2021 ஏப்ரல் 06 அன்று நடைபெற இருக்கிற தமிழக சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்கு இசைப்பாடல்களாக இதோ வந்துவிட்டன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமுஎகச கலைஞர்களின் இடைவிடா உழைப்பில் அருமையான ஆறு பாடல்கள்..!
சிரிப்பா சிரிக்குதடா தமிழகம்
நம்ம சீப்மினிஸ்டர் முட்டுப்போட்டுபோன ரகசியம்
ரெண்டு காலத்தேடி வண்டுபோல உருண்டாரு
நாற்காலி கெடச்சவுடனே நடந்ததெல்லாம் மறந்தாரு
லேடி சொன்னா அப்ப ஆடுனாரு
இப்ப மோடி சொன்னா ஆடுறாரு
வார்த்தைக்கு வார்த்தை வெவசாயி
வாராரய்யா எடப்பாடி
வேளாண் விரோத சட்டம் வேணுமா?
அம்பானிக்கு இவரு சகலபாடி
பேண்ட்டு போடாம வேட்டி கட்டினா
விவசாயின்னு ஜனங்க நம்புமா?
கோமணத்தைக் கட்டி வந்தாலும் கொள்கையை கோமணம் மறைக்குமா?
ஆகிய பாடல்கள் எடப்பாடியை அம்பலப்படுத்துகின்றன.
************
பெட்ரோல் வெல ஏறிப்போச்சு
நம்ம பைக் ஸ்கூட்டர் பட்டினியாச்சு
வெங்காய வெல ஏறிப்போச்சு
அட என்னடா வெங்காய ஆட்சி
கவர்மெண்ட் கண்ணுலவிட்டு புழிஞ்சு பாரு
ஒரு சொட்டு கண்ணீரும் சிந்தாது
- பாடல் இன்றைய விலைவாசி உயர்வையும்,
அதற்கு செவிச் சாய்க்காத மத்திய-மாநில அரசுகளையும் தெருவில் இழுத்துப்போட்டு உதை உதையென உதைக்கிறது இப்பாடல்.
************
கலர்கலரா நோட்டு அடிச்சி
கறுப்பு பணத்த மூடிமறைச்ச கில்லாடி நரேந்திர மோடி
செல்லாத நோட்டு என்ற பொல்லாத திட்டத்துக்கு
உருப்புடாத ஒவ்வொருக்கும் கொடுத்தியே பில்டப்
என பாஜக அரசின் ‘ஊழலற்ற ஆட்சி’ என்கிற மாய்மாலத்தை போட்டு உடைக்கிறது இப்பாடல்.
************
செத்துக் கொண்டே போராடுறான் விவசாயி
செத்தப் பொணம்போல பேச மறுக்குது பிஜேபி
காளான் தின்று கொண்டு வேடிக்கை பாரு மோடி
வேளாண் சட்டம் போட்டு அடிச்சதெல்லாம் எத்தனை கோடி
என கலப்பை தேசத்தை கார்ப்பரேட் தேசமாக்கும் நயவஞ்சகத்தை சந்திசிரிக்க வைப்பதோடு, ஒவ்வொரு தமிழனின் மனசாட்சியை தட்டி எழுப்புகிறது இப்பாடல்.
************
மோடிக்கிட்ட மாட்டிக்கிடாதிங்கோ
மாட்டிக்கின்னு மறுபடியும் நொந்துக்காதீங்கோ
தலப்பா கட்டுவாரு கோட்டுச்சூட்டு போடுவாரு
டாட்டா காட்டிக்கின்னு ஏரோபிளேன் ஏறிக்கிவாரு
அடேய்யப்பா அய்யா அம்பானி
கவருமெண்டுக்கு தத்துப்பிள்ள நீ
என்கிற பாடல் மோடி அரசு இனி என்றும் அதானி, அம்பானி சட்டைப்பைக்குள் என்பதை நையாண்டியாகச் சொல்கிறது.
************
எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் முன்னுரையில் பதிவு செய்வதைப்போல், மோடி ஆட்சியில் நமது தேசம் மதச்சார்பற்ற சோசலிச குடியரசு நாடாக இன்னும் எத்தனை நாட்களுக்கு தொடருமோ தெரியாது. மிக கடுமையான நெருக்கடியில், ஆம், ஒருபக்கம் மக்கள் ஒற்றுமைக்கு இறையாண்மைக்கு ஆபத்து, இன்னொரு பக்கம் மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்டு அனைத்துத் துறையிலும் நெருக்கடியின் ஆபத்து கழுத்துமேல் கத்தியாக தொங்கிக்கொண்டிருக்கிறது. ஆம், இரண்டு தலை விஷப்பாம்பு போல் நரேந்திரமோடி அரசு, நாட்டையும் நம்மையும் ‘தீண்டி’ வருகிறது.
அதற்கு சற்றேனும் கடிவாளமிட வேண்டுமென்றால் தமிழகம் மீண்டும் மோடியின் “அடிமைகள்” கையில் ஆட்சி போய்விடக்கூடாது. அதுவே இத்தேர்தலின் முத்தாய்ப்பு கடமையாக நம்முன் இருக்கிறது. அத்தகைய தேசம் காக்கும் இந்த தேர்தல் போருக்கு தக்க ஆயுதமாக இந்த பாடல்கள் வந்துள்ளன என்றால் மிகையாகாது.
மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெரிய அளவில் அற்புதமாக இசை அமைத்து, பாடல் வரிகளுக்கு தகுந்த குரல்களை செலக்ட் செய்திருப்பது சிறப்பு. அதிலும் “சிரிப்பாய் சிரிக்குதடா” பாடலுக்கு பெண் குரல்கள் தேர்வு அருமை. புறம்போக்கு எனும் பொதுவுடமை பாடல் மெட்டில் “மோடிக்கிட்ட மாட்டிக்காதீங்கோ” சூப்பரோ சூப்பர். “செத்துக்கொண்டே போராடுறான் விவசாயி” பாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது. “வார்த்தைக்கு வார்த்தை வெவசாயி” பாடல் ஒருவிதமான கிண்டல் தொனியில் அமைத்திருப்பதும் அருமை.
ஆம், ஒவ்வொரு பாடலும் இன்னொரு பாடலுக்கு இளைப்பல்ல என்பதை போல் மெருகூட்டியே வருகிறது. இதற்காக உழைத்த பாடலாசிரியர்கள், பாடியவர்கள், இசை அமைத்தவர்கள், பாடல் பதிவாளர் என யாவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
எல்லாவற்றிற்கும் முக்கியமாக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு பயன்படும் வகையில்... மக்கள் வேதனைகள் தீர தூதாக இந்த தேர்தல் கீதங்கள் இருக்கிறது. ஆம், 234 தொகுதிகளுக்கும் இப்பாடல் தொகுப்பு பயன்படும் என்றால் மிகையன்று.
தொகுப்பு : தாரைப்பிதா