மதுரை, பிப். 1- கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை மாநகராட்சி 2 ஆவது வார்டு அசோக் நகரில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியின் போது மண் சரிவு ஏற்பட்டு தொழிலாளி ஒருவர் பலியானார். உரிய பாதுகாப்புடன் தொழிலாளிகள் பணி செய்திட ஒப்பந்ததாரர்களுக்கு மேயர், மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதன்பின்னர் பாதுகாப்பற்ற நிலையில் தொழிலாளிகளை பணி செய்ய வைக்கும் ஒப்பந்த நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 1 புதன்கிழமையன்று 2 ஆவது வார்டு அஞ்சல் நகரில் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. இங்கு வேலை செய்யும் தொழிலாளிக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை. மண் சரிவை தடுப்பதற்கான ஏற்பாடுகளோ இல்லை. தொழிலாளி குழிக்குள் உள்ளே இறங்கி வேலை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.. இது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மேயர் ,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோர் ஒப்பந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி செய்யும் தொழிலாளிக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் வலியுறுத்தினர்.