districts

தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அக்.12-ல் பேச்சுப் போட்டிகள்

திருச்சிராப்பள்ளி, செப்.24 - அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி திருச்சி மாவட்டத்தில் 12.10.2022 (புதன்) அன்று, திருச்சி மாவட்ட மைய நூலகக் கூட்ட அரங்கில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.  பள்ளி மாணவர்களுக்கான போட்டியானது அண்ணலின் அடிச்சுவட்டில், காந்தி கண்ட இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை, பாரத தேசமென்று பெயர் சொல்லுவோம் என்ற தலைப்பில் காலை 9.30 மணிக்கு தொடங்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கான போட்டியானது, வாழ்விக்க வந்த எம்மான், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், சத்திய சோதனை, எம்மதமும் நம்மதம், காந்தியடிகளின் வாழ்க்கையிலே, இமயம் முதல் குமரிவரை என்ற தலைப்பில் பிற்பகல் 1.30  மணிக்கு தொடங்கப்படும். திருச்சி மாவட்டத்தில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் ஒரு கல்லூரிக்கு ஒருவர் என கல்லூரி முதல்வரிடம் அனுமதி பெற்றும், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் முதன்மைக்  கல்வி அலுவலர் வாயிலாக பள்ளிக்கு ஒருவர் என அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியரிடம் அனுமதி பெற்று போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.  இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ.2,000 என்ற வகையில் வழங்கப்பட உள்ளது. இவை அல்லாமல் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப் பெறும் பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாகத் தேர்வு செய்து, ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2,000 வீதம் வழங்கப்படவும் உள்ளது.  இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000 மற்றும் மூன்றாம் பரிசு ரூ.2,000 என்ற வகையில் வழங்கப்பட உள்ளதாகவும், இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்று பயன்பெறுமாறும் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

;