districts

img

குடியிருக்கும் இடத்தையே எங்களுக்கு ஒதுக்கித் தர வேண்டும்

திருச்சிராப்பள்ளி, பிப்.4-  திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 65 ஆவது வார்டு பட்டத்தம்மாள் தெருவில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.  பட்டத்தம்மாள் தெருவில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி பன்னாட்டு விமான நிலைய விரிவாக்கத்திற்காக அங்கு 100 ஆண்டு காலமாக வசித்து வரும் மக்களுக்கு மாற்றிடம் கொடுப்பதாக அன்றைய மாவட்ட ஆட்சியர் ராஜாமணி 2018 ஆம் ஆண்டு உறுதி அளித்து (அரசுக்கு சொந்தமான 19 ஏக்கர்) ஆணை பிறப்பித்தார்.  ஆனால் தற்போது அந்த இடத்தில் இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதாக அரசு முடிவு செய்துள்ளது. அரசு உறுதிமொழி கொடுத்து 7 ஆண்டுகள் முடிவடைந்தும் இன்னும் உரிய இடத்தை ஒதுக்கி கொடுக்காததை கண்டித்தும், குடியிருக்கும் இடத்தையே தங்களுக்கு ஒதுக்கி தர வேண்டும் அல்லது உரிய இடத்தை உடனடியாக ஒதுக்க வலியுறுத்தியும் பட்டத்தம்மாள் பொதுமக்களின் சார்பில் செவ்வாயன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது.  இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொன்மலை பகுதிச் செயலாளர் விஜயேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது அங்கிருந்த  பெண் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அந்த பெண்ணை மீட்டு  ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.