புதுக்கோட்டை:
‘அதிமுக கூட்டணியில் உள்ள எந்த ஒரு கட்சிக்கும் போடும் ஓட்டுக்களும் பாஜகவுக்குப் போடும் ஓட்டுக்களே’ என்றார் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சின்னத்துரை, திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ரகுபதி, ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளர் சிவ.வீ.மெய்யநாதன், புதுக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் வை.முத்துராஜா, விராலிமலை தொகுதி திமுக வேட்பாளர் எம்.பழனியப்பன், அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சு.ராமச்சந்திரன் ஆகியோரை ஆதரித்து வெள்ளிக்கிழமை அந்தந்தத் தொகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
புதிய இந்தியா பிறக்கப் போகிறது என்று சொல்லி 1000, 500 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்தார் மோடி. அப்படி புதிய இந்தியா பிறந்ததை யாராவது பார்த்தீர்களா? நாடு முழுவதும் வங்கிகளின் வரிசையில் நின்று பலர் மடிந்ததுதான் மிச்சம். எனவே, இந்தத் தேர்தலில் வாக்குக் கேட்டு வரும் அதிமுக-பாஜக கூட்டணியை செல்லாக் காசாக்க வேண்டும். அதிமுக கூட்டணியில் உள்ள எந்த ஒரு கட்சிக்குப் போடும் ஓட்டுக்களும் பாஜகவுக்குப் போடும் ஓட்டுக்களே!
ஜிஎஸ்டி வரியில் தமிழ்நாட்டின் பங்கை தர மறுக்கின்றனர். நீட் தேர்வைக் கொண்டு வந்து 13 குழந்தைகளைக் கொன்றனர். கஜா புயலின் போதும், வெள்ளம் பெருக்கெடுத்த போதும் கேட்ட தொகையை மத்திய அரசு தரவில்லை. ஆனால், மோடி பயணம் செய்ய 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு சொகுசு விமானம் வாங்குகிறார். ஏற்கனவே நாடாளுமன்றம் இருக்கும் போது 10 ஆயிரம் கோடியில் புதிய கட்டிடத்தை கட்டுகின்றனர். மக்களின் வரிப்பணத்தை இப்படி வீணடித்துவிட்டு பணம் இல்லை என்கின்றனர்.கடந்த மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் வென்ற பாஜக தமிழகத்தில் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. அதனால் மோடி நம்மீது கோபத்தில் இருக்கிறார். அவர்மீது நாமும் கோபத்தில்தான் இருக்கிறோம்.
நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி மகத்தான வெற்றி பெறும். கருத்துக் கணிப்புகள் 170 தொகுதிக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்கின்றன. இது போதாது. 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். அதற்கு இங்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் 10 முதல் 50 வாக்குகள் வரை சேகரிக்க வேண்டும்.இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.