திருச்சி, ஜன.20- திருச்சி மாவட்டத்தில் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் 1000க்கும் மேற்பட்டோர் மாதவ பெருமாள் கோவில் மற்றும் தாளக்குடி மாட்டு வண்டி மணல் ரீச்சுகளில் மணல் அள்ளி வந்தனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை காரணம் காட்டி கடந்த 10 நாட்களாக மணல் குவாரி மூடப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் நேரில் சந்தித்து மனு அளித்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை கனிம மற்றும் கண்காணிப்பு உட்கோட்ட உதவி பொறியாளர் அலுவலகத்தில் சிஐடியு திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம், மலைக்கோட்டை மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் மற்றும் விவசாயிகளின் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மணல் ரீச் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து சிஐடியு திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சேகர், மாவட்ட பொறுப் பாளர் சந்திரசேகர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மாட்டு வண்டி மணல் குவாரியை நம்பி 2400 மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பமும் உள்ளது. லாரிகளில் மணல் அள்ளு பவர்களுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யாமல் ஆப் லைன் மூலம் காலை 6 மணி முதல் மணல் அள்ள அனுமதிக்கின்றனர். ஆனால் மாட்டுவண்டிகளில் மணல் அள்ள ஆன்லைன் மூலம் பதிவு செய்து பகல் 10 மணிக்கு செகண்ட் சேல்ஸ் முறையில் மணல் அள்ள அனுமதிக்கின்றனர். இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மணல் அல்ல அனுமதி மறுக்கின்றனர். எனவே மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் முன்பு போலவே மேனுவல் முறையில் மாட்டுவண்டியில் மணல் அள்ளுவதற்கும், புதிய கட்டணம் ரூ.700-ஐ ரத்து செய்து பழைய கட்டணம் ரூ.224 நிர்ணயம் செய்ய வேண்டும். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் திங்கள்கிழமை இதே அலுவலகத்தில் குடும்பத்துடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என தெரிவித்தனர்.