மணல் குவாரி வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
பாபநாசம், மார்ச் 4- தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே கோவிந்த நாட்டுச்சேரி மணல் குவாரியிலிருந்து அதிக கனரக வாகனங்கள் மணல் ஏற்றிச் செல்கின்றன. இதனால், கும்பகோணம் - திருவையாறு நெடுஞ்சாலையில் கபிஸ்த லம் உள்ளிட்டப் பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் கனரக வாகனங்களால் பள்ளி, கல்லூரி மாண வர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, காலை, மாலை நேரங்களில் மணல் குவாரியிலிருந்து மணல் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களின் போக்குவரத்தை நிறுத்தம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேளாண் விரிவாக்க மையத்தில் இணை இயக்குநர் ஆய்வு
பாபநாசம் மார்ச் 4- பாபநாசம் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் ஒன்றிய, மாநில அரசு மானியத் திட்டங்க ளின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகித்திட பெறப்பட்டுள்ள ஜிப்சம், சிங்க்சல்பேட், உளுந்து, சோயா விதைகள், உயிர் உரங்கள் குறித்து தஞ்சை வேளாண் இணை இயக்குநர் நல்லமுத்துராஜா ஆய்வு மேற் கொண்டார். மேலும் அய்யம்பேட்டை அருகே ஈச்சங்குடி கிராமத்தில் வரிசை விதைப்புக்கருவி கொண்டு சாகுபடிச் செய்யப்பட்டுள்ள சோயா வயல்களை ஆய்வு செய்தார். பின்னர் விவசாயிகளின் இல்லம் தேடி உளுந்து திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு அவரது வீட்டிலேயே மானியத்தில் உளுந்து விதைகளை வழங்கினார்.
மானியத்தில் உளுந்து விதைகள்: வேளாண் உதவி இயக்குநர் தகவல்
பாபநாசம், மார்ச் 4- தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி நெல் அறு வடையை தொடர்ந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உளுந்து சாகுபடி மேற்கொள்ள உளுந்து விதை மானியத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் வழங்கிட இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இதன்படி விரிவாக்க அலுவலர்களின் தொகு திக்குட்பட்ட பஞ்சாயத்து அலுவலகங்களில் உளுந்து விதை இருப்பு செய்யப்பட்டு, மாலை வேலைகளில் விரிவாக்க அலுவலர்களால் அந்தந்த பஞ்சாயத்துகளில், மானியத்தில் உளுந்து விதை விநியோகம் செய்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, விவசாயிகள் உளுந்து சாகுபடி செய்திட, தர மான விதைகளை மானியத்தில் அவரவர் பஞ்சாயத்துக ளிலேயே பெற்றுக் கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வேளாண் உதவி இயக்குநர் சுஜாதா தெரி வித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்
திருச்சிராப்பள்ளி, மார்ச் 4- மாற்றுத்திறனாளிகளது குறைகளை தீர்க்கும் விதமாக மார்ச் 10-ஆம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. முகாமினை பயன்படுத்தி தகுதியுடைய மாற்றுத்திற னாளிகள் தாங்கள் வசிக்கும் பகுதியைச் சார்ந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை அணுகி, நீல நிற வேலை அட்டை யினை பெற்று பயன்பெறுமாறு திருச்சி மாவட்ட ஆட்சி யர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
மின் கம்பியில் உரசி வைக்கோல் லாரி எரிந்து நாசம்
கும்பகோணம், மார்ச் 4- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் கிராமத்திலிருந்து விவசாயிடமிருந்து வைக்கோல் கட்டுகளை வாங்கி ஏற்றிக்கொண்டு திரு வண்ணாமலைக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது லாரி நாச்சியார்கோவில் ரங்கம்மாள் நகர் கோவனூர் சாலையில் வந்தபோது, சாலையில் தாழ்வாக தொங்கி கொண்டிருந்த மின் கம்பியில் உரசி தீ பிடித்து வைக்கோலும், லாரியும் எரிந்தது. இதில், லாரியிலிருந்த வைக்கோல் மற்றும் லாரியின் பின்பாகம் எரிந்து சேதமானது. இதனால், சாலை மற்றும் வீடுகளில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உடனடியாக மின்சார வாரியம் அப்புறப்படுத்தி சீர் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்குறுங்குடியில் வாழைத்தார் அறுவடை மும்முரம்
