கும்பகோணம், டிச.23- தஞ்சாவூர் மாவட்டம் திருப்ப னந்தாள் ஒன்றியம் இந்திய மாணவர் சங்க மாநாடு குடந்தை அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு கே.சந்தோஷ் குமார் தலைமை தாங்கினார். அமைப்பின் கொடியை மாணவர் சங்க மாநில துணை செயலாளர் ஜி.அரவிந்தசாமி ஏற்றினார். ஏ.அன்புமணி வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்துரு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஒன்றிய தலைவர் சுருதி நன்றி கூறினார். மாநாட்டில் திருப்பனந்தாள் ஒன்றிய தலைவராக சுருதி, செயலாளராக சந்துரு உள்ளிட்ட 19 பேர் கொண்ட ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது. திருப்பனந்தாள் ஒன்றியம் முழுவதும் உள்ள அரசு பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை வசதியை மேம்படுத்திட வேண்டும், குறிச்சியில் உள்ள தமிழ் பால் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை அகற்ற வேண்டும், பாலியல் குற்றங்களை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.