districts

img

நூல் வெளியீட்டு விழாவிற்கு அனுமதி அளிக்க கோரிக்கை

புதுக்கோட்டை,  டிச.31 - புதுக்கோட்டை எழுத்தாளர் மருத்துவர் நா.ஜெயராமன் எழுதிய நூலை வெளியிடுவதற்கு காவல்துறை அனுமதிக்க வேண்டுமென புதுக்கோட்டையில் உள்ள பல்வேறு அரசியல் மற்றும் இலக்கிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

புதுக்கோட்டையில் அபெகா பண்பாட்டு இயக்கத்தை நடத்தி வருபவர் மருத்துவர் நா.ஜெயராமன். இவர் கடந்த காலங்களில் பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, தான் எழுதிய ‘சாதி-கக்கூஸ்-கோவில்’ என்ற நூலை கடந்த டிச.30 அன்று வெளியிட திட்டமிட்டு இருந்தார்.

இந்நிலையில் சில இந்துத்துவா வாதிகளின் எதிர்ப்பை அடுத்து காவல்துறை நூல் வெளியீட்டு விழாவிற்கு அனுமதி மறுத்தது.  இந்நிலையில், புதுக்கோட்டையில் உள்ள பல்வேறு 32 அரசியல் மற்றும் இலக்கிய அமைப்புகள் ஒன்றுகூடி கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும் வகையில் மருத்துவர் நா.ஜெயராமனின் நூல் வெளியீட்டு விழாவிற்கு அனுமதியளிக்க வேண்டும் என புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் நிலையத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.  

திமுக மாநில இலக்கிய அணி துணைத்தலைவர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், காங்கிரஸ் நகரத் தலைவர் இப்ராஹிம் பாபு, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திலீபன், அரங்க குணசேகரன், விடுதலைக்குமரன், தமுஎகச மாவட்ட நிர்வாகிகள் ராசி.பன்னீர்செல்வன், எம்.ஸ்டாலின் சரவணன், கி.ஜெயபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.