education

img

மாணவர்களின் ஆரோக்கியம்தான் முக்கியம்..... சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்ய தில்லி முதல்வர் வலியுறுத்தல்.....

புதுதில்லி:
மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்களின் ஆரோக்கியம்தான் முக்கியம். எனவே சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 4 முதல் 7 ஆம் தேதி வரையிலும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மே 4 முதல் 15 ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்யுமாறு மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதனைத்தொடர்ந்து, சிபிஎஸ்இ  தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று  தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், தில்லியில் 6 லட்சம் மாணவ-மாணவிகள் சிபிஎஸ்இ பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வு பணியில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இது பெரிய அளவிலான கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும். தேர்வு எழுதப்போகும் மாணவ-மாணவிகளின் வாழ்க்கையும், ஆரோக்கியமும்தான் எங்களுக்கு மிகவும் முக்கியம். இதனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இபொதுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

;