districts

மதுரை துணை மேயராகும் சிபிஎம் கவுன்சிலர் டி.நாகராஜன் மக்கள் பணியை மேலும் சிறப்பாகச் செய்ய மார்க்சிஸ்ட் கட்சிக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு

மதுரை, மார்ச் 3- மதுரை மாநகராட்சி துணை மேயர் பதவி திமுகவின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் செவ்வாயன்று துணை மேயர் வேட்பாளர் அறிவிப்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக் குழு உறுப்பினரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன், மாநிலக் குழு உறுப்பினர் இரா.விஜயராஜன் ஆகியோர், வேட்பாளராக டி.நாகராஜன் போட்டியிடுகிறார் என அறிவித்தனர்.  இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்டச் செயலாளர் மா.கணேசன், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மதுரை மாநகராட்சியில் அமோக வெற்றி பெற்றுள்ளது. இது மக்கள் பணி செய்வதற்காக வெற்றியாக நாங்கள் கருதுகிறோம். துணை மேயர் பதவி கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கியுள்ளார்கள். இது மக்கள் பணியை சிறப்பாக செய்வதற்கு மார்க்சிஸ்ட் கட்சிக்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு. அந்த அடிப்படையில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினரும் தற்போது ஜெய்ஹிந்துபுரம் 80 வது வார்டில் வெற்றி பெற்ற கவுன்சிலருமான நாகராஜன் அவர்களை துணைமேயர் பதவிக்கு நாங்கள் அறிவித்துள்ளோம்.

அவர் தொடர்ந்து பல்வேறு மக்கள் நலப் பணிகளை செய்து வருகிறார். மாநகராட்சி துணை மேயர் என்ற பொறுப்புடன் மக்களுக்கான பணிகளை சிறப்பாக செயல்படுவார்” என்று கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறுகையில், “துணை மேயர் வேட்பாளர் டி.நாகராஜன் (45) சமூகவியலில் பட்டப்படிப்பையும் வழக்கறிஞருக்கான பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். இளம் வயதிலேயே பொது வாழ்விலும், மக்கள் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவராக செயல்பட்டவர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தின்  மாவட்டத் தலைவராக தற்பொழுது செயல்பட்டு வருபவர்.  1994 ல் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்து கிளைச் செயலாளராக, ஜெய்ஹிந்தபுரம் பகுதிக் குழு உறுப்பினராக செயல்பட்டு தற்போது கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு உறுப்பினராக செயல்பட்டு வருபவர். தொடர்ந்து அப்பகுதியில் பல்வேறு மக்கள் நல பணிகளையும் செய்துள்ளார். மதுரை மாநகராட்சி அனைத்து வகை நலத்திட்டங்களையும் முறைப்படி செயல்படுத்துவார்” எனத் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய துணை மேயர் வேட்பாளர் நாகராஜன், “மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மதுரையின் வளர்ச்சிக்கான குழுவில் இடம் பெற்றுள்ளதால் அவருடன் இணைந்து பல்வேறு மக்கள் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு செயல்படுத்தப்படும்” என்று கூறினார்.  செய்தியாளர் சந்திப்பின்போது  மாநிலக்குழு உறுப்பினர் எஸ். பாலா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே. வசந்தன், ஜா. நரசிம்மன், அ. ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.