election2021

img

தலையாட்டி பொம்மை அதிமுக அரசை தூக்கி எறிவீர்.... திருப்பரங்குன்றம் பொதுக்கூட்டத்தில் பிருந்தா காரத் அறைகூவல்....

திருப்பரங்குன்றம்:
ஜேப்படி மத்திய பாஜக அரசாங்கத்திற்கு தலையாட்டும் பொம்மைதான் தமிழக அதிமுக அரசு; அதை தூக்கி எறிவீர் என மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுஉறுப்பினர் பிருந்தா காரத் அழைப்புவிடுத்தார்.

திமுக உள்ளிட்ட தோழமைக்கட்சிகளின் ஆதரவுடன் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிவேட்பாளர் எஸ்.பொன்னுத்தாயை ஆதரித்து பிருந்தாகாரத் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டத்தில் பேசினார். அவர் பேசியதாவது:-தோழர் பொன்னுத்தாயை நான் நீண்ட காலமாக அறிவேன். அவர் சமரசமற்றப் போராளி.சமூக நீதிக்காகவும், பெண்கள், குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராகவும், தலித் மக்களின் பிரச்சனைகளுக்காக வும், மக்களின் அடிப்படைக் கோரிக்கை களுக்காகவும் பல்வேறு போராட்டங்களை  தலைமையேற்று நடத்தியவர். பல்வேறு போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். அவர் வெற்றி பெற்று சட்டமன்றம் செல்வதன் மூலம் தொகுதி பிரச்சனைகளுக்காக, பெண்கள், குழந்தைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பார்.

வாக்காளர்களாகிய நீங்கள் உங்கள், உறவினர்கள், நண்பர்களிடம் கூறுங்கள், செங்கொடி இயக்கத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும், திமுக தலைமையிலான அணியும் வெற்றி பெறவேண்டும். அனைத்து தொகுதிகளிலும் அவர்களுக்கு உங்களது வாக்குகளை அளியுங்கள் எனக் கூறுங்கள். அதிமுக -பாஜக அணிதோற்கடிக்கப்படவேண்டுமென உறுதியேற்றுக் கொள்ளுங்கள்.தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு, மக்கள் ஒற்றுமையை பாதுகாப்பதற்கான தேர்தல். கொள்கை மாற்றத்திற்கான தேர்தல். தமிழகத்தின் வெற்றி இந்திய அரசியலில் எதிரொலிக்கும். இங்கு அளிக்கப்படும் தீர்ப்பு மக்கள் விரோத-தொழிலாளர் விரோத கொள்கைகளை அமல்படுத்தி வரும் மத்திய அரசுக்கு ஒரு பாடமாக அமையவேண்டும்.திருப்பரங்குன்றம் மண்ணின் மைந்தரான சு.வெங்கடேசனை மக்களவை உறுப்பினராக மதுரை தொகுதி வாக்காளர்கள் தேர்வு செய்துள்ளனர். இப்போது இந்த மண்ணின் மகளாக போட்டியிடும் பொன்னுத்தாயை வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்புங்கள்.திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார்? அவர் மதுரைவடக்குத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

இப்போது ஏன் இங்கு நிற்கிறார்?  வடக்குத் தொகுதியில் ஊழல் செய்து விட்டு,அங்கு சுருட்டிய பணத்துடன் இங்கு வந்துள்ளார். இந்தியில் “சோர்” என்றொரு வார்த்தை உள்ளது. அதற்கு தமிழில் திருட்டு என்று அர்த்தம்.அதிமுக கட்சி, அதிமுக ஆட்சி, இங்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இராஜன் செல்லப்பாஉள்ளிட்ட அனைவரும் கொள்ளைக் கூட்டம். இவர்கள் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும்.மத்தியில் ஒரு குரூரமான ஆட்சி நடைபெறுகிறது. கொரோனா பரவலையொட்டி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குகாலத்தில் பாஜக அரசு மக்களை கண்டுகொள்ளவில்லை. 12 கோடி மக்கள் வேலைவாய்ப்பை இழந்துவிட்டனர். பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் வாழ்வதற்கு வழியின்றி, வேலையின்றி வீதிகளில் அலைந்துதிரிந்தார்கள். ஆனால், பெரும் பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகியுள்ளனர். கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் மிகப்பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 11 லட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நடப்பு பட்ஜெட்டில் விதவைத்தாய்மார்களுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு, ஏழை-எளிய மக்களுக்கு, மூத்தகுடிமக்களுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல், எரிவாயு விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கடந்த ஓராண்டில்  பெட்ரோலியப் பொருட்களின் மீது ரூ.2.98 லட்சம் கோடி வரியாக விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை-எளிய மக்கள் கசக்கிப் பிழியப்படுகின்றனர்.

