நான்கு கம்யூனிஸ்ட் இளந்தளிர்களான கிசான் மணிகள்மறைந்து விட்டன. காங்கிரஸிலே பிறந்து கிசான்இயக்கத்திலே வளர்ந்து, சுதந்திரப் போராட்ட ராணுவமான கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தனர். இவர்கள் இருபத்தைந்து வயது கூட நிரம்பப் பெறாதவர்கள். இமயம் முதல் குமரி வரை கய்யூர்த் தோழர்களைத் தூக்கிலிட வேண்டாம் என்று கிளர்ச்சி பொங்கியது. எழுகடல் கடந்து இங்கிலாந்து தேசத்திலே பிரிட்டிஷ் பொதுமக்களின் தலைசிறந்த புதல்வர்களான பிரிட்டிஷ் தொழிலாளர்கள் தங்கள் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி மூலம் அனைத்து முயற்சிகளும் செய்தார்கள்.ஆயினும் பயனில்லை.கய்யூர்த் தியாகிகள் தூக்கிலிடப்படுவதற்கு முந்தைய நாளில் அவர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பி.சி.ஜோஷி...
“.....உங்கள் நால்வரை அவர்கள் தூக்கு மேடைக்கு அனுப்பட்டும். அதைநம்மால் இன்று தவிர்க்க முடியவில்லை. ஆனால் உங்கள் ஜீவித மாண்பால் உத்வேகம் அடைந்து நானூறு பேர்..நாலாயிரம் பேர் நமது கட்சியின் அணியிலே புதிது புதிதாக சேர வருவர். அதைஅவர்களால் தடுக்க முடியாது. இந்தவழியிலே நாம் சேவை செய்வோம். வெற்றி நிச்சயம் என்று உறுதி கூறுகிறோம். நமது லட்சியம் சிரஞ்சீவியானது. அதனை அடையும் ஆயுதமான நமது கட்சியும் சிரஞ்சீவியானது.” என்றார்.
கய்யூர்த் தியாகிகள் நால்வரில்..
“நான் இதுவரை மக்களுக்குச் சேவைசெய்ததெல்லாம் கட்சிதான் செய்ய வைத்தது. நான் எனது கடமையைச் செய்து விட்டேன் என்று கட்சி எண்ணுமானால் அதுவே எனது பேராவல் “ என குஞ்ஞாம்புவும்.. “நமது கட்சியின் பலம் வளர்ந்து வருகிறது என்று மகத்தான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறீர்கள். இந்தக் கூடிய சக்தியுடன் நாங்கள் தூக்கு மேடைஏறுவோம்.” என அப்புவும்..
“நமது தியாகிகளின் வாழ்விலிருந்து படிப்பினைகளை உணர்ந்திருக்கிறோம். தியாகிகளில் நால்வராக உயிரைஅர்ப்பணம் செய்யும் கௌரவம் எங்களுக்குக் கிடைக்குமென்று சொப்பனத்திலும்கூட நினைக்கவில்லை. நாங்கள் தீரத்துடன் தூக்கு மேடை ஏறுவோம் என்று தோழர்களுக்குச் சொல்லுங்கள். என் தாய் ரொம்ப வயதானவள். அவளைஉற்சாகப்படுத்துங்கள். எனது சகோதரர்கள் இளஞ் சிறுவர்கள். கட்சி வேலைக்காகப் பயிற்சி கொடுங்கள். நான்தான் குடும்பத்தின் தலைச்சன். அவர்களைப் பராமரிக்க வேறு யாருமில்லை.” என அபூபக்கரும் கூறினர்....இதுவரைக்கும் பேசாமலிருந்த உடன் சென்றிருந்த சுந்தரய்யா கூறினார்..”நீங்கள் அவர்களுக்கு தைரியமுட்டுவதாக வந்தீர்கள். ஆனால் பதிலாக அவர்கள் உங்களுக்குத் தைரியம் ஊட்டிவிட்டார்கள் “ என்றார்.“அவர்கள் நமது தியாகிகள். அவர்களுக்குத் தைரியமூட்ட வேண்டுவதில்லை. நான் பின்னால் விடப்பட்டிருக்கும் அவர்களது தோழன். எனக்குத் தைரியம் தேவை. அது எனக்குக் கிடைத்து விட்டது” என்று பதில் கூறினேன். என்றார் பி.சி.ஜோஷி.
