படத்தில் இடது பக்கம் நிற்பவர் வலது பக்கம் நிற்பவரிடம் அக்கறையுடன் எதையோ கொடுக்கிறார்...வலது பக்கம் நிற்பவர் கேரள மாநிலம் பொன்னானி சட்டமன்றத் தொகுதியில் இடது ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் தோழர். நந்தகுமார்...
இடது பக்கம் நிற்பவர்...?
கேரள இலக்கிய, திரைப்பட உலகின் முடிசூடா மன்னனும்... ஞானபீட விருது பெற்ற எழுத்தாளருமான எம். டி. வாசுதேவன் நாயர் தான் அவர்...
சரி... தோழர். நந்தகுமாரிடம் எம். டி. வாசுதேவன் நாயர் என்ன கொடுக்கிறார்...
பொன்னானி தொகுதியில் போட்டியிடும் நந்தகுமார் அவர்களின் காப்புத் தொகையை, தான் தருவதாகச் சொல்லி ஏற்றுக் கொண்டு அதை நந்தகுமாரிடம் ஒப்படைக்கிறார் எம்.டி.வாசுதேவன் நாயர்.
மலையாள இலக்கிய உலகின் சிகரம் என்று போற்றப்படும் எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் தன்னை ஒரு இடதுசாரி ஆதரவாளராக முன்னிறுத்தி ஒரு இடதுசாரி வேட்பாளரின் காப்புத் தொகையை செலுத்த முன்வந்துள்ள விஷயம் என்பது. பாசிசத்தை எதிர்க்கும் ஏராளமான கலை இலக்கிய ஆளுமைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாகவே பார்க்கப்படுகிறது.அவர் திரைக்கதை வசனம் எழுதிய ஏராளமான திரைப்படங்கள், மலையாளத் திரையுலகி்ன் பொக்கிஷங்களாகப் போற்றப்படுபவை ஆகும். 1973ல் அவர் எழுதி இயக்கிய “நிர்மால்யம்” எனும் திரைப்படம் இன்றளவும் விவாதிக்கப்படும் ஒரு சிறந்த படைப்பாகும்.
ஏற்கனவே சங்க பரிவார் அமைப்புகள் எம். டி.வாசுதேவன் நாயருக்கு பல்வேறு தருணங்களில் மிரட்டல்கள் விடுத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் இது போன்ற கலைஞர்களும் அறிஞர்களும் அணி திரண்டு கலந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையை எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் உருவாக்கியுள்ளார்.
தொகுப்பு : தக்கலை சதன்