election2021

img

தமிழக வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேண்டுகோள்....

நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் மட்டுமல்லாமல், அகில இந்திய அரசியலிலும் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய தேர்தல் என்பதை தமிழக வாக்காளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே, பல மாநிலங்களில் நடைபெற்று வரும் தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடைந்து வருவது நாடறிந்த ஒன்று. தற்போது, தேர்தல் நடைபெறவுள்ள கேரளம், மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரியிலும் பாஜக கூட்டணி மண்ணை கவ்வுவது உறுதியாகியுள்ளதை பல்வேறு கருத்துக் கணிப்புகளும், அரசியல் விமர்சகர்களும் அழுத்தமாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

தோல்வி முகம் கண்டுள்ள பாஜக - அதிமுக கூட்டணியை தமிழகத்திலும் வீழ்த்துவதோடு, தமிழகத்தில் பாசிச குணம் கொண்டுள்ள பாஜகவிற்கு இடம் கிடையாது என்பதை உறுதி செய்ய வேண்டியது தமிழக வாக்காளப் பெருமக்களின் கடமையாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

$    தமிழகத்தில் தொடர்ந்து வரும் அதிமுக ஆட்சி மக்கள் விரோத, விவசாயிகள் விரோத     நடவடிக்கைகளை கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழக மக்களின் எதிரியாகவே மாறிவிட்ட ஒரு ஆட்சியாகும்.

$   அனைத்து துறைகளிலும் தமிழகம் பின்தங்கியுள்ளது.

$    சிறு-குறு தொழில்கள் முடங்கியுள்ளன.

$    விவசாயம், வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஸ்தம்பித்துள்ளன.

$    விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது.

$    இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு எட்டாக்கனியாக மாறியுள்ளது.

$     சிறு-குறு தொழில் முனைவோர், விவசாயிகள், கைவினைஞர்கள் கடன் வலையில் சிக்கித் தற்கொலையில் மாண்டு வருகின்றனர்.

$    ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கல்வி படிப்பு பறிக்கப்பட்டுவிட்டது.

$    பெண்கள் - குழந்தைகளுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்ற நிலைமை உருவாகியுள்ளது.

$    பொள்ளாச்சியில் இளம் பெண்கள் அதிமுக பிரமுகர்களால் சீரழிக்கப்பட்டுள்ளனர்.

$    சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்நிலையத்தில் வைத்து அடித்தே படுகொலை செய்யப்பட்டனர். 

$    சாதிய ஒடுக்குமுறைகள், தீண்டாமைக் கொடுமைகள், ஆணவப் படுகொலைகள் அதிகரித்துள்ளன. 

$    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

$    அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், தொகுப்பூதியம் பெறுபவர்கள், போக்குவரத்து மற்றும் மின்சார ஊழியர்கள், செவிலியர்கள் என  அனைத்து துறை ஊழியர்களின் பிரச்சனைகளும் தீர்க்கப்படவில்லை.

$    இக்காலத்தில் அதிமுக அரசின் அவலங்களுக்கு எதிராக  தன்னெழுச்சி போராட்டங்களும் நடந்துள்ளன. அதிமுக அரசிற்கு எதிராக போராடிய எதிர்கட்சிகள், பொது மக்கள், சமூக அக்கறையுள்ள ஆர்வலர்கள் ஆகியோர் மீது கண்மூடித்தனமான தாக்குதல்கள், அடக்குமுறை, கைது, சிறை, வழக்குகள் என அதிமுக அரசு அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டு வருகிறது.  ஜனநாயக உரிமைகள் அனுதினமும் பறிக்கப்படுகிறது.

$    தமிழக மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு ஒரு துளி அளவு கூட அதிமுக அரசு அக்கறை செலுத்தவில்லை என்பதே உண்மை. 

$    மறுபுறம் அதிமுக ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. பணியமர்த்தல், பணி மாறுதல், நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு லஞ்சம் - ஊழல் பெருக்கெடுத்துள்ளது. முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

$   மாநில சுயாட்சி உட்பட பல்வேறு விழுமியங்களை பேசிக்கொண்டிருந்த அதிமுக, இந்த காலகட்டத்தில் மத்திய மோடி அரசிடம் முற்றாக சரணாகதி அடைந்துவிட்டது. கிட்டத்தட்ட மத்திய பாஜக அரசின் ஓர் அடிமை அரசாகவே அதிமுக அரசு மாறிவிட்டது.

