அறந்தாங்கி, மார்ச் 29 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இணைவோம்; மகிழ்வோம் நிகழ்ச்சி மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் இந்திராணி தலைமையில் தொடங்கியது. மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீனவர் காலனி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மதியழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டைப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பள்ளியின் ஆயத்த பயிற்சி மையத்தில், மாற்றுத்திறன் மாணவர்களை சக மாணவர்களோடு இணைத்து இணைவோம்; மகிழ்வோம் என்ற நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை, சக மாணவர்களோடு இணைத்து சிறு சிறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு பரிசு மற்றும் தேநீர், சிற்றுண்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுநர் அங்கையற்கண்ணி, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் கண்ணன், ஆசிரியர் பிரபாகரன், இயன்முறை மருத்துவர் செல்வகுமார், சிறப்பாசிரியர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.