மதுரை, மார்ச் 3- மதுரையில் ரயில்வே மைதானம் மீட்கப் பட்டதற்கான வெற்றி விழா கூட்டம் ஞாயிறன்று அர சரடி ரயில்வே விளையாட்டு மைதானம் மற்றும் நில பாதுகாப்புக்குழு தலைவர் பி.பால்சாமி தலைமையில் உற்சாகத்துடன் நடைபெற்றது.
இதில் சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் மா.கணேசன், துணை மேயர் தி.நாக ராஜன், அரசரடி ரயில்வே விளையாட்டு மைதானம் மற்றும் நில பாதுகாப்புக்குழு பொருளாளர் சுடலைமுத்து, துணைத் தலைவர் ராஜாராம், நிர்வாகிகள் இரா.லெனின், வை.ஸ்டாலின், தடகள வீராங்கனை பாண்டீஸ்வரி, மதுரை மாவட்ட தடகள சங்க செயலாளர் உஸ்மான் அலி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தோனி ஆடிய களம் ரயில்வே மைதானங்கள்
நிகழ்ச்சியில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;
மதுரை ரயில்வே மைதானம் மதுரையி னுடைய சொத்து மட்டுமல்ல, விளையாட்டு வீரர்களுக்கு இதயம் போன்ற ஒரு இடம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே மைதானங்களை தனியாருக்கு தர ரயில்வே வாரியம் முடிவு செய்தது. இதை எதிர்த்து நாடாளு மன்றத்தில் பேசினேன். பி.டி.உஷா ஓடிய தடம், எம்.எஸ்.தோனி ஆடிய களம் இந்தியாவின் ரயில்வே மைதானங்கள் தான்; அதனை தனியாருக்குத் தர அனுமதிக்க மாட்டோம் என்று கூறினோம்.
இந்தியா முழுவதும் 40-க்கும் மேற்பட்ட ரயில்வே மைதானங்களை தனியாருக்கு கொடுக்க முயற்சி நடைபெற்றது. அப்போது அதில் மதுரை ரயில்வே மைதானம் இல்லை. ஆனால், அதன்பிறகு மதுரை ரயில்வே மைதானத்தையும் தாரைவார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அரசரடி ரயில்வே மைதானம் 12 ஏக்கர். இன்றைக்கு இதன் சந்தை மதிப்பு பல நூறு கோடி ரூபாய் இருக்கும். இதனைப் பாதுகாக்க உடனடியாக தலையீடு செய்தோம். தொடர்ந்து இரண்டு மிகப்பெரிய இயக்கங்கள் நடத்தினோம்.
1 லட்சம் கையெழுத்துக்கள்
அதில் முதலாவதாக கையெழுத்து இயக்கம். அதில் முதல் கையெழுத்தை சட்டமன்ற உறுப்பி னர் கோ.தளபதி கையெழுத்திட்டுத் துவக்கி வைத்தார். அதன் பின் மதுரையில் உள்ள சுமார் ஒரு லட்சம் மக்கள் கையெழுத்திட்டுள்ளனர். அந்த ஒரு லட்சம் கையெழுத்துகளும் மைதானத்திற்கு தொடர்பு இல்லாதவர்கள் என்று யாரையும் சொல்ல முடியாது. இந்த ரயில்வே மைதானத்தில் பல்லாண்டுக் காலமாக நடைப்பயிற்சி மேற் கொண்டவர்கள் மற்றும் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களும் கையெழுத்திட்டார்கள்.
‘‘மாரத்தான் அல்ல மதுரைக்காகத்தான்’’
பின்னர் இரண்டாவது முறை 5 ஆயிரம் வீரர்கள் கலந்துகொண்ட ‘‘மாரத்தான் அல்ல மதுரைக்காகத்தான்’’ என்ற விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. இதற்காக முயற்சி எடுத்துக் கொண்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி யை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதில் எவ்வளவு பேர் உணர்வுப்பூர்வமாக ஈடுபட்டார்கள் என்று தெரியும். இந்த ரயில்வே நிலத்தை தனியார் முதலாளிகளுக்கு கொடுக்கும் திட்டத்தைக் கைவிடக்கோரி நாடாளுமன்றக் கூட்டத்தின் கடைசி நாள் ரயில்வே அமைச்சரை சந்தித்தேன். அப்போது அவரிடம் ‘‘மதுரை ரயில்வே மைதானத்தை தனியாருக்கும் கொடுக்கும் முயற்சியைக் கைவிட வேண்டும்’’ என்று கூறினேன். இந்த பிரச்சனையில் தலையீடு செய்கிறேன் என்று உறுதியளித்தார்.