மத்திய அரசு உழைப்பாளி மக்களின் சட்டைப்பையில் உள்ள பணத்தை ஜேப்படி செய்கிறது. இந்த ஜேப்படி (பிக்பாக்கெட்) கூட்டத்திற்கு தமிழகத்தின் இரட்டையர்கள் இபிஎஸ் - ஓபிஎஸ் தலையாட்டுகின்றனர். மத்தியில் நடைபெறும் ஜேப்படி அரசிற்கு இவர்கள் தலையாட்டி பொம்மைகள். கடந்த ஐந்தாண்டுகளாக வெட்ககரமான ஆட்சியை அடிமைச் சேவகம் புரியும் அரசைத் தான் தமிழகம் கண்டுள்ளது. மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக திமுக, இடதுசாரிக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல்கொடுக்கின்றன.  நாட்டின்பொதுத்துறைகளான  வங்கி, இன்சூரன்ஸ் துறைகளை விற்பதற்கு எதிராக, நாட்டையேகூறுபோடுவதற்கு எதிராகப் போராடிவருகின்றனர். ஆனால் அதிமுக மட்டும் அதற்குஆதரவாக உள்ளது.தமிழகத்தில் 3.50 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. ஐந்தாண்டுகளாக ஆட்சிசெய்த எடப்பாடி அரசு ஏன் அவற்றை நிரப்பவில்லை? மோடி ஆட்சியில் எந்தத்தொழிற்சாலையும் உருப்படியாக இயங்கவில்லை. மோடி-அமித்ஷாவின் பொய்களைஉற்பத்தி செய்யும் ஆலை மட்டுமே இயங்கிவருகிறது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடதுசாரிக்கட்சிகளின் வற்புறுத்தலால் 100 நாள் வேலைத் திட்டம் கொண்டுவரப்பட்டது. தமிழகத்தில் 100 நாள் வேலை வழங்கப்படவில்லை. அதிகபட்சமாக 48 நாட்கள்தான் வழங்கப்பட்டுள்ளது.இந்தியாவிலேயே ஹரியானா மாநிலத்தில் தான் வேலையிமை அதிகரித்துள்ளது. அங்கு 26 சதவீதம் பேருக்கு வேலையில்லை. அங்கு மோடி-அமித்ஷா ஆசியோடு கட்டார் தலைமையிலான ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. இமாச்சலப்பிரதேசம், பீகார், திரிபுரா  மாநிலங்களிலும் வேலையின்மை உச்சத்தில் உள்ளது. பாஜக ஆட்சி நடக்கிற இந்த மாநிலங்களுக்குச் சென்று புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு ஆலோசனை வழங்காத மோடியும்-அமித்ஷா-வும் தமிழகத்திற்கு வந்து 50லட்சம் வேலை தரப்போவதாக பொய் பேசுகிறார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

பிருந்தாகாரத்தின் ஆங்கில உரையை தீக்கதிர் பொறுப்பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன் தமிழாக்கம் செய்தார். முன்னதாக வேட்பாளர் எஸ்.பொன்னுத்தாய் வாக்காளர்களிடம் வாக்குச் சேகரித்தார்.கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

தோழர் பிருந்தா காரத் அவர்களின்  பிரச்சார எழுச்சி உரை 1-ஆம் பக்கம் 3-ஆம் பக்கம் என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படிக்கும் வசதிக்காக இதே தொகுப்பில் தொடர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது....  

;