election2021

img

விவசாய விரோத பாஜக - அதிமுக அணிக்கு பாடம் புகட்டுவீர்... மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றி பெறச் செய்வீர்.... தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்....

சென்னை:
விவசாய விரோத பாஜகவின் சட்டங்களை ஆதரித்துக்கொண்டு விவசாயி வேடம் போடும் எடப்பாடி பழனிசாமியின் அதிமுக ஆட்சியை அகற்றிட விவசாயிகள் பாடுபடவேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  
இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள அறிக்கை:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன்  தலைமையில் 16.3.2021அன்று இணைய வழியாக நடைபெற்றது. நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு.

நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் நாடு தழுவிய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த தேர்தல்முடிவுகளை தீர்மானிப்பதில் விவசாயிகளுக்கு முக்கியமான பங்கிருக்கிறது. கடந்த பத்தாண்டு காலமாக தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருந்த அதிமுகவுடன் பாஜக கூட்டணி சேர்ந்து போட்டியிடுகிறது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகள் அணி சேர்ந்து ஆட்சி மாற்றத்திற்காக களம் கண்டிருக்கிறது. ஆட்சியிலிருந்தவர்கள் எப்படிப்பட்ட ஆட்சியை நடத்தியிருக்கிறார்கள். மக்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டார்களா என்பதை உணர்ந்து வாக்களிக்க வேண்டிய தருணமிது.

மன்னிக்கவே முடியாது
நாடு முழுவதும் விவசாயிகளால் கடும்எதிர்ப்புக்கும், விவசாயிகளின் வீரம்செறிந்த போராட்டத்திற்கும், உயிரிழப்புகளுக்கும் காரணமான வேளாண் விரோத சட்டங்களை ஆதரித்து வாக்களித்தது அதிமுக. அது மட்டுமல்லாமல் அந்த சட்டங்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த முதலமைச்சர் பழனிச்சாமியை மன்னிக்கவே முடியாது. பல லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த நான்கு மாதகாலமாக உயிரை பணயம்வைத்து போராடிக் கொண்டுள்ளனர். 280 க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டக்களத்தில் மரணமடைந்துள்ளனர். இந்திய விவசாயத்தை பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகள் கபளீகரம் செய்யவும், விவசாயிகளிடமிருந்து விவசாயத்தை பறிக்கும் இச்சட்டங்களை தொடர்ந்துஆதரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் மத்திய பாஜக அரசின் விவசாயிகள் விரோதக் கொள்கைகளையும், மக்கள் விரோத நடவடிக்கைகளையும் எவ்வித நிபந்தனையுமின்றி அதிமுக ஆதரித்து வந்துள்ளது. இதற்கு சரியான பாடம் புகட்ட விவசாயிகள் இந்த தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நம்பத்தகுந்ததல்ல
பஞ்சாபில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக ஒரு இடத்தில்கூட வெற்றிபெற விடாமல் மண்ணைக் கவ்வச் செய்துள்ளனர் அம்மாநில விவசாயிகள். அதேபோல் தமிழகத்தில் விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதிமுக - பாஜக கூட்டணியை தோற்கடிக்கவேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.அதுமட்டுமல்லாமல், மின்சார திருத்த மசோதா 2021- ஐ சட்டமாக்குவதற்கான முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. இலவச மின்சாரத்தை பறிக்கும், ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் இம்மசோதவை எதிர்ப்பதற்கு பதிலாக, தமிழகத்தில் இலவச மின்சாரம் தொடரும் என்று முதலமைச்சர் சொல்வது நம்பத்தகுந்தது அல்ல! சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு அதற்கு உட்பட்டுத்தான் நடந்து கொள்ள வேண்டிவரும். எனவே, வேளாண் உற்பத்தியில் முக்கிய பங்குவகிக்கும் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தொடர வேண்டுமானால் அதிமுக - பாஜக கூட்டணி தோற்கடிக்கப்படுவது அவசியம் என்று மாநிலக்குழு கருதுகிறது.

மூர்க்கத்தனமான, விவசாய விரோத அதிமுக அரசு
விவசாயிகளுக்கான பிரதம மந்திரி நிதியுதவி திட்டத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ள மாபெரும் மோசடி குறித்து உண்மைகள் வெளிவரவும், அதே போல்விவசாயக் கடன் தள்ளுபடியில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படவும், ஆட்சி மாற்றம் அவசியம். கரும்பு விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகங்கள் கொடுக்க வேண்டிய சுமார்2000 கோடி ரூபாய் கரும்பு பணப் பாக்கியைபெற்றுத்தர கடுகளவு முயற்சியும் எடுக்காதது, விவசாயிகளின் நில உரிமையைபறிக்கும் வகையில் நிலம் கையகப்படுத்துதல் திருத்தச் சட்டம் 2020 நிறைவேற்றியுள்ளது. மற்றும் எட்டுவழிச்சாலை, உயரழுத்த மின்கோபுரம், பெட்ரோலிய குழாய் பதிப்பு ஆகிய திட்டங்களை மூர்க்கத்தனமாக அமலாக்கியது, விவசாயிகள் மீது அடுக்கடுக்கான பொய் வழக்குகள், அடக்குமுறை, சிறை என விவசாயிகளின் விரோதியாகவே அதிமுக அரசு செயல்பட்டதை மனதில் கொண்டு முடிவெடுக்க வேண்டுமென்று தமிழக விவசாயிகளை கேட்டுக் கொள்கிறோம். எனவே, அதிமுக - பாஜக கூட்டணியை முறியடிக்கும் வல்லமை பொருந்திய திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பது என்று மாநிலக்குழு தீர்மானிக்கிறது.

இடதுசாரிகளின் வெற்றிக்கு...
கடந்த சட்டமன்றத்தில் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் ஒருவரும் இடம்பெறாத நிலை இருந்தது இதனால் விவசாயிகள் மற்றும்உழைக்கும் மக்களின் பிரச்சனைகள் உரிய முறையில் இடம்பெறவில்லை என்பதை அறிவோம். எனவே, இடதுசாரிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் தொகுதிகளில் அவர்கள் அவசியம் வெற்றி பெறும் வகையில் விவசாயிகள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.விவசாயி வேடம் போடும் பழனிசாமியை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்தவும், விவசாயிகள் நலனில் அக்கறை கொண்ட ஒரு மாற்று ஆட்சி திமுக தலைமையில் அமையவும் பாடுபடுவது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தீர்மானிக்கிறது. இந்த முடிவை வெற்றிகரமாக செயலாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபடுவதென்றும், மதச்சார்பின்மைக்கும் - மதவெறி சக்திகளுக்கும் இடையே நடைபெறும் இந்த தேர்தல் போராட்டத்தில் மதநல்லிணக்கம், மக்கள்ஒற்றுமையை பாதுகாக்கும் வகையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற அணிக்குவாக்களிக்குமாறு தமிழக விவசாயிகளுக்கு மாநிலக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

;