மதுரை, மார்ச் 5- மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில் மீண்டும் கண்கட்டி வித்தை நடத்த முயற்சித்தது மோடி அரசு. நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அதை உடனடி யாக அம்பலப்படுத்தியதால், அரை மணி நேரத்திலேயே சம்பவ இடத்திலிருந்து ஓட்டம் பிடித்தது எல் அண்ட் டி நிறுவனம்.
ஐந்தாண்டு காலமாக ஒற்றைச் செங்க லோடு மோடி அரசின் வஞ்சகத்தை, மாய்மாலத்தை அம்பலப்படுத்தியவாறு நின்றுகொண்டிருக்கிறது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம்.
இந்நிலையில் மார்ச் 5 செவ்வாயன்று திடீரென, மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் துவங்கிவிட்டதாகவும் அதற்கான பூமி பூஜை சம்பந்தப்பட்ட இடத்தில் நடந்து கொண்டி ருக்கிறது எனவும் பரபரப்புச் செய்திகள் வெளியாகின. மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனைக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மிகப்பெரிய கட்டிடத்தின் வரைபடத்தோடு “எய்ம்ஸ் மதுரை திட்ட கட்டுமானப் பணிகள்” என்று குறிப்பிட்டு 05.03.2024 என தேதியிட்டு மிகப்பெரிய விளம்பரப் பதாகை வைக்கப்பட்டு எல்அண்ட்டி கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த நபர்கள் பூமி பூஜையில் ஈடுபட்டுக் கொண்டி ருந்த படங்களும் வெளியாகின.
ஆனால் அதிகாரப்பூர்வமாக கட்டுமானப் பணிகள் குறித்த அறிவிப்பு எதுவும் முன்கூட்டியே வெளியாகவில்லை.
இதுகுறித்து விமர்சித்த சு.வெங்கடேசன் எம்.பி., “கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வந்து சென்றார். ஒன்றிய அரசு உண்மையிலேயே மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனையின் கட்டுமானப் பணிகளை துவக்குவதாக இருந்தால் பிரதமர் மோடி தலைமையிலேயே அதை பிரம்மாண்டமாக செய்திருக்க முடியும். ஆனால் யாருக்கும் தெரி யாமல், தமிழ்நாடு அரசுக்கோ, மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கோ, மதுரை நாடாளுமன்ற உறுப் பினருக்கோ, அந்த இடம் அமைந்துள்ள விருதுநகர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பின ருக்கோ - என எவருக்கும் தெரியாமல், எவரையும் அழைக்காமல் திடீரென பெரிய பேனர் வைத்து கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை நடத்துகிறார்கள் என்றால் இது எப்பேர்பட்ட மோசடி! இது மிகப்பெரிய ஏமாற்று நாடகம்; கண்கட்டி வித்தை ” என்று சு.வெங்கடேசன் கடுமையாக சாடினார்.
அவர் மேலும் கூறுகையில், 2019 ஏப்ரலில் தேர்தல் நடந்தது; அந்தத் தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் நோக்கத்துடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஐந்தாண்டு காலம் ஒற்றைச் செங்கல் மட்டுமே அங்கே நின்றது. தற்போது மீண்டும் ஏப்ரலில் தேர்தல் வருவ தால் மார்ச் மாதத்தில் கட்டுமானப் பணியை துவக்குவதாக ஒரு நாடகம் நடத்தியிருக் கிறார்கள். பூமி பூஜை போட வந்தவர்கள் எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கான வேலைத் திட்டத்தை முறையாக வெளியிடவில்லை. எனவே இது மிகப்பெரிய மோசடி என்றும் சு.வெங்கடேசன் கூறினார்.
அவரது பேட்டி வெளியான நிலையில், கட்டுமானப் பணியை துவக்குவதாக வந்திருந்த எல் அண்ட் டி நிறுவனத்தார் பூமி பூஜையோடு ஓட்டம் பிடித்தனர்.
இதனிடையே 33 மாதங்களில் கட்டுமானப் பணி முடிவடையும் என்று எய்ம்ஸ் நிர்வாக இயக்குநர் செய்தி வெளியிட்டுள்ளார்.