election2021

img

ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்....

முதல்வர் பழனிசாமி 2-வது உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி 3 லட்சம் கோடி முதலீட்டை இந்த தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்திருக்கிறோம் என்றுபேசியிருக்கிறார். பொய்… பொய்… பொய்…. ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். மாநாடு நடந்தது உண்மை தான். அதேபோல வெளிநாட்டிற்கு முதலமைச்சர் உட்படசில மந்திரிகள் கோட் - சூட் போட்டுக் கொண்டு சுற்றுலா சென்று வந்தது உண்மைதான். மறுக்கவில்லை.

2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு 3 லட்சம்கோடி முதலீடு கொண்டு வந்தோம் என்று பழனிசாமிசொல்கிறாரே… அதன் மூலமாக தமிழ்நாட்டிற்குஎவ்வளவு தொழிற்சாலைகள் கொண்டு வந்தீர்கள்? எவ்வளவு பேருக்கு வேலை கொடுத்து இருக்கிறீர்கள்? அதற்கு முதலில் விளக்கம் சொல்லுங்கள்.அதுகுறித்து நான் சட்டமன்றத்தில் வெள்ளை அறிக்கை கொடுங்கள் என்று தொடர்ந்து கேட்டுவந்தேன். மக்கள் மன்றத்திலும் கேட்டு வருகிறேன். அதற்கு பதில் சொல்வதற்கு அவருக்கு யோக்கியதை இல்லை… அருகதை இல்லை…!

அவர் 27 சதவிகிதம் முதலீடு வந்திருக்கிறது என்று ஒரு பொய்யைச் சொல்லி இருக்கிறார். எங்கு தொழிற்சாலை வந்து இருக்கிறது? என்று சொல்லவேண்டும். அவ்வாறு வந்ததாக எதுவும் தெரியவில்லை. 100 சதவிகிதம் வந்தால்தான் வெற்றியாகும்.
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்துகாவிரி - வைகை குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்றி விட்டதாக ஒரு பொய்சொல்லிக்கொண்டிருக்கிறார் முதல்வர் பழனிசாமி. அதற்கு சமீபத்தில் அடிக்கல்நாட்டு விழா நாடகம் நடந்தது.அந்த அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமரை அழைத்து வர வேண்டும்என்று முடிவு செய்தார்கள். அவ்வாறு பிரதமர் வருவதாக எங்களுக்குச் செய்தி கிடைத்தது.

உடனே நான் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினேன். “மாண்புமிகு பிரதமர் அவர்களே… நீங்கள்தமிழ்நாட்டிற்கு வரும் போது பல அடிக்கல் நாட்டு விழாக்களில் கலந்து கொள்ளப் போகிறீர்கள்.அது எங்களுக்கு மகிழ்ச்சி தான். ஆனால் காவிரி - வைகை குண்டாறு இணைப்புத்திட்டத்தைநிறைவேற்றுவதற்காக ஒரு நிகழ்ச்சி நடத்துவதாக நாங்கள் செய்தி கேள்விப்பட்டோம். ஆனால் அது ஏற்கனவே தலைவர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்ட திட்டம். எனவே அந்தத் திட்டத்தைமீண்டும் தொடங்கி வைப்பதாக ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அதை நீங்கள்திறந்து வைத்தால் நீங்கள் கேலிக்கு விமர்சனத்துக்கு ஆளாகி விடுவீர்கள்” என்று சொன்னேன்.

அது பிரதமருக்குத் தெரிந்து அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார். ஆனால் அதற்குப் பிறகுஅந்த நிகழ்ச்சியை அவர் இல்லாமலேயே நடத்தி இருக்கிறார்கள். கலைஞர் அந்தத் திட்டத்தை தொடங்கியபோது 165 ரூபாய் மதிப்பீட்டில் கட்டளைப் பகுதியில் கதவணை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் 2011-இல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அதை நிறுத்தி விட்டார்கள். இப்போது இவர்கள் புதிதாக செய்ததாக ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமாவில் ஒரு பாட்டு வரும். “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து” என்று அதுபோல, பொய்யிலேயே இன்றைக்குக் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோலதமிழ்நாட்டை மின் மிகை மாநிலமாக நாங்கள் மாற்றி விட்டோம் என்று ஒரு பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்.மின்மிகை மாநிலம் என்றால் என்ன? அரசாங்கம் தானாக மின் உற்பத்தி செய்து, அதில் மீதமிருக்கும் மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு கொடுத்தால் அது மின்மிகை மாநிலம்.ஆனால் இங்கு எந்த உற்பத்தியும் இல்லை. வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தைக் கடனாக வாங்குகிறார்கள். அவ்வாறு வாங்கும்போது அதில் கமிஷன் கிடைக்கிறது. அப்படிப்பட்ட நிலையில்தான் இன்றைக்கு மின்மிகை மாநிலமாக மாற்றி விட்டோம் என்று ஒரு பொய்யான தகவலைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

தங்கமணி எந்த அளவிற்கு ஊழல் செய்து கொண்டிருக்கிறார் என்பதை நானல்ல, பொதுவாக இருக்கும் அறப்போர் இயக்கத்தின் சார்பில் அதைக் கண்டுபிடித்து ஆதாரத்தோடு பத்திரிகையாளர்களை அழைத்துப் பேட்டி கொடுத்து இருக்கிறார்கள். நீதிமன்றத்தில் அந்த வழக்கு பதிவாகி இருக்கிறது.

