districts

நீர்நிலைகளில் அமைந்துள்ளதா சாஸ்த்ரா பல்கலைக்கழகம்?

சென்னை, ஆக. 9 - தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் கிராமத்தில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் அதன் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு  வருகின்றன. இந்தப் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி கட்டிடங்கள் நீர் நிலைகளில் அமைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தமிழக அரசு தனது  கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் பல அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன. அதனடிப் படையில் நான்கு வாரங்களுக்குள் இடத்தை காலி செய்யும்படி தஞ்சாவூர்  வட்டாட்சியர் தரப்பில் பல்கலைக் கழகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. மேலும் கடந்த 35 ஆண்டுகளாக  அனுபவித்து வரும் 31.37 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு ஒதுக்கும்படியும், வித்தியாசத் தொகையும் செலுத்தத் தயாராக இருப்பதாகவும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வைத்த கோரிக் கையை தமிழக அரசு நிராகரித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்  நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா  அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சாஸ்த்ரா பல்கலைக் கழகம் தரப்பில், அரசு நிலத்துக்கு பதிலாக வேறு நிலத்தை மாற்றிக் கொள்ளும் வகையில் கடந்த மே மாதம்  தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள் ளதாகவும், அதன்படி மாற்று இடம் வழங்கத் தயாராக இருப்பதாகவும், அதற்கு அனுமதிக்க கோரி அரசுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரி விக்கப்பட்டது. அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படுமா என்பதை அரசு விளக்கினால், இந்த வழக்கை நடத்த  ஏதுவாக இருக்கும் என தெரிவிக்கப் பட்டது.

அப்போது தமிழக அரசு தரப்பில், ஆக்கிரமிப்பின் மீது 35 ஆண்டு களாக நடவடிக்கை எடுக்க விடாமல்  பல்கலைக்கழக நிர்வாகம் தடுப்பதாக வும், சீல் வைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தின்  பிற பகுதிகளில் சிறுசிறு ஆக்கிரமிப்பு களை அகற்றச் சென்றால், முதலில் சாஸ்த்ரா அக்கிரமித்துள்ள நிலத்தை மீட்டெடுங்கள் என பொதுமக்கள்  வலியுறுத்துவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நீர் நிலை ஆக்கிரமிப்பு உள்ளதால் மாற்று இடம் பெறும் அரசாணை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சாஸ்த்ரா ஆக்கிரமித்துள்ள 30 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில் ஒரு பகுதி நீர்நிலை என்பதால் மே மாத அரசாணை பொருந்தாது என அரசு கூறுவதால், ஆக்கிரமிப்பு நிலம் நீர்நிலைதான் என்பதை நிரூபிப்பதற்கான ஆவணங் களை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தர விட்டனர். அரசின் நடவடிக்கையால், அங்கு தங்கியுள்ள மற்றும் படிக்கின்ற  மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதால், வழக்கு  முடியும் வரை சாஸ்த்ரா பல்கலைக் கழக கட்டடங்கள் சென்னை உயர்  நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருக்கும் என உத்தரவிட்டு, வழக்கு விசார ணையை ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

;