தூத்துக்குடி ,ஜன. 27 தில்லியில் நடைபெற்ற 12ஆவது தேசிய வாக்காளர் தினவிழாவில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு விருது வழங்கப்பட்டது. தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போது சிறப்பாக பணியாற்றிய தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு உள்ளிட்ட பலர் தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், வாக்காளர் விழிப்புணர்வு பணிகளில் 2020-2021ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்டமைக்கான தேசிய அளவிலான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருந்தார். புதுதில்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் 12ஆவது தேசிய வாக்காளர் தின விழா செவ்வாயன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த தேர்தல் நடைமுறைகளுக்கான தேசிய விருதினை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மருத்துவர் கி. செந்தில் ராஜூக்கு வழங்கினார்.