திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் மீது சமூக விரோதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்துள்ளது.
இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
நியூஸ் 7 தொலைக்காட்சியின் செய்தியாளர் நேச பிரபு காமநாயக்கன் பாளையம் கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். அவர் வெளியிட்ட செய்திக்காக இரண்டு நாட்களாக பின் தொடர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் நம்பர் பிளேட் இல்லாத வாகனத்திலும் காரிலும் வந்து சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர் போலீசாரிடம் புகார் தெரிவித்து பாதுகாப்பு கோரியுள்ளார். இருப்பினும் சமூக விரோத சக்திகள் அவருடைய வீட்டிற்கு அருகிலேயே காத்திருந்துள்ளனர். நிலைமையை உணர்ந்த நேச பிரபு அங்கிருந்து தப்பி அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று அங்கிருந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் அங்கே புகுந்த சமூக விரோதிகள் சரமாரியாக அவரை வெட்டிவிட்டு தப்பித்துள்ளனர். கொலை வெறிகொண்ட இந்த தாக்குதலில் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஏற்கனவே, செய்தியாளர் புகார் கொடுத்துவந்த நிலையில் உள்ளூர் காவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டிருப்பின் இந்த கொலைவெறித் தாக்குதல் நடந்திருக்க வாய்ப்பில்லை. உரிய நேரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளாதது சமூக விரோத சக்திகளுக்கு உதவியாக காவல்துறையினர் செயல்பட்டுள்ளனர் என்பது தெரிகிறது. எனவே, குற்றவாளிகளை விரைந்து கைது செய்து தண்டிப்பதுடன், தவறிழைத்த காவலர்கள் மீதும் துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவருக்கு உரிய சிகிச்சையை அளிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.