election2021

img

மணல் கொள்ளை மாபியாக்கள்...

இந்தத் தேர்தலையொட்டி இப்போது ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. எல்லாக் கருத்துக் கணிப்புகளும் திமுக அணி தான் வெற்றி பெறப்போகிறது என்று தெளிவாக சொல்லிக்கொண்டிருக்கிறது. இதை பார்த்த ஆளுங்கட்சிக்கு வயிற்றெரிச்சல். அவர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள்.

மாலை முரசு தொலைக்காட்சியில் தென்மாவட்டங்களில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று ஒரு செய்தியை ஒளிபரப்பி இருக்கிறார்கள். உடனே அந்தத் தொலைக்காட்சியை இருட்டடிப்புச் செய்துவிட்டார்கள்.தேர்தல் நேரத்தில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கேபிள் டிவி கார்ப்பரேஷனை இப்படிப் பயன்படுத்துகிறார்கள். அராஜக நிலையில் சர்வாதிகாரத்தோடு கையில் அதிகாரம் இருக்கும் காரணத்தால் இவ்வாறு செய்கிறார்கள். இவை எல்லாம் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதியோடு முடியப்போகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை.

பல்லாயிரம் கோடி செலவு செய்து விளம்பரம் கொடுத்துப் பார்த்தீர்கள். ‘ஆகா - ஓகோ’, ‘இந்திரன் - சந்திரன்’ என்று முதலமைச்சர் பழனிசாமியைப் புகழ்ந்து பாராட்டி, மக்களுடைய வரிப் பணமான அரசாங்கப் பணத்தில் விளம்பரம் கொடுத்துப் பார்த்தீர்கள். அரசாங்கப் பணம்என்றால் மக்களின் வரிப்பணம். அதில் எப்படிக் கொடுத்தீர்கள்?பழனிசாமியின் அமைச்சரவையில் - அதிமுகவின் அமைச்சரவையில் இரண்டு விஜயபாஸ்கர் இருக்கிறார்கள். ஒன்று குட்கா விஜயபாஸ்கர். இரண்டு மணல் கொள்ளை விஜயபாஸ்கர். இரண்டு பேரும் இந்தத் தேர்தலில் படுதோல்வி அடையப்போகிறார்கள். டெபாசிட் காணாமல் ஓடப்போகிறார்கள். அதுதான் நடக்கப்போகிறது.

அமராவதி ஆற்றில் சுத்திகரிப்பு செய்யாமல் சாயக்கழிவுகளைக் கலக்கச் செய்பவர்களைக் காப்பாற்றி வருகிறார் இந்த விஜயபாஸ்கர். பசுமைத் தீர்ப்பாயம் விவசாயிகளுக்கு இழப்பீடு தரச் சொல்லி பத்து ஆண்டுகள் ஆகப்போகிறது. சம்பந்தப்பட்டவர்களிடம் கமிஷன் வாங்கிக்கொண்டு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காத அவர்களைக் காப்பாற்றி வருகிறார்.அதேபோல அமராவதி ஆற்றில் தண்ணீர் திருடுபவர்களுக்கு துணையாக இருக்கிறார். யாருக்கும் அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதி மறுத்தாலும், அவரைப்பந்தாடியவர்தான் இந்த மணல் திருட்டு விஜயபாஸ்கர்.

அது மட்டுமா, பல கோடி மணல் கொள்ளை நடக்கிறது. அதை தட்டிக் கேட்டு போராடிய முகிலனை பல்வேறு வழக்குகளைப் போட்டுச் சிறையில் தள்ளி இருக்கிறார்கள். ஆற்று மணல் கொள்ளையை நீதிமன்றம் தடை செய்த நிலையில், எம்-சாண்ட் குவாரிகளை தன்னுடைய உறினர்கள் பெயரில் எடுத்திருக்கிறார். ஏற்கனவே இதை நடத்துபவர்களை மிரட்டிக் கொள்ளை அடிப்பவர்தான் இந்த மணல் கொள்ளை விஜயபாஸ்கர்.