மார்ச் 29 ஆம்தேதி காலை அப்பு, அபூபக்கர், சிருகண்டன், குஞ்ஞாம்பு ஆகிய நால்வரும் தூக்கிலிடப்பட்டனர். முந்தைய இரவிலே புரட்சிக் கீதங்களிலேலயித்திருந்தனர்.‘கம்யூனிஸ்ட் பார்ட்டி ஜிந்தாபாத்’ என்று கோஷமிட்டனர். அந்த இரவிலே கண்ணூர் மத்திய சிறையிலே யாரும் கண் இமைக்கவில்லை. காலையிலே மூவாயிரம் பொதுமக்கள் இவர்களது வீர உடலைத் தர வேண்டினர். அதிகாரிகள் மறுத்து விட்டனர்.1940களில் சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த மலபார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையாக மாறியது. போரின் வருகையாலும் அதற்கு கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பாலும் பிரிட்டிஷாரின் அடக்குமுறை அதிகரித்தது. கய்யூரில் விவசாயிகள் சங்க நடவடிக்கைகளை அடக்கி கிராமத்தை போலீஸ் தாக்கியது. இந்த அடக்குமுறை எதிர்ப்பைத் தெரிவிக்க 1941 மார்ச் 28அன்று விவசாயிகள் சங்கத்தின் ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டது. முஸ்லிம் விவசாயப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்ததாகச் சொல்லப்பட்ட அக்கிராமத்தில் பணியமர்த்தப்பட்ட ஒரு போலீஸ்கான்ஸ்டபிள் ஊர்வலத்தின் இடையேவந்தார். அங்கு நடந்த கைகலப்பில் அந்தப் போலீஸ் கான்ஸ்டபிள் கொல்லப்பட்டார். இதன்பின் முரட்டுத்தனத்திற்குப் பெயர் போன, மலபார் சிறப்பு போலீசாரால் கடுமையான அடக்குமுறைக் காலம் ஆரம்பமானது. அக்கொலைக்காக மொத்தத்தில் 61பேர் விசாரணையில் நிறுத்தப்பட்டனர். அவர்களில் நான்கு இளைஞர்களுக்குத்தான் மரண தண்டனை அளிக்கப்பட்டது.கய்யூர் தோழர்களைக் காப்பாற்றும் முயற்சியில் கம்யூனிஸ்ட் கட்சி, விவசாயிகள் சங்கம் ஆகியவை இணைந்துமரண தண்டனையை ரத்து செய்யக்கோரி அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டன. ஆனால் இறுதியில் கய்யூர் தோழர்களின் மரண தண்டனை தவிர்க்க முடியாததாகிவிட்டது.
கேரள மாகாண கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே.கிருஷ்ணப் பிள்ளை “உங்களது வீரம், தன்னையே தியாகம் செய்தல் ஆகியவற்றின் புனித நினைவுகள் எங்களுக்கு எப்போதும் ஒரு தூண்டுதலாக இருக்கும் என்று நாங்கள் உறுதி அளிக்கிறோம். தோழர்களே..நீங்கள் முடிக்க முடியாது விட்டுச் சென்ற தேசப்பற்றுப் பணிகளை, எங்கள் கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரையில் தொடர்ந்து செய்வோம் என்றும் சபதம் செய்கின்றோம்” என்று தமது செய்தியில் குறிப்பிட்டவாறே அமல்படுத்தப்பட்டதால்தான் கேரளாவில் வலுவான கட்சியைக் கட்ட முடிந்தது என்பது கண்கூடாகக் காணும் உண்மை.கய்யூர்த் தியாகிகளின் வீர வரலாறு கல்மனம் படைத்தவர்களையும் கரையச் செய்யும். ஆதிக்கத்தையும் அக்கிரமத்தையும் எதிர்த்துப் போராடத் துணிவைத் தரும். அரசியல் உணர்வற்றவர்களையும் உணர்வு பெறச் செய்யும். இத்தகைய வீர காவியம்தான் “நினைவுகள்அழிவதில்லை” எனும் நாவலாக நிரஞ்சனாவால் கன்னட மொழியில் எழுதப்பட்டு சி.ராகவன் மலையாளத்தில் மொழிபெயர்க்க பின்னர் பி.ஆர்.பரமேஸ்வரன் எளிய நடையில் தமிழில் மொழி பெயர்த்துப் பல பதிப்புகள் வெளியிடப்பட்டன. கய்யூர்த் தியாகிகளின் ஒப்பற்ற தியாகம் வீண்போகாது. இத்தகைய தியாகிகளின் வழித்தடத்தில் அர்ப்பணிப்பு மிக்க இயக்கப் பணிகளில் பயணிப்பதே தியாகத்திற்குத் தரும் மதிப்பாக அமையும்.
பெரணமல்லூர் சேகரன்