஜியையும் அமித்ஷா ஜியையும், இதுவே என் கோட்டை, இங்கே உங்களுக்கு அனுமதி இல்லை எனப் பேசிய மம்தாவின் மமதையை அடக்கிய கூட்டம்; கொட்டமடிக்கும் கோமாளிகளுக்கு சமர்ப்பணம்; ஜெய்ஸ்ரீராம்” என்று முழங்கியிருக்கிறார்கள்.எது எப்படியோ, வங்கத்தில் இந்த பிரம்மாண்டமான கூட்டத்தை கூட்டியதன் மூலம் வெற்றி இடதுசாரிகள் தலைமையிலான அணிக்குத்தான் என்பதை பாஜகவின் சமூக ஊடக கூலியாட்களும் மற்றவர்களும் இந்தப் படத்தை இடைவிடாமல் பகிர்வதன்மூலம் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்!