திருநெல்வேலி, மார்ச் 4- திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே திருக்குறுங்குடி, மாவடி, மலையடிபுதூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழைகள் பயிரிடப்பட்டுள்ளது. ஏத்தன், ரசகதலி, கதலி, செந்தொழுவன், நாடு உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் பயிரிடப்பட்டு, அவை நன்கு வளர்ந்து தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ளன. இதனால் அந்தப் பகுதிகளில் வாழைத்தார் அறுவடைப் பணிகள் நடந்து வருகிறது. ஆனால், வாழைத்தாருக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- ஏத்தன் ரக வாழைத்தார் ஒரு கிலோ ரூ.17-க்கு விற்பனை ஆகிறது. பொதுவாக சீசன் தொடங்கும்போது ஒரு கிலோ ரூ.40 வரை விலை போகும். அதன்பிறகு தான் விலை இறங்கும். நடப்பாண்டில் சீசன் தொடக்கத்திலேயே விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. வாழைக்கு தண்ணீர் பாய்ச்சுவதில் இருந்து, உரமிடுவது, மருந்து தெளிப்பது, கம்பு கொடுத்து பாதுகாப்பது என மொத்தம் ரூ.200 வரை செலவு ஆகிறது. ஆனால் செலவழித்ததை விட மிகவும் குறைவாக அதாவது ரூ.50-க்கும் குறைவாக கிடைப்பதால் அதிக நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது என்றனர்.
கல்வி நிறுவனக் கட்டடங்களை முறைப்படுத்த வாய்ப்பு மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தகவல்
திருநெல்வேலி, மார்ச் 4- திருநெல்வேலி மாவட்டத்தில் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களை முறைப்படுத்த மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “கல்வி நிறுவனக் கட்டடங்கள் நகர் ஊரமைப்பு இயக்கத்தில் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் கடந்த 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு இந்தத் துறையால் அனுமதி வழங்கும் திட்டத்தின் கீழ் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. இதுதொடர்பான நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அப்போது விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கும் விதமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடந்த ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போதும் விண்ணப்பிக்காமல் விட்டவர்களுக்கு மற்றொரு வாய்ப்பாக வருகிற ஜூன் மாதம் வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. https://tcp.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். இதற்கு விண்ணப்பித்தவர்கள் உரிய விவரங்களைச் சமர்ப்பித்து அனுமதி பெற சம்பந்தப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்களை அணுக லாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாஞ்சோலையில் சிறுத்தை தாக்கி பெண் காயம்
திருநெல்வேலி. மார்ச் 4- களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்தில் மாஞ்சோலை வனப் பகுதியில் நாலுமுக்கு எஸ்டேட் உள்ளது. இங்கு தினந்தோறும் காலையில் தேயிலை பறிப்பதற்காக ஏராள மான தொழிலாளர்கள் பணிக்குச் செல்வது வழக்கம். அதன்படி சனிக்கிழமை காலை நாலுமுக்கு தேயிலை தோட்டத்திற்கு ஜெஸ்சி (55) என்ற பெண் வழக்கம் போல் பணிக்குச் சென்றுள்ளார். அப்போது தோட்டத்திற்குள் பதுங்கி இருந்த சிறுத்தை ஒன்று அவர் மீது பாய்ந்தது. இதில் அவருக்கு லேசான சிராய்ப்பு ஏற்பட்டது. அங்கிருந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்டு மாஞ்சோலையில் உள்ள எஸ்டேட் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கூடங்குளம் அருகே மீனவர் போராட்டம் : இரண்டாவது நாளாக நீடிப்பு
