திருவள்ளூர், ஜூலை 18- கீழ்முதலம்பேட்டிலிருந்து கவரைப் பேட்டை செல்லும் தாங்கல்கரை சாலையை சீரமைத்து தார் சாலையாக அமைத்திட வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதனன்று (ஜூலை 17), ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டி அருகில் கீழ்முதலம்பேடு, மேல்முதலம்பேடு, பாலிக்காபேட்டை, அரியத்துறை, நைனாங்குப்பம், ஏ.என்.குப்பம் உள்ளிட்ட கிராம மக்கள் கவரைப் பேட்டை பஜாருக்கு செல்ல கீழ்முதலம்பேடு தாங்கல் கரை சாலையை காலம்காலமாக பயன்படுத்தி வந்தனர். இந்த ஒரு கிலோ மீட்டர் சாலை நாளடைவில் பராமரிப்பு இல்லாததால் சாலை முழுவதும் புதர்கள் மண்டி கிடந்தது. தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் நாள்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் பேருந்து மற்றும் ரயில் நிலையத்திற்கு செல்ல ஏதுவாக தாங்கல் கரை சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி கீழ்முதலம்பேடு ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது.
கிளைச் செயலாளர் கே.சிவக்குமார் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.கண்ணன், வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜி.சூரியபிரகாஷ், டி.மதன், வட்டக் குழு உறுப்பினர்கள் எம்.சி.சீனு, வி.ஜோசப் உட்பட பலர் பேசினர். பின்னர் கோரிக்கை மனுவை ஊராட்சி மன்ற தலைவர் கே.ஜி.நமச்சிவாயத்திடம் வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட ஊராட்சி மன்றத் தலைவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.