                                  ***************

சொத்து மதிப்பு உயர்ந்தது எப்படி?

உளுந்தூர்பேட்டையில் எம்.எல்.ஏ. ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் குமரகுரு. அவரை பழனிசாமிக்கு ஆல் இன் ஆல் என்று சொல்கிறார்கள். அந்தப் பகுதியில் இருக்கும் காண்ட்ராக்ட் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் இருக்கும் காண்ட்ராக்ட்களை தீர்மானிப்பவர். அவர்தான் முதலமைச்சருக்கு வலதுகரம் போன்றவர். அது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த தொகுதி மக்களுக்கு இந்த மாவட்டத்திற்கு ஏதாவது திட்டங்களை கொண்டு வந்திருக்கிறாரா? எதுவும் கொண்டு வரவில்லை. கொரோனா காலத்தில் மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.

ஆளுங்கட்சியின் எம்.எல்.ஏ.க்களின் நிலை இதுவென்றால், அமைச்சர்கள் எவ்வளவு சொத்துகள் சேர்த்திருக்கிறார்கள் என்று இந்து பத்திரிகையில் ஆதாரத்தோடு வெளியிட்டிருக்கிறார்கள்.அவர்கள் எவ்வாறு கண்டுபிடித்துள்ளார்கள் என்றால் தேர்தலில் வேட்பாளராக நிற்பவர்கள் வேட்பு மனுவில் சொத்து மதிப்பைக் குறிப்பிட வேண்டும். அதை மறைக்க முடியாது. அதை எடுத்து அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். ஒவ்வொரு மந்திரியும் எவ்வளவு சொத்து சேர்த்து இருக்கிறார்கள் என்று தெளிவாக போட்டு இருக்கிறார்கள்.

அதில் துணை முதலமைச்சரின் சொத்து மதிப்பு 409 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. ராஜலட்சுமியின் சொத்து மதிப்பு 359 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. ஆர்.பி.உதயகுமாரின் சொத்து மதிப்பு 475 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. செல்லூர் ராஜூவின் சொத்து மதிப்பு 445 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. விஜயபாஸ்கரின் சொத்து மதிப்பு 576 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. கே.பி.அன்பழகனின் சொத்து மதிப்பு 683 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது.

                                  ***************

ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் என்ன குற்றம் செய்தார்கள்?

அதேபோல இன்றைக்கு அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் எத்தனையோ கோரிக்கை களை வைத்து தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.அவ்வாறு போராடிக் கொண்டிருக்கும் அவர்களை, இந்த ஆட்சி அழைத்துபேசவில்லை.போராடியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது. மேலும் முதலமைச்சர் பழனிசாமி போராடுகிற அதிகாரிகளை - அரசு ஊழியர்களை பார்த்து, “ஐந்தாம் வகுப்புதலைமை ஆசிரியர் 82 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார்” என்று கொச்சைப்படுத்தி பேசினார்.வாழ்நாள் முழுவதும்அவர்கள் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றிக் கூறவில்லை.அவர்களைக் கொச்சைப்படுத்தி அவர்கள் வாங்கிய சம்பளத்தை வெளிப்படுத்தி கொச்சைப்படுத்தி பேசுகிறார்.

அதேபோல கல்வித்துறை அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன் அவர்கள், “ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடாவிட்டால் கண்ணீர் சிந்த வேண்டி இருக்கும்”என்று எச்சரிக்கை விடுத்தார். போராடுகிற ஆசிரியர்களை அழைத்து இந்த அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிடுகிறது. ஆனால் ஒருமுறை கூட அவர்களை அழைத்து இந்த அரசு பேசவில்லை.அதேபோல துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவர்கள், “ஆசிரியர்கள் செய்த தவறுக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது” என்று பேசுகிறார். அவர்கள் கேட்டது நியாயமானது. பத்தாண்டு காலமாக சம்பளத்திலிருந்து செலுத்திய எணம் எங்கே? அதற்குக் கணக்குஎங்கே என்று கேட்டார்கள். இவ்வாறு கேட்டது தான் அவர்கள் செய்த குற்றமா?

பிரச்சார கூட்டங்களில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையிலிருந்து...

;