திருவனந்தபுரம்:
கேரளாவில் தொடர்ந்து 2 ஆவது முறையாக ஆட்சி அரியணையில் ஏறும் முதல் கட்சி என்ற பெருமை இடது முன்னணிக்கு கிடைத்து உள்ளது. கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கூட்டணிகள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறிமாறி ஆட்சிக்கு வருவது வழக்கம். இந்த முறை நிலைமை மாறி இருக்கிறது.
இடது முன்னணி 99 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2016 தேர்தலில் இடது முன்னணி 91 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 47 தொகுதிகளிலும், பாஜ, ஜனபக்ஷம் கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றிருந்தன.இடது முன்னணியில் மார்க்சிஸ்ட் 67, இந்திய கம்யூனிஸ்ட் 17, கேரளா காங்கிரஸ் (எம்) 5, ஜனதா தள் (எஸ்), தேசியவாத காங்கிரஸ் தலா 2, எல்ஜேடி, காங்கிரஸ் (எஸ்), கேரளா காங்கிரஸ் (பி), ஆர்எஸ்பி (எல்), ஜனநாயக கேரள காங்கிரஸ், ஐஎன்எல் ஆகியவை தலா ஒரு இடத்தையும் பிடித்துள்ளன.
பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்றதை அடுத்து மீண்டும் இடது முன் னணி ஆட்சிக்கு வருகிறது. மீண்டும் பினராயி விஜயன் முதல்வர் ஆகிறார். இதன் மூலம் கேரளாவில் தொடர்ந்து 2 ஆவது முறையாக ஆட்சி அரியணையில் ஏறும் முதல் கட்சி என்ற பெருமை இடது முன்னணிக்கு கிடைத்து உள்ளது.இந்த நிலையில் தற்போதுள்ள அமைச்சரவை முறைப்படி ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி முதல்வர் பினராயி விஜயன் திங்களன்று ஆளுநர் ஆரிப் முகமதுகானை சந்தித்து முறைப்படி ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
இதைத் தொடர்ந்து 2 ஆவது முறையாக ஆட்சியமைப்பது குறித்து பினராயி விஜயன் ஆலோசனை நடத்துகிறார். புதிய அமைச்சரவை பதவி ஏற்கும் நாள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இடது முன் னணி கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்படும். புதியஅமைச்சரவையில் புதுமுகங் களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.