districts

விருதுநகரில் முன்னேற்பாடுகள் ஏதுமின்றி நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாம்

விருதுகர், ஜுன் 17- விருதுநகரில் எந்தவித முன்னேற்பாடுகளுமின்றி  தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றதால் வேலை நாடுநர்கள் அலைக்கழிப்புக்கு உள்ளாகினர், விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது, இதில் ஏராளமான மிகப்பெரிய நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன எனவும், படித்து முடித்த இளைஞர்கள் அதில் கலந்து கொண்டு  தாங்கள் விரும்பும் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்லலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் மூலம் பத்திரிகை செய்தி வெளியிடப்பட்டு வருகிறது, இந்நிலையில்.  வெள்ளிக்கிழமை சூலக்கரையில் நடைபெற்ற  தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பெரும்பாலும் சிறிய நிறுவனங்களே கலந்து கொண்டது தெரிய வந்தது, மேலும். பல நிறுவனங்கள். தங்களுக்கு பிளஸ் 2 அல்லது ஐடிஐ  அளவிற்கு படித்தவர்கள் போதும் என வெளிப்படையாக கூறி வந்திருந்தவர்களிடம் தெரிவித்தனர். இதனால் பட்டம் படித்து  வரிசையில் வேலைக்காக காத்திருந்தவர்கள் ஏமாற்றம்டைந்தனர்.  மற்றொரு அறையின் முன்பு ஆண்களும். பெண்களும் நின்று கொண்டிருந்தனர். அதில் ஒரு  நிறுவனம் தங்களுக்கு ஆண்கள் மட்டுமே தேவை எனக் கூறியதால் பெண் வேலை நாடுநர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும். மாவட்டம் முழுவதும் டிப்ளமோ முடித்த லேப் டெக்னீசியன்களை வேலை வாய்ப்பு அலுவலகமே கடிதம் போட்டு வேலைவாய்ப்பு முகாமிற்கு வரவழைத்திருந்தது, இவர்களுக்கு 108 ஆம்புலன்சில் வேலை கிடைக்க உள்ளது எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது, இதனை நம்பி 10க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்கள் வந்திருந்தனர், ஆனால், 108 ஆம்புலன்ஸ் நிர்வாகமோ, லேப்-டெக்னீசியன்களை வேலைக்கு எடுப்பதை நிறுத்தி விட்டோம் எனக் கூறி அனைவரையும் திருப்பி அனுப்பினர்.  இதனால் வேலைநாடுநர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

முகாம் நடத்தும் அலுவலர்களுக்கு இது தெரியாதா, ஏன் எங்களை வீணாக அலைக்கழிக்க வேண்டும். வேலையை இழந்து பேருந்து கட்டணம் செலவு செய்து வந்தும் பலனில்லை என மனமுடைந்து திரும்பிச் சென்றனர். மேலும் பலர் ,சிறிய நிறுவனங்கள் மட்டுமே வந்திருந்ததால் முகாமில் பங்கேற்காமலேயே வீடுகளுக்கு திரும்பினர். இதனால் முகாம் துவங்கிய சிறிது நேரத்திலேயே வேலைவாய்ப்பு அலுவலக வளாகம் வெறிச்சோடியது. மேலும், வேலைநாடுநர்கள் வந்தவுடன் தங்களது செல்போன் மூலம் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும். அதற்கான எண் கிடைத்த பின்பே முகாமில் கலந்து கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தினர். இதில் பலருக்கு பதிவு எண் கிடைக்க காலதாமதமும் ஏற்பட்டது. இதை முன் கூட்டியே கூறியிருந்தால் அதையும் வீட்டில் இருக்கும் போதே பதிவு செய்திருப்போம் எனவும் வேலைநாடுநர்கள் தெரிவித்தனர். முகாமில் பங்கேற்ற நிறுவனங்களின் விபரம் பெரிதாக விளம்பரப்படுத்தப்படவில்லை, சிறிய தாளில் எழுதி சுவரில் ஒட்டப்பட்டிருந்து, அது பலருக்கு தெரியவில்லை. இதனால் வேலைநாடுநர்கள் அலைக்கழிப்புக்கு உள்ளாகினர். எனவே. மாவட்ட நிர்வாகம், இனி நடைபெறும்  தனியார் வேலைவாயப்பு முகாமை முறையாகவும் நேர்த்தியாகவும். வேலைநாடுநர்களை அலைக்கழிப்பு செய்திடாமலும் நடத்திட வேண்டும் என சமூக  ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.