நீட் தேர்வு, இந்தி - சமஸ்கிரும் திணிப்பு, சிறுபான்மை மக்களை பாதிக்கக் கூடிய குடியுரிமை திருத்தச் சட்டங்கள், பொதுத்துறைகள் தனியாருக்கு தாரை வார்ப்பு, பண மதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்,டி, வரி விதிப்பு மூலம் சிறு-குறு தொழில்கள் பாதிப்பு, 8வழிச் சாலை, வேளாண் விரோத சட்டங்கள், மின்சார சட்டத் திருத்த மசோதா உள்ளிட்ட மக்கள் விரோத, கார்ப்பரேட் மய கொள்கைகளை மத்திய பாஜக அரசு நிறைவேற்றி வருகிறது. 

மத்திய அரசு கொண்டு வருகிற இந்த கொடிய திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் துணை போனதன் மூலம் தமிழக மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தேச மக்களுக்கும் விரோதியாக மாறி இருக்கிறது அதிமுக.  ரூ. 5 லட்சம் கோடிகளுக்கு மேல் கடனாளி மாநிலமாக தமிழகம் அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. இவை எதையும் சரிசெய்யும் திட்டமோ திராணியோ அதிமுக அரசுக்கு இல்லை.  தமிழகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் சாதி, மத அடிப்படையில் அணி சேர்க்கும் பாஜகவின் முயற்சி மிகவும் ஆபத்தானது. மத்திய பாஜக அரசின் கொடிய மதவெறி திட்டங்களுக்கும், மாநிலங்களையும் பிராந்திய அரசியல் கட்சிகளையும் கபளீகரம் செய்து ஒற்றை ஆதிக்க எதேச்சதிகார ஆட்சியை நிறுவத் துடிக்கும் அரசியல் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கும் முடிவு கட்டுவதை உறுதி செய்கிற ஒரு தேர்தல் என்றால் மிகையல்ல. தமிழகத்தின் நலன் காக்கவும், அதிமுக-பாஜக கூட்டணி மறுசிந்தனையின்றி வீழ்த்தப்பட வேண்டியது காலத்தின் கட்டளையாகும்.

இத்தகைய சூழ்நிலையில் ஒட்டுமொத்த தமிழகத்தின் நலன் காத்திட பாஜக- அதிமுக கூட்டணியை வீழ்த்துவது ஒன்றே மக்களின் உறுதியான கடமையாகும். இதனை சீர்குலைக்கும் வகையில் சில கட்சிகளும், சில சுயேச்சை வேட்பாளராகவும் போட்டியிடுவது வேதனையாகும். இதன் காரணமாக ஒட்டுமொத்த பாஜக - அதிமுக கூட்டணியின் எதிர்ப்பு வாக்குகளை இவர்கள் பிரிப்பது மக்கள் நலனுக்கு எதிரானது மட்டுமல்ல, வீழ்த்த வேண்டிய பாஜக- அதிமுக
கூட்டணிக்கு மறைமுகமாக சேவகம் செய்வதாகவே அமைந்துவிடும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

அதிமுக மீது சவாரி செய்து கொண்டு பாஜக தமிழகத்தில் காலூன்ற முயல்கிறது. தேசிய அளவில் இன்றைக்கு பாஜக வலுவான முறையில் பின்னுக்கு தள்ளப்பட வேண்டுமானால் தமிழகத்தில் அது சவாரி செய்துகொண்டிருக்கிற அதிமுக தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இலக்கினை நிறைவேற்றுகிற சக்தி திமுக தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மதச்சார்
பற்ற முற்போக்கு கூட்டணியிடம் மட்டுமே உள்ளது. 

தமிழக வாக்காளப் பெருமக்களும், இளம் தலைமுறை வாக்காளர்களும் இதை மனதில் கொண்டு ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவின் போது, நாம் அளிக்கிற ஒவ்வொரு வாக்கும் நமது குழந்தைகள்-சகோதரிகள்-இளைஞர்கள்-விவசாயிகள்-தொழிலாளர்களின் எதிர்காலத்திற்கான வாக்கு என்பதை எண்ணிப்பார்த்து திமுக தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னத்தில் வாக்களித்து 234 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

;