அதேபோல அவருடைய துறை போக்குவரத்துத் துறை. அந்தத் துறையில் ஜி.பி.எஸ். கருவிபொருத்துவது, ஸ்டிக்கர் ஒட்டுவது போன்றவற்றை தனது பினாமி நிறுவனங்களுக்கு மட்டுமேகொடுக்க வேண்டுமென லாரி உரிமையாளர்களை பகிரங்கமாக மிரட்டி இருக்கிறார். பிறகுஅவர்கள் என்னைச் சந்தித்தனர். பின்னர் சட்டரீதியாக அணுகியிருக்கிறார்கள். கரூர் அரசுபேருந்துகளுக்கு ஸ்டாண்ட் கட்டுவதற்கு தனது பினாமிகளுக்கு ஒப்புதல் தருவதைத் தொடர்ந்து பாரம்பரிய பஸ் பாடி கட்டும் உரிமையாளர்கள் இன்றைக்கு குமுறிக்கொண்டிருக்கிறார்கள்.இதற்கெல்லாம் முடிவு கட்டும் நாள் தான், இந்த ஊழல் விஜயபாஸ்கரை ஓட ஓட விரட்டும் நாள்தான், வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி.

                                     ******************

மேற்கு மண்டலத்திற்கு அதிமுக செய்தது துரோகங்கள் மட்டுமே!

மேற்கு மண்டலம் எங்களுடைய மண்டலம் என்று பிதற்றிக் கொண்டு இருக்கிறீர்களே, உங்களால் இந்த மண்டலத்திற்கு கிடைத்திருக்கும் நன்மை என்ன? அதை நீங்கள் பட்டியல் போட முடியுமா?

உங்களால் இந்த மேற்கு மண்டலத்திற்கு கிடைத்திருப்பது எல்லாம் வேதனைகள் - சோதனைகள் - துரோகம் தான். நான் அதையும் வரிசைப்படுத்தி சொல்கிறேன்.ஜி.எஸ்.டி. வரியை ஏற்றுக் கொண்டதன் மூலமாக சிறு, குறு தொழில்களை இந்த மண்டலத்தில் சிதைத்தது முதல் துரோகம்.மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்ததன் மூலமாக இந்த மண்டலத்தின் முக்கியத் தொழிலான வேளாண்மையை சிதைத்தது இரண்டாவது துரோகம்.எட்டு வழி பசுமை சாலை மூலமாக விவசாய நிலங்களை அந்த மக்களிடமிருந்து பறித்து, போராடிய மக்களை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தியது மூன்றாவது துரோகம்.மற்ற மாநிலங்களில் சாலைகளில் குழாய்கள் பதிக்கும் போது, இங்கு மட்டும் விவசாய நிலங்களில் குழாய்களை பதித்து இந்த வட்டாரத்து விவசாயிகளை நிம்மதி இல்லாமல் ஆக்கியது நான்காவது துரோகம்.பொள்ளாச்சியில் இளம்பெண்களைக் கடத்தி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய அதிமுகவினரை காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்களே அது ஐந்தாவது துரோகம்.

இந்தியாவிலேயே தண்ணீருக்கு கட்டணம் வசூலிக்க வீடு வீடாக மீட்டர் பொருத்தி கொண்டிருக்கிறீர்களே அது ஆறாவது துரோகம்.கோவையின் பெருமை மிகு சிறுவாணி தண்ணீரை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்த்ததுஏழாவது துரோகம்.
தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகள் என யாருக்கும் முன்னறிவிப்பு செய்யாமல் கொள்ளை அடிப்பதற்காகவே அவசரகதியில் அவிநாசி சாலையில் பாலம் கட்ட தொடங்கியது எட்டாவது துரோகம்.உறவினர்களுக்கு பினாமிகளுக்கு மட்டுமே டெண்டர் கொடுத்து, மற்ற ஒப்பந்ததாரர்களை தொழில் செய்யவிடாமல் தடுத்து அல்லது மற்ற ஒப்பந்ததாரர்களை தனது உறவினர்களின் கொத்தடிமைகளாக மாற்றியது ஒன்பதாவது துரோகம்.எடப்பாடியில் பழனிசாமி, கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன், தொண்டாமுத்தூரில் வேலுமணி, குமாரபாளையத்தில் தங்கமணி, உடுமலையில் ராதாகிருஷ்ணன், பவானியில் கருப்பண்ணன் என கொங்கு மண்டலத்திற்கு ஏராளமானவர்கள் அதிகாரம் பொருந்திய பதவிக்கு வந்த பிறகும் இந்த மேற்கு மண்டலத்திற்கு எதுவும் செய்யாமல் தங்களது சுயநலத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே இது பத்தாவது துரோகம்.எனவே அப்படிப்பட்ட துரோகத்தை செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த தேர்தலில் நீங்கள் பாடம் புகட்ட தயாராக வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பிரச்சாரக் கூட்டங்களில் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையிலிருந்து....
 

;