திருநெல்வேலி, மார்ச் 4- திருநெல்வேலி மாவட்ட கடலோர மீனவக் கிராமங்களின் கடற்கரையை யொட்டி ஐந்து நாட்டிக்கல் மைல் தொலைவில் தான் கன்னியாகுமரி மாவட்ட விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டும், சின்ன முட்டம், தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகங்களில் மீன் பிடிக்கும் விசைப்படகுகள் காலை ஐந்து மணி முதல் இரவு 10 மணிக்குள் மீன்பிடித்து விட்டு கரைக்குத் திரும்ப வேண்டும், நாட்டுப்படகு மீனவர்களின் மீன்பிடி உப கரணங்கள், மீன்பிடி படகுகளை சேதப்படுத்துவதை தடுக்க உயர்மட்ட அதிகாரிகளின் குழு அமைத்து தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. கூடங்குளம் அருகே இடிந்தகரை, கூட்டப்பனை, கூடுதாழை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் இணைந்து நடத்தும் இந்தப் போராட்டம் தொடர்பாக வெள்ளிக்கிழமை சபாநாயகர் அப்பாவுவை சந்தி த்து மீனவர்கள் முறையிட்டு மனு அளித்தனர். தொடர்ந்து சனிக் கிழமை இரண்டாவது நாளாக திருநெல்வேலி மாவட்ட பத்து மீனவக் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் சங்க செயலாளர் மீது தாக்குதல்: புகாரை திரும்பப் பெற காவல்துறை நெருக்கடி
நாகர்கோவில், மார்ச் 4- கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டார மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தோவாளை வட்டாரச் செயலாளர் அளித்த புகாரை ஏற்க காவல்துறை மறுத்து தாங்கள் கூறுவது போல் புகார் எழுதித் தருமாறு நிர்ப்பந்திப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.முருகேசன் விடுத்துள்ள அறிக்கை:- ‘‘தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் தோவாளை வட்டாரச் செயலாளர் எஸ்.சக்திவேல் மார்ச் 3 அன்று பூதப்பாண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் திட்டுவளையைச் சேர்ந்த ஆனந்த், வி.எஸ்.கண்ணன் ஆகியோர் தாக்கியதாக தெரிவித்துள்ளார். இதற்கு காரணமாக திட்டுவிளை இந்து பரதர் சமுதாய அம்மன் கோவில் பொருளா ளராக இருந்த ஆனந்த் செய்த முறைகேடு கள் தொடர்பாக கேள்வி எழுப்பிய முன் விரோதம் எனத் தெரிவித்துள்ளார். ஆனந்தும், கண்ணணும் கோவிலில் சாமி ஆடுவதுடன் இந்து வகுப்புவாத அமைப்பு களின் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. இந்நிலையில், திட்டமிட்டு சக்திவேல் மீது இருவரும் சேர்ந்து தாக்குதல் நடத்தி யுள்ளனர். பாதிக்கப்பட்ட சக்திவேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவரைச் சந்தித்த காவல்துறையினர், சக்திவேலுவிடம், தாங்கள் அளிக்கப் பட்டுள்ள புகாரில் கண்ணன் பெயர் இடம் பெற்றுள்ளது. கண்ணன் பெயரை நீக்கி விட்டு வேறொரு புகார் எழுதிக் கொடுங்கள் என நிர்ப்பந்தித்துள்ளனர். கோவில்களை தங்களது வருவாய்க்கும் வகுப்புவாத அரசியலுக்கும் பயன்படுத்தும் சூழலில் இதுபோன்ற புகார்களை அலட்சியம் செய்வதும் மாற்றி எழுதித் தருமாறு நிர்ப்பந்திப்பதும் தவறு செய்தவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கையாகவே அமையும். தவறிழைத்தவர்களை பாது காப்பதாகவும் அமையும் சக்திவேல் அளித்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும். கோவில் முறை கேடுகள் குறித்தும் புகாரில் தெரிவிக்கப் பட்டுள்ளதால் அதுகுறித்தும் விசாரிக்க வேண்டும்.