செங்கல்பட்டு பிப்.29- மோடி நடத்திவரும் பொய்களின் ராஜ்ஜியத்தை மக்களிடம் அம்பலப்படுத்துவோம் என பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அழைப்பு விடுத்துள்ளார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டக் குழு சார்பில் பிப்.28 புதன் மாலை செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா தலைமையில் அரசியல் விளக்க தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.அரிகிருஷ்ணன் வரவேற்றார். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் எ.ஆறுமுகநயினார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். செங்கல்பட்டு பகுதி செயலாளர் கே.வேலன் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரையின் அம்சங்கள் வருமாறு:
மோசமான குதிரை பேரம்
பாஜகவை தோற்கடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம், பல காரணங்களால் பாஜகவை தோற்கடிக்க வேண்டியுள்ளது. மாநிலங்களவைத் தேர்தலில் இமாச்சல் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை கடத்திச் சென்று அவர்களை பாஜகவுக்கு வாக்களிக்க வைத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைப்பது பாஜகவாக இருக்கிறது. பாஜக தேர்தலில் தோல்வியடைந்தாலும், அதற்கு பின்னால் வெற்றி பெற்றவர்களை தன் பக்கம் இழுப்பதற்கு அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை வைத்து அச்சுறுத்துவது, கைது செய்வது ஒரு பக்கம்; குதிரை பேரம் மூலமாக வெற்றி பெற்ற எம்எல்ஏ, எம்பிக்களை விலைக்கு வாங்கி ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் தவறான அணுகுமுறை இன்னொரு பக்கம்.
இதை பீகாரில், மகாராஷ்டிரத்தில், கோவாவில், மத்தியப் பிரதேசத்தில் பார்த்தோம். ஜனநாயகத்தை தோற்கடிப்பது என்பது இத்தோடு முடிவு கட்டப்பட வேண்டும்.
இந்தியா அணி வெல்லும்
அந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காகத்தான் அனைத்து மதச்சார்பற்ற எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைந்து இருக்கின்றன. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே இந்தியா கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
தில்லியில், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இந்தியா கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. வாக்குகள் ஒன்றிணைவது இன்று கட்டாயத் தேவை. இதன் மூலமாக இந்தியா கூட்டணி வெற்றி பெறும் . பாஜக தோல்வி உறுதி செய்யப்படும். பிரதமர் நாடு முழுவதும் 400 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று சொல்லிவருகிறார். அப்படியானால் ஏன் மற்ற கட்சிகளின் தலைவர்களை, எம்எல்ஏக்களை, எம்பிக்களை விலைக்கு வாங்குகிறார்.? ஏன் அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் மூலமாக மற்றவர்களை மிரட்டி பணிய வைக்கின்றார்கள்.
பொய்களின் ராஜ்ஜியம்
இந்தியாவில் 5 விழுக்காடு மட்டுமே வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பதாக பாஜக ஆட்சியாளர்கள் தம்பட்டம் அடிக்கிறார்கள் மற்றவர்கள் எல்லாம் ஏழைகள் இல்லையாம் ,அப்படியானால் ஏன் இந்த அரசு 80 கோடி பேருக்கு இலவச அரிசியை கொடுப்பதாக அறிவிக்கிறது. இலவச அரிசி இல்லை என்றால் மக்கள் வாழ முடியாது என்பதுதான் இந்தியாவின் உண்மை நிலை. இது பிரதமருக்கு தெரிந்த காரணத்தால் தான் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இலவச அரிசி தருவதாக அறிவித்து வருகின்றார். இந்திய நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு பேர் மிகவும் ஏழைகளாக இருக்கின்றனர். இவர்களின் வயிற்றில் அடித்துத்தான் இந்த ஒன்றிய அரசு நடந்துகொண்டிருக்கிறது.
இந்திய நாட்டின் பொருளாதாரம் உலகின் மிகச் சிறந்த பொருளாதாரமாக வளர்ந்து விட்டது என்று மோடியின் பரிவாரங்கள் சொல்கின்றனர். ஜி20 மாநாடு என்று ஒன்றை நடத்தினார்கள். அந்த மாநாட்டிற்கு தலைமைப் பொறுப்பு ஏற்றதன் காரணமாக, வளர்ந்த நாடுகளுக்கு நாம் தலைவராகிவிட்டோம் என்று அறிவித்தார்கள். உண்மையில் தனி நபர் சராசரி வருமானத்தில் இந்தியா இந்த 20 நாடுகளில் அடிமட்டத்தில் இருக்கிறது. மக்களின் வாழ்வாதார குறியீடு 20வது இடத்தில் இருக்கின்றது. வேலையின்மையில் இந்தியா 20ஆவது இடத்தில் இருக்கிறது. பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாகவும் ஏழைகள் மிக ஏழைகளாகவும் மாறியுள்ளனர்.
மக்களிடம் அம்பலப்படுத்துவோம்
மோடியின் சில நண்பர்களுக்காக இந்த நாடு கொள்ளை அடிக்கப்படுகிறது. பொதுத்துறை தனியார் மயமாக்கப்படுகிறது. பொதுச்சேவைகள் தவிர்க்கப்படுகின்றது. பொதுச் செலவு அதிகமாகி இருக்கின்றது. போதுமான, சத்தான உணவு அனைவருக்கும் கிடைக்கவில்லை. உண்மைகளை மறைத்து பொய்களை சொல்வதன் மூலமாக அவர்கள் வென்று விடலாம் என நினைக்கின்றனர். நமது கடமை இந்த பொய்களை மக்களிடம் அம்பலப்படுத்துவதுதான்.
மாநிலங்களை நசுக்கும் மோடி அரசு
அரசியல் சாசனத்தின் முதல் பிரிவில் இந்தியா ஒரு கூட்டு பொருளாதாரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் ஒன்றியமே ஒன்றிய அரசு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மோடி அரசு இந்தியாவை எதேச்சதிகார ஆட்சிக்கு உட்படுத்த முனைகிறது.
மாநில அரசுகளை நிதிப் பற்றாக்குறையில் ஆழ்த்தி நசுக்குகின்ற முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதற்கு எதிராக கேரள அரசும் தமிழக அரசும் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளனர். ஒன்றிய அரசுக்கு வரும் வரி வருவாயில் 42 விழுக்காடு மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என நிதிக் கமிஷன் பரிந்துரைந்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்கு 30 விழுக்காடு வரைதான் வரி வருவாயை பங்காதாயமாக வழங்கி வருகின்றனர்.
பூஜ்ய உத்தரவாதம்
2 கோடிப் பேருக்கு வேலை கொடுப்பதாக மோடி தெரிவித்தார். இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துள்ளது. ஏமாற்றுவது மட்டும்தான் மோடியின் வேலை எனவேதான் சொல்கின்றோம். மோடியின் உத்தரவாதம் பூஜ்ய உத்தரவாதம். இந்த ஒன்றிய அரசு ஏகாதிபத்தியத்தின் ஆதரவுடன் நடைபெற்று வருகின்றது. வெறுப்பு அரசியல் தீவிரம் அடைவதைப் பார்க்கின்றோம்.
நாட்டின் சுதந்திரத்திற்காகவும், ஒற்றுமைக்காகவும் போராடியவர்கள் நாம். தமிழ்நாட்டு மக்கள் ஒட்டு மொத்த இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு இத்தேர்தலில் பாஜகவைத் துடைத் தெறிய வேண்டும்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார். அவரது உரையை தாமஸ் பிராங்கோ தமிழாக்கம் செய்தார்.