districts

img

கிறிஸ்துவர்களிடம் செல்போன், வாகனம் பறிப்பு: ஆர்எஸ்எஸ் நிர்வாகி கைது!

கிறிஸ்துவ சகோதரிகளின் செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறித்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி கணேஷ் பாபுவைக் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் சமாதானபுரதில் உள்ள கிறிஸ்துவ தேவாலயத்தில் கன்னியாஸ்திரியாக ஊழியம் செய்துவருபவர்கள் ராணி, தேவசாந்தி. இவர்கள் இருவரும் திம்மயம்பட்டியில் கர்ப்பம் தரித்திருந்த ஒரு பெண்ணிற்கு ஜெபம் செய்வதற்காகச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதைக்கண்ட புதுக்கோட்டை மாவட்ட ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் கணேஷ் பாபு (38) தலைமையிலான ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 20க்கும் மேற்பட்டோர் அந்த இரண்டு கிறிஸ்துவ கன்னியாஸ்திரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு ஹிந்துக்களை மதம் மாற்றம் செய்ய முயற்சிக்கிறீர்களா என்று கேட்டு அவர்களைத் தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தைப் பறித்துக் கொண்டும் அவர்கள் உபயோகித்த செல்பேசியை பிடுங்கிக் கொண்டும் அவர்களைத் திட்டி விரட்டி உள்ளனர். 

இதனையடுத்து, கிறிஸ்தவ சபையினர் இலுப்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து நேற்று (சனிக்கிழமை) இரவு காவல் துறையினர் ஆர்எஸ்எஸ் நிர்வாகி கணேஷ் பாபுவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தமிழகத்தில் மத மோதலை உருவாக்கும் நோக்கில் ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்பினர் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுவருவது வாடிக்கையாக உள்ளது. மேலும், இது ஆபத்தான பின்விளைவுகளை உருவாக்கும் என சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.