மதுரை, மே 30- கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் வண்டிகளை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மதுரை-இராமேஸ்வரம், மதுரை-தேனி இடையே இயக்கப்படும் ரயில்களில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டுமென தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் கோட்டச் செயலாளர் ரா.சங்கரநாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மதுரை- இராமேஸ்வரம் ரயில் முன்பு மூன்று முறை இயக்கப்பட்டு வந்தது. மதியம் 12-30 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு இராமேஸ்வரத்திற்கு மாலை 4-30 மணிக்கு செல்லும் வகையிலும் இராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 12-15 மணிக்குப் புறப்பட்டு மாலை 4-15 மணிக்கு மதுரை வந்தடையுமாறு இயக்க வேண்டும். மதுரை- தேனி மார்க்கத்தில் இயக்கப்படும் பயணிகள் ரயில் மதுரையில் இருந்து காலை 8-30 மணிக்கு புறப்பட்டு 9-35 மணிக்கு தேனி வந்தடைகிறது.
மறு மார்க்கத்தில் தேனியில் இருந்து மாலை 6-15 மணிக்கு புறப்பட்டு இரவு 7-35 மணிக்கு மதுரை வந்தடைகிறது. கிட்டத்தட்ட ஒன்பது மணிநேரம் ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் ஓட்டுநரும், ரயில் மேலாளரும் காத்திருக்கும் நிலை உள்ளது. மதுரை-தேனி மார்க்கத்தில் மதுரையில் இருந்தும், தேனியில் இருந்தும் காலை, மதியம், மாலை மூன்று முறை ரயிலை இயக்கினால் பொதுமக்கள் குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள், மாணவர்கள், சிறு வியாபாரிகள் பெரிதும் பயனடைவர். தேஜாஸ், குருவாயூர், பெங்களூர் ரயில்களை இணைக்குமாறு ரயில்வே கால அட்டவணையை அமைக்க வேண்டும் என்றார். கால அட்டவணை மாற்றம் இதற்கிடையில் மதுரை - தேனி - மதுரை ரயில்கள் கால அட்டவணையில் ஜூன் 1 முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை - தேனி முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் மதுரையில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 25 நிமிடங்கள் முன்னதாக காலை 8.05 மணிக்கு புறப்பட்டு காலை 9.35 மணிக்கு தேனி சென்று சேரும். மறு மார்க்கத்தில் தேனி-மதுரை முன்பதில்லாத விரைவு சிறப்பு ரயில் தேனியில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு இரவு 07.35 மணிக்கு பதிலாக இரவு 07.50 மணிக்கு மதுரை வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம்-வேளாங்கண்ணி எர்ணாகுளம்-வேளாங்கண்ணி எர்ணாகுளம் வழித்தடத்தில் இயங்கும் ரயில் இரண்டு மார்க்கத்திலும் திருவில்லிபுத்தூர் ரயில்வே நிறுத்தத்தில் நின்று செல்ல ஏதுவாக, ரயில்வே அட்டவணையை மாற்றி அமைக்கவேண்டுமெனவும் திருவில்லிபுத்தூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.