நெல்லையில் 18 ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐம்பொன் சிலை மீட்பு
நெல்லை : நெல்லையில் வீட்டில் வைத்து பூஜை செய்து கொண்டிருந்த ஐம்பொன் சிலையை , சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்தனர் . இந்த ஐம்பொன் சிலை பல கோடி ரூபாய் மதிப்புள்ளது என்று தகவல்.
நெல்லையில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள சிலையை வீட்டில் வைத்து பூஜை செய்வதாக காவல்துறைக்கு ரகசிய புகார் வந்தது. இதன்படி , காவல்துறை சோதனைசெய்தபோது , கோவிந்தன்(74) என்பவர் , மிகப் பழமையான இந்த ஐம்பொன் சிலையை வீட்டில் வைத்து பூஜை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 2 அடி உயரமும் 12 கிலோ எடையும் கொண்ட இந்த சிலை , 18 ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் , இது பலகோடி ரூபாய் மதிப்புள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
இது குறித்து கோவிந்தனிடம் விசாரித்தபோது , இந்த சிலையை 1990ம் ஆண்டு , அவரது உறவினர் ஒருவர் பூஜை செய்யக் கொடுத்ததாகவும் , கடந்த 30 ஆண்டுகளாக வீட்டில் வைத்து பூஜை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் மகாராஜன் முன்னிலையில் சிலையை காவல்துறை பறிமுதல் செய்தனர். எனினும் , இந்த சிலை எங்கிருந்து கொண்டுவரப்பட்டது எனச் சிலை கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவு காவல்துறை கோவிந்தனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.