12 ஏக்கர் நிலம் சம்பந்தமான பிரச்சனை மட்டுமல்ல
கடந்த வாரம் மதுரையில் நடைபெற்ற மதுரை மண்டல ரயில்வேயின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கானக் கூட்டத்திற்கு வந்திருந்த தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் இந்த பிரச்சனையை கூறினேன். அப்போது ‘‘மதுரை ரயில்வே மைதானத்தை எந்த வகையிலும் நாங்கள் தனியாருக்கு கொடுக்கும் முயற்சியை மேற்கொள்ள மாட்டோம்’’ என்று உறுதியளித்தார். அவருக்கும், அமைச்சருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இது ஒரு மிகப்பெரிய வெற்றி. இது மதுரை யில் 12 ஏக்கர் நிலம் சம்பந்தமான பிரச்சனை மட்டுமல்ல; தமிழகத்தில் இனி எந்த ஒரு ரயில்வே மைதானத்தையும் தனியாருக்கு கொடுக்கும் முயற்சியில் ஈடுபடமாட்டார் என்ற நம்பிக்கையை இந்த போராட்டத்தின் வெற்றி தமிழகம் முழுமைக்கும் ஏற்படுத்தியுள்ளது.
இது ரயில்வே நிலமல்ல; ‘கணபதி ஏந்தல் கண்மாய்’
இந்த பிரச்சனையில் இதுவரை வெளியில் சொல்லப்படாத ஒரு செய்தியைக் கண்டறிந்துள் ளோம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி மாநில அரசின் நில நிர்வாக ஆணை யருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் ஒரு கடிதம் எழுதினேன்.
இந்த ரயில்வே மைதானம் தமிழ்நாட்டின் வரு வாய்த்துறை ஆவணங்களில் ‘கணபதி ஏந்தல் கண்மாய்’ என்று இருக்கின்றது. கணபதி ஏந்தல் கண்மாய் ‘வருவாய்த் துறைக்கு சொந்தமானது. இக்கண்மாயை ரயில்வே துறை எப்படி ஆக்கிரமித்தது? அதை ரயில்வே துறைக்கு யார் மாற்றி கொடுத்தார் என்பது குறித்து முழுமை யான விசாரணை நடத்தி எங்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று கடிதம் எழுதினேன்.
அதன் விளைவாக, இப்போது இந்த இடம், மாவட்ட வருவாய்த் துறை ஆவணங்களின் அடிப்ப டையில் வருவாய்த் துறைக்கு சொந்தமானது; இது எப்படி ரயில்வே நிர்வாகத்திற்கு சென்றது; எனவே இந்த நிலத்தை விட்டு ரயில்வே நிர்வாகம் வெளியேற வேண்டும் என்று தற்போது மதுரை மாவட்ட நிர்வாகம் ரயில்வே நிர்வாகத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
இந்த வழக்கு நூறு சதவீதம் வெற்றி பெறப் போகின்ற வழக்கு. ரயில்வே துறையிடம் ரயில்வே துறைக்கான நிலம் தான் என்பதற்கு எந்த ஆவணமும் கிடையாது. வருவாய்த் துறையின் அனைத்து ஆவணங்களிலும் கணபதி ஏந்தல் கண்மாய் என்று தான் இருக்கின்றது. எனவே தான் மதுரை மாவட்ட நிர்வாகம் வழக்கு தொடுத்துள்ளது.
100 சதவீதம் வெற்றி கிடைக்கும்
வழக்கமாக ரயில்வே நிர்வாகம் தான் எங்க ளுடைய நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்துள்ளார் என்று வழக்கு போடுவார்கள். ஆனால் இந்த பிரச்சனையில் ரயில்வே துறை வருவாய்த்துறை க்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துள்ளது என்று தமிழ்நாடு அரசுத் தரப்பில் வழக்கு போட்டுள்ளது. இதில் 100 சதவீதம் வெற்றி கிடைக்கும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
தற்போது மதுரை மக்கள் இரண்டு வெற்றிகள் பெற்றுள்ளோம். ஒன்று இந்த நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு கொடுக்க மாட்டோம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இரண்டா வது வெற்றி, இந்த நிலமே ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமில்லை என்று தமிழ்நாடு அரசு வழக்கு போட்டுள்ளது.
எனவே என்றென்றைக்கும் இது விளையாட்டு வீரர்களுக்கும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர் களுக்கும் தான் சொந்தம். அந்த வகையில் நூறு சதவீதம் மதுரை மக்கள் வெற்றி பெற்றுள் ளார்கள். இந்த வெற்றியை மதுரை மக்கள் கொ ண்டாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் மா. ஜெயராமன், மூவேந்திரன், மகாலட்சுமி, அழகு சுந்தரம், சி.நாகநாதன், வை.ஜென்னியம்மாள், டி.குமரவேல், ரயில்வே நில பாதுகாப்பு குழு நிர்வாகிகள் பி.ஜீவா, டி.செல்வராஜ், சரவணகுமார், முத்துப்பாண்டி, சிங்கராஜ், சேந்தன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.