districts

img

மதுரை ஆவினில் பால் வரத்து குறைவு

மதுரை, ஏப்.26-  மதுரையில் 1967ஆம் ஆண்டு முதல் 39 ஏக்கர் பரப்பளவில் ஆவின் தொழிற்சாலை இயங்கி வருகிறது, மதுரையில் இருந்து தான் தென்மாவட்டங்களுக்கு பால் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை ஆவினில்  பால் வரத்து குறைந்ததால் நெய், வெண்ணெய், பால் பவுடர், பால்கோவா உள்ளிட்ட ஆறு வகையான பொருட்கள் தயாரிப்பு முடங்கியுள்ளது, இதனால் மதுரை ஆவினில் இருந்து மதுரை மாவட்டத்தில் உள்ள 1140 சேவை மையங்கள் (பால் பூத்துக்கு)நெய் உட்பட 6 வகையான பொருட்கள் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் ஆவின் விற்பனை மையங்களில் நெய் மற்றும் ஆவின் பொருட்கள் கிடைக்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டச்  முத்துப்பாண்டி கூறுகையில், 2019ஆம் ஆண்டு பால் உற்பத்திக்கான விலையை தமிழக அரசு உயர்த்தி வழங்கியது.

அதற்குப்பின் தற்போது வரை பால் உற்பத்திக்கான விலையை உயர்த்தி வழங்கவில்லை. அதேபோல் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகை என்பது கடந்த காலங்களில் 15 நாட்கள் பால் கொள்முதல் செய்த பணத்தில் 10 நாட்கள் பணத்தை வழங்கி விடுவார்கள். தற்போது 25 நாட்கள் கழித்துதான் அந்த பத்து நாள் தொகை என்பது வழங்கப்படுகிறது. இரண்டாவது காரணம் 50 கிலோ மாட்டு தீவனம் வாங்குகிறோம் .என்றால் அதில் 200 ரூபாய் மானியம் என்பது வழங்கப்பட்டு வந்தது கடந்த 8 மாதங்களாக அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது. மூன்றாவது பால் உற்பத்தியாளர்களுக்கு 25 நாள் பணம் வழங்க வேண்டும் என்றாலும் அதில் 10 நாள் பணத்தை ஆன்லைன் மூலமாக தான் வழங்குகிறார்கள். இதனால் உற்பத்தியாளர்களுக்கு மட்டுக்கான தீவனம் மற்றும் இதர பால் உற்பத்திக்கான விவசாய இடுபொருட்கள் வாங்குவதில் மிகப் பெரும் சிரமம் ஏற்படுகிறது. தனியார் பால் நிறுவனங்கள் 10 நாட்கள் பால் கொள்முதல் செய்தால் அதில் ஏழு நாட்களுக்கான தொகையினை வழங்கி விடுகிறார்கள். இதன் காரணமாகவே தனியார் பால் கொள்முதல் நிலையங்களை நோக்கி உற்பத்தியாளர்கள் செல்லக்கூடிய சூழ்நிலை  ஏற்பட்டுள்ளது.

அதேபோல் தமிழக அரசு பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 3 ரூபாய் குறைத்துள்ளது. இதை ஈடு செய்யும் வகையில் அதற்கான தொகையை ஆவின் நிறுவனத்திற்கு அரசு வழங்க வேண்டும். ஆனால் அதை ஆவின் நிறுவனம் ஈடு செய்து கொள்ளும் என்று பால்வளத்துறை அமைச்சர் கூறுகிறார். இதனால் மதுரை மாவட்டத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 5 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது .இதை ஈடு செய்தால் பால் முகவர்களுக்கு வழங்கக்கூடிய தொகை என்பது சரியான முறையில் கிடைக்கும் அதே போல் உற்பத்தி விலை என்பதை 32 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக உயர்த்த வேண்டும். இதன்மூலம் ஆவின் நிர்வாகமும் நஷ்டத்தில் இருந்து லாபத்தில் செயல்படும் உற்பத்தியாளர்களும் நஷ்டத்தில் இருந்து விடுபடுவார்கள் என்று கூறினார். பொதுமக்கள் கூறுகையில், ஆவின் நிர்வாகமும் தமிழக அரசும் இது போன்ற குறைகளை நீக்கி தரமான உற்பத்தியை பெருக்கி பொதுமக்களுக்கு பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.