குமரி மாவட்டத்திலுள்ள கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பெண் மருத்துவர், மருத்துவ மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்ததாகப் புகார்கள் எழுவதும், அடுத்தடுத்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள ஸ்ரீ மூகாம்பிகை தனியார் மருத்துவமனையில் மூத்த மருத்துவர் அங்குள்ள பயிற்சி பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை மற்றும் துன்புறுத்தல் அளித்ததன் காரணமாக அந்த பயிற்சி பெண் மருத்துவர் மரணமடைந்த சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த கட்டமாக நாகர்கோவிலில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பெண் டாக்டர் ஒருவருக்குத் தொல்லை கொடுத்ததாக மருத்துவக் கல்லூரியின் உறைவிட மருத்துவ அலுவலர் (ஆர்.எம்.ஓ) பொறுப்பில் இருந்த டாக்டர் ஆன்றணி சுரேஷ்சிங் (52) என்பவரைக் கடந்த 22-ஆம் தேதி காவல்துறை யினர் கைதுசெய்தனர். மேலும், பயிற்சி பெண் மருத்துவர்களிடம் தனக்கு மசாஜ் செய்துவிடும்படி கூறியதாகவும் ஆன்றணி சுரேஷ்சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. கைதுசெய்யப்பட்ட ஆன்றணி சுரேஷ்சிங் தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கிறார்.
இந்த நிலையில் அதே மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3-ஆம் ஆண்டு படித்துவரும் இரண்டு மாணவிகள் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனத்துக்கு ஆன்லைன் மூலமாக தனித்தனியாக புகார் மனு அனுப்பியிருந்தனர். அந்தப் புகாரில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக இருக்கும் சுசீந்திரம் அருகேயுள்ள காக்கமூர் பகுதியைச் சேர்ந்த வைரவன் (35) என்பவர் தங்களுக்குப் பல்வேறுவிதமாகப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறியிருந்தனர்.
புகார்களின் பேரில் விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில் கோட்டார் ஆய்வாளர் தலைமையில் காவல்துறை ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கு சிலரிடம் விசாரணை நடத்தியதுடன் சிலரைக் காவல் நிலையத்துக்கு அழைத்தும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி லேப் டெக்னீஷியன் வைரவன் மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 354 (A), 354(D), 509 மற்றும் பெண் வன்கொடுமைச் சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து கைது செய்தனர். இந்த நிலையில் மேலும் பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே காவல்துறை நாகர்கோவில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் அனைத்து மாணவிகளிடமும் முழுமையான விசாரணையை மேற்கொண்டு அவர்களுக்கான கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கையும்வைத்துள்ளனர்.