திண்டுக்கல், மார்ச் 1- திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம் பாறை வட்டம் வெம்பூர் கிராமம் ராமநாத புரத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை 1963ல் கட்டப்பட்டது. ஓடு வேய்ந்த கட்டட மாகவே இன்றும் சிதிலமடைந்த நிலையில் செயல்படுகிறது. மாடுகளுக்கு தண்ணீர் வைக்கும் தொட்டி கூட சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மதுப்பிரியர்கள் இங்கு வந்து இந்த கால்நடை மருத்துவமனையை பார் ஆக பயன்படுத்தி வருகிறார்கள். இந்த பகுதியில் சுற்று வட்டார கிராம மக்களுக்கு இருக்கிற ஒரே கால்நடை மருத்துவமனை என்பதால் இதனை முறையாக பராமரிக்க வேண்டும் என்று திண்டுக்கல் ஆட்சியர் உள்ளிட்ட பல அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் பயனில்லாத நிலைஉள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாக வேடசந்தூர் விவசாயிகள் சங்க தலைவர் எம்.பெரியசாமி விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் புகார் அளித்தார். இந்த மருத்துவமனையை மேம்படுத்து வதற்காக பல முறை நிதி ஒதுக்கப்பட்டு கட்டடம் கட்டாத நிலை இருந்தது. இனிமேல் அவ்வாறு நடக்காமல் உறுதியாக புதிய கட்டடம் கட்டி மருத்துவமனை பராமரிக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.