election2021

img

அலட்சியம் வேண்டாம்... அயராது உழைப்போம்.... தோழமை சக்திகளுக்கு தோள் கொடுப்பீர்.... திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு....

சென்னை:
தமிழக தேர்தல் களத்தில் திமுக தலைமையி லான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவான மக்களின் மனநிலை, அலையாக அல்ல,பேரலையாக எழுந்து உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்து தமிழகத்தை அனைத்து முனைகளிலும் பாழ்படுத்திய அதிமுகவை அந்தப் பேரலை சுருட்டி தூரஎறிந்துவிடும் என்பதை தமிழக மக்கள் எல்லா இடங்களிலும் நாள்தோறும் அளித்து வரும் கணிசமான ஆதரவின் வாயிலாக உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்நிலையில், “தேர்தல் களத்தில் ஓய்வின்றிஓடி ஆடி விழிப்புடன் உழைத்துக் கொண்டிருக்கும்உங்களுக்கும், எனக்கும், எல்லா திசைகளி லிருந்தும் நம்பிக்கை ஊட்டும் நல்ல செய்திகளே நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. ஊடகங்களில் - பத்திரிகைகளில் வெளியாகும் கருத்துக் கணிப்புகளும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் மகத்தான வெற்றிக்குக் கட்டியம் கூறுகின்றன. இவையெல்லாம் நமக்கு, நமது உழைப்புக்கு, நாம் கொண்டிருக்கும் கோட்பாடுகளுக்கு, ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தரும் அதேவேளையில், முன்பைவிட நாம் அதிகமான கவனத்துடன் உழைக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வையும் இணைத்தே  ஏற்படுத்துகிறது என்பதை மறந்துவிடக்கூடாது” என்று அவர் கூறியுள்ளார்.
திமுக தோழர்களுக்கு அவர் எழுதியுள்ள மடலில் மேலும் கூறியிருப்பதாவது:

கருத்துக்கணிப்புகள் தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்தாலும், எதிராக இருந்தாலும், அதனைமட்டுமே நம்பி சார்ந்திருக்காமல், முன்னெப் போதும் போல களப்பணியாற்றுவதே நம் கடமை. மக்கள்தான் வெற்றியைத் தருவதற்குத் தயாராக இருக்கிறார்களே என்ற அதீத எண்ணம் மனதில் கடுகளவு குடியேறினாலும், அது களத்தில் மலையளவு பாதிப்பை ஏற்படுத்தி விடும்.தேர்தல் என்பது ஒவ்வொரு வாக்குக்கும் உள்ள ஜனநாயக வலிமையை நமக்கு உணர்த்துவ தாகும். வலிமை மிகுந்த அந்த வாக்குகளை மக்கள்நமக்குத் தருவதற்கு ஆயத்தமாக - ஆர்வமாக இருக்கிறார்கள் என்றாலும், அவற்றை வாக்குச்சாவடிக்குக் கொண்டு வந்து சேர்க்கிற நாள் வரையிலும் நம் உழைப்பில் - கவனத்தில் ஒரு சிறு தொய்வும் ஏற்பட்டுவிடக் கூடாது.
கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டாலும், அவர்களின் கட்சிகளுக்குரிய சின்னங்களில் போட்டியிட்டாலும் அங்கும் கழகமே போட்டியிடுகிறது என்கிற ஒற்றைச் சிந்தனையுடன் திமுககழகத் தோழர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி வெற்றியினை உறுதி செய்திடல் வேண்டும்.இன்னும் சொல்ல வேண்டுமென்றால், கழகம் போட்டியிடுகிற தொகுதிகளைவிடவும் சற்று கூடுதலான அளவில் ஒற்றுமையைக் காட்டி - உழைப்பினை செலுத்தி - தோழமைக் கட்சிகளின்வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்திட வேண்டும். மத்தியில் ஆட்சி செய்யும் மதவாத -  மக்கள் விரோத பா.ஜ.க.வும், மாநிலத்தைப் பாழாக்கிய ஊழல் - அடிமைஅ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்திருக்கின்றன. தமிழக மக்கள் அந்தக்கூட்டணியை முற்றாக நிராகரிப்பார்கள் என்பதைக் களத்தில் நேரடியாகக் காண முடிகிறது. அதே நேரத்தில், ஆட்சியில் இருப்பதால் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து -அத்துமீறல்களில் - முறைகேடுகளில் ஈடுபட்டு தி.மு.கழகம் தலைமையிலான கூட்டணியின் வெற்றியைத்தடுத்திட - குறைத்திட முனைவார்கள். கழகம் போட்டியிடும் இடங்களிலோ - தோழமைக் கட்சியினர் போட்டியிடும் இடங்களிலோ குழப்பங்களை உருவாக்கி, தற்காலிகமாகக் குளிர்காய நினைப்பார்கள். குன்றிமணி அளவுகூட அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக்கூடாது. நமது வெற்றி இலக்கும் குறைந்திடக் கூடாது.

வெற்றிச் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்வரை, நம் உன்னதமான உழைப்புக்கு ஓய்வுஎன்பதே கிடையாது; நம் கண்களுக்கு உறக்கம் கிடையாது; நம் சிந்தனையில்-செயல்பாட்டில் சிறிதும் சோர்வு கிடையாது.கணிப்புகள் ஊக்கம் தந்தாலும், வாக்குகளே வெற்றியைத் தரும்.சிறு துளிகள் பெருகிச் சேர்ந்து கடலாவது போல, ஒவ்வொரு வாக்கும் கவனமாகச்  சேகரிக்கப்படும்போது, வெற்றியின் அளவு வரலாறு காணாத வகையில் உயர்ந்திடும். அதனால், ஒவ்வொரு நாளும்  வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரியுங்கள். ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுங்கள்.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையையும், நான் தொலைநோக்குத்திட்டம் எனும் தலைப்பில் அளித்துள்ள 7 உறுதிமொழிகளையும் மக்களிடம் எடுத்துக்கூறி பரப்புரை செய்யுங்கள். அடிமை அ.தி.மு.க.வின் அவல ஆட்சியையும் - தேர்தல்நேரத்தில் கொடுத்துள்ள மோசடிவாக்குறுதிகளையும் அம்பலப்படுத்துங்கள்.

தெருக்கள்தோறும், திண்ணைகள் தோறும் பரப்புரையைத் தொடருங்கள். மக்கள் கூடும் இடங்களில்துண்டறிக்கைகளை வழங்கி வாக்கு கேளுங்கள். தனியாக உரையாடும் வாய்ப்புகளிலும், தமிழகத்தை மீட்கவேண்டுமென்றால் தி.மு.கழக ஆட்சி அமைந்திட வேண்டும் என்பதைஎடுத்துரைத்து ஆதரவு திரட்டுங்கள்.அலட்சியம் வேண்டாம்; ஒதுங்கிநிற்காதீர்; முன்னின்று செயல்படுங்கள். தோழமை சக்திகளுக்குத் தோள் கொடுத்திடுங்கள். உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் பாடுபட்டுகண்டுள்ள விளைச்சலில், எந்தவிதசேதாரமும் எக்காரணம் கொண்டும்இடையில் ஏற்பட்டுவிட அனுமதியாமல், முழு வெற்றியை அறுவடை செய்வதற்கு, கவனம் சிதறாமல் - கருத்தொன்றி  உழைத்திடுங்கள்!இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திமுக ஸ்டாலின் அவர்களின் இந்த செய்தி தொகுப்பு 1 மற்றும் 3-ஆம் பக்கம் என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து படிக்கும் வசதிக்காக ஒரே தொகுப்பாக இதில் பதிவிடப்பட்டுள்ளது...  

;