districts

பணியிட மாறுதலால் ஆசிரியர் பற்றாக்குறை: பிளஸ் 2 பொதுத்தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்படுமா?

திருவாரூர்,  மே 23 -  பள்ளிக்கல்வியை பொறுத்தவரை பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின் வாழ்வில் மிக முக்கிய திருப்புமுனையாக இருக்கிறது. மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளையும் அவர்களின் எதிர்கால வாழ்க்கையையும் தீர்மானிப்பவையாக பிளஸ் 2  பொதுத்தேர்வில் பெறுகிற மதிப்பெண்கள் இருக்கின்றன. பெற்றோர் மற்றும் மாணவர்களின் கனவுக் கோட்டை நுழைவாயிலாக பொதுத்தேர்வுகள் அமைகின்றன.  கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் மாணவர்களின் கல்வித்தரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமான வகுப்பறை நடவடிக்கைகள்கூட அவர்களுக்கு அந்நியமாக இருக்கின்றன. தொடர் விடுமுறை மற்றும் பெருந்தொற்று கால தேர்வுத் தளர்வுகளால் மிகப்பெரிய உளவியல் மாற்றம் நடந்துள்ளது. சமீப காலங்களில் பள்ளி மாணவர்களின் அத்துமீறிய நடவடிக்கைகள் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வீடியோக்கள் வெளியாகி அனைத்துத் தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.  இதுகுறித்து ஆசிரியர்களை சந்தித்து விசாரிக்கிற போது, “மாணவர்களை வகுப்பறையில் ஓரிடத்தில் அமர வைப்பதே சிரமமாக இருக்கிறது. அவ்வப்போது எழுந்து நடமாடுகிறார்கள். பாடங்களை கவனிக்க வைப்பது பெருந்தொற்றுக்குப் பிறகு பெரும் சவாலாக இருக்கிறது. அவர்களுக்கு கவனச்சிதைவு ஏற்படுகிறது. இதையெல்லாம் மீறி தான் அவர்களைப் புரிந்துகொண்டு பாடம் நடத்த வேண்டியுள்ளது” என அக்கறையுடன் கூறுகின்றனர்.  கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் வீட்டிலேயே இருந்த மாணவர்களின் பெரும்பகுதி நேரத்தை வீடியோ கேம்கள் பறித்துக் கொண்டன.

ஆன்லைன் வகுப்புகளுக்காக அவர்கள் அலைபேசிகளை கையாள வேண்டிய அவசியம் ஏற்பட்டதும் அவர்களுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது. இந்த கேம்கள் அவர்களிடம் ஒரு நாயக மனப்பான்மையையும், முரட்டு மனோபாவத்தையும் ஏற்படுத்தியுள்ளன.  இத்தனை நெருக்கடிகளைத் தாண்டி 8.37 லட்சம் பேர் இந்த ஆண்டில் பொதுத்தேர்வை சந்தித்தனர். தமிழகத்தில் 3119 மையங்களில் தேர்வுகள் நடந்ததாக அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் அறிவித்தது. திருவாரூர் மாவட்டத்தில் தேர்வெழுதிய மாணவர்களிடம்  விசாரித்த போது, அறிவியல் பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாக கூறினர். மாவட்டத்தில் மொத்தமாக 220 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சுழற்சி முறையிலும் தற்காலிக ஆசிரியர்கள் மூலமும் ஓரளவுக்கு சமாளித்தாலும் அது போதுமானதாக இல்லை. இந்த பெருமளவிலான காலிப் பணியிடங்களுக்கு காரணமாக இருப்பது புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற பணியிட மாறுதல்கள்தான்.  பெருந்தொற்று கால சவால்கள், உளவியல் மாற்றம், குடும்பத்தில் நிலவும் பொருளாதார சிக்கல் என பல்வேறு காரணிகளால் மாணவர்கள் பாதிக்கப்பட்ட சூழலில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும் மாணவர்களை பாதிக்கிறது. ஆசிரியர்களே இல்லாமல் தாமாக படித்துப் புரிந்து தேர்வுக்கு தயாராக வேண்டியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் பொதுத்தேர்வு நடைபெறாது என மாணவர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர். இத்தகைய சூழலில் விடைத்தாள் திருத்தும் பணிகள் துவங்கவுள்ளன.  அரசு மாணவர்கள் நிலையையும் ஆசிரியர் பற்றாக்குறையையும் பரிசீலித்து கருணை மதிப்பெண்கள் வழங்கி, அவர்களை தேர்ச்சி பெற வைக்க வேண்டுமென